புலம் பெயர்ந்தோர்க்கு உதவ மூட்டைகளை சுமந்து செல்லும் கூலித் தொழிலாளி!
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவும் வகையில் இந்திய அரசாங்கம் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்கியது முதல் முஜிபுல்லா அவர்களது மூட்டைகளை சுமந்து சென்று உதவி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் ஆதரவற்றோர்களுக்கு எத்தனையோ தனிநபர்கள் முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அவ்வாறு உதவுபவர்களில் ஒருவர்தான் 80 வயதான முஜிபுல்லா ரெஹ்மான். இவர் லக்னோ ரயில் நிலையத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களும் தினக்கூலிகளும் சொந்த ஊர் திரும்பி வரும் நிலையில் இவர்களது மூட்டைகளை இலவசமாக சுமந்து செல்கிறார் முஜ்புல்லா.
இந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவும் வகையில் இந்திய அரசாங்கம் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்கியது. அப்போது முதல் முஜ்புல்லா சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார். 80 வயதாகும் இவர் தினமும் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று ரயில் நிலையத்தை அடைகிறார். இந்தத் தள்ளாத வயதிலும் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் வேலை செய்கிறார்.
சிவப்பு நிற சீருடையில் முகக்கவசம் அணிந்தவாறு ரயில் வருவதற்காக காத்திருக்கும் இவரது வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
“புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவது என்னுடைய கடமை. இது முக்கியம் என்று நான் கருதுகிறேன். நிலைமை சீரானதும் என்னால் பணம் சம்பாதிக்கமுடியும். தற்போதைக்கு தேவை இருப்போருக்கு உதவ விரும்புகிறேன்,” என்று முஜிபுல்லா தெரிவித்ததாக 'தி லாஜிக்கல் இந்தியன்’ குறிப்பிட்டுள்ளது.
இவர் இலவசமாக மூட்டை முடிச்சுகளை சுமந்து செல்வதுடன் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றையும் கொடுத்து உதவுகிறார்.
இவரது செயலை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டியுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி,
“இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் தன்னலமற்ற உங்களது சேவை என்றென்றும் நினைவில் நிறுத்தப்படும்,” என்று பாராட்டியுள்ளார்.
பல்வேறு லாப நோக்கமற்ற நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், என்ஜிஓ-க்கள் போன்றவை கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து மீள உதவி வரும் நிலையில் முஜிபுல்லா போன்ற தனிநபர்களும் தன்னலமின்றி மக்களுக்கு உதவி வருகின்றனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA