தமிழகத்தில் 7000-த்தை நெருங்கிய கொரோனா: 2 வாரத்துக்குள் அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி!
மக்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழக அரசு!
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர்,
”இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பல நடவடிக்கைகளை எடுத்தது கொரோனாவை கட்டுப்படுத்தினோம். மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினோம். மாவட்ட ஆட்சியர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தினோம்.
ஒருங்கிணைப்புக் குழு, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதேபோல் இந்த முறையும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். மக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் தொற்று பாதித்து இறந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா பரவல் விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் காய்ச்சல் முகாம்கள் அதிக அளவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும். சென்னையில் காய்ச்சல் முகாம்களை 400-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் 8.41 லட்சம் முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 8 லட்சம் முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
”2 வாரத்திற்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏப்.10 வரை 37.80 லட்சம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தமிழகத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது," என்றார்.
இதற்கிடையே, தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். அப்படி வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்," என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,711 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் 2,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.