விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; ‘கொரோனா டாக்டர் விநாயகர் சிலைகள்’
இந்த ஆண்டு ஸ்பெஷல் ‘பிள்ளையார் சிலைகள்’ என்ன?
விநாயக சதுர்த்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக சதுர்த்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் லாக்டவுனால் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் இந்தாண்டு அந்தளவு நடைப்பெறவில்லை. அதோடு பெரிய சிலைகள் பொது இடங்களில் வைக்க அனுமதி அளிக்கப்படுமா என்றும் தெரியாததால் சிலைகள் செய்யும் பணிகள் தொய்வடைந்துள்ளன.
பொதுவாக எல்லா ஆண்டும் விதவித விநாயகர் சிலைகள் மக்களின் கவனத்தை பெறும் அளவுக்கு உருவாக்கப்படும். கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், சந்திராயானுக்கு செல்லும் விநாயகர், லேப்டாப் உடன் பிள்ளையார் என அந்த ஆண்டுக்கு ஏற்றார் போல் தீம் பிள்ளையார் சிலைகள் வடிவமைப்பது வழக்கமாக இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு கர்நாடகாவில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. 2020-ன் முக்கிய அம்சமான ‘கொரோனா வைரஸ்’ தான் இந்த வருட விநாயகர் சிலைகளின் ஸ்பெஷல்.
“விநாயகர்; கொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களைப் போல் சித்தரித்து சிலைகளாக வடிவமைத்துள்ளனர் கர்நாடக சிலை தயாரிப்பாளர்கள். ஒரு பக்கம் கொரோனாவை அழிக்கும் சக்தியாக கணபதி சிலைகளும், மறுபக்கம் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை பார்க்கும் மருத்துவராகவும் பிள்ளையாரை வடிவமைத்துள்ளனர்.”
கொரோனாவை எதிர்த்த இந்த போராட்டத்தில் பெரும் பங்கு வகிக்கும் மருத்துவச் சேவை அளிப்போருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் வகையில் பிள்ளையார் சிலைகளை அவ்வாறு வடிவமைத்துள்ளதாக கர்நாடக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவராக பிள்ளையாரும், அவருக்கு மருத்துவ உதவி செய்யும் செவிலியராக மூஞ்சூறும், சுகாதாரப் பணியாளர்களாக உடன் இருப்பவர்களும் இருப்பது போல் தீம் அமைத்துள்ளனர்.
இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஏஎன்ஐ,
“நாம் கோவிட் எதிர்த்து போராடி வருகிறோம், இந்த கஷ்டமான சூழல் விரைவில் விலக விநாயகர் கடவுளை வணங்கிட மக்களை கேட்டுக் கொள்கிறோம். விநாயகரை மருத்துவராக வடிவமைத்து தயாரித்துள்ளோம்,” என சிலை செய்யும் ஸ்ரீதர் தெரிவித்தார்.
குறைந்த அளவில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யப்பட்டாலும், அவை கருத்து நிறைந்ததாக இருக்கும். குறிப்பாக கொரொனா தொடர்பான விஷயங்களைக் கொண்டு பிள்ளையார் சிலைகள் நாடு முழுவதும் தயாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: ஏஎன்ஐ