சென்னை ஓமந்தூரார் மருத்துவமையில் கொரோனா விழிப்புணர்வு கொலு!
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து விவரிக்கும் வகையிலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கௌரவிக்கும் வகையிலும் கொலு வைக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டை நம்மால் மறக்கவே முடியாது. இந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றுடனேயே அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் நவராத்திரி பண்டிகையையும் கொரோனா பரவல் சூழலிலேயே கொண்டாட வேண்டியிருக்கிறது.
நவராத்திரி என்றாலே கொலு பொம்மைகள். மக்கள் கொலுப்படிகள் வைத்து விதவிதமான, வண்ணமயமான பொம்மைகளை அலங்கரித்து அழகாகக் காட்சிப்படுத்தி அசத்துவது வழக்கம். சிலர் புதுமையான கான்செப்டுகளை உருவாக்கி அதற்கேற்ப கொலு பொம்மைகளை காட்சிப்படுத்துவதுண்டு.
இது கொரோனா பெருந்தொற்று சமயம் என்பதால் இந்தத் தொற்றுப் பரவலைத் தடுக்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கொலு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடி வரும் மருத்துவர்களையும் சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாகவும் இந்த கொலு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சலீம் என்கிற நோயாளி மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மதசார்பின்மையை ஊக்குவிக்கும் வகையில் மாதிரி அமைப்பு ஒன்றை பரிசளித்துள்ளார். இதுவே கொலு அமைக்க உந்துதலாக இருந்துள்ளது.
இதில் முகக்கவசங்களை முறையாக அணியும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. இதில் ஹைலைட்டாக உலக உருண்டைக்கே முகக்கவசம் போடப்பட்டு `உலகமே முகக்கவசம் போட்டுள்ளது, நீங்களும் ஏன் போடக்கூடாது?’ என்கிற வரிகள் இடம்பெற்றுள்ளன.
கைகளை எப்படிக் கழுவவேண்டும் என்பதை விளக்கும் மாதிரிகள் மிகவும் எளிதாக பார்த்த உடனேயே புரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
மணமேடையில் மணமக்கள் அருகருகில் அமர்ந்து தாலி கட்டுவதே வழக்கம். ஆனால் இந்தத் தொற்று சமயத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருமண கோலத்தில் மணமகனும் மணமகளும் இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து மணக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இது அங்கு வருகை தருவோரை மிகவும் கவர்ந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திலும் நியாய விலைக் கடையிலும் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டியதன் அவசியம் பொம்மைகள் வடிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவமனையின் மாதிரி அமைப்பு, ஆக்சிஜன் வசதி, நடமாடும் மருத்துவ வாகனம், கொரோனா பராமரிப்பு மையம், யோகாசனங்கள், கொரோனா கால ஆரோக்கிய உணவு வகைகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தகவல் உதவி: நியூஸ்18 | படங்கள்: விகடன் மற்றும் நியூஸ்18