18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிகள் என்ன?
மே 1 முதல் ஆரம்பம்!
கடந்த சில வாரங்களாக இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு பரவும் தொற்று உருமாறி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நோய் தொற்று பரவுதலை சமாளிக்கமுடியாமல் மருத்துவத்துறையும், அரசாங்கமும் தவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு இப்போது இருக்கும் ஒரே ஆறுதல் தடுப்பூசி.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின், இரண்டு கோவிட் தடுப்பூசிகளைப் பயன்படுத்தி இந்தியா ஜனவரி மாதம் மக்களைத் தடுப்பூசி போடத் தொடங்கியது. இதுவரை, சுகாதார கட்டுப்பாட்டாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகளை செலுத்த மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.
இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காரணம், கொரோனா இரண்டாம் அலை குறிப்பாக இளம் வயதிரை அச்சுறுத்தத் தொடங்கி இருப்பது. இளம் வயதினர் இந்த முறை அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக நிபுணர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 2.75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா ஆரம்பத்தில் இருந்து இது ஒருநாள் அதிகபட்சம் ஆகும். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா அச்சம் காரணமாக பிரதமர் மோடி சமீபத்தில் தொடர்ச்சியான ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
இந்த சூழலில் மத்திய அரசு நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி,
மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இதை முன்னிட்டு சில விதிகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பேசிய பிரதமர் மோடி,
“அதிகபட்ச எண்ணிக்கையிலான இந்தியர்கள் மிகக் குறைந்த நேரத்தில் தடுப்பூசியைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிதான் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம். அதிகமான நோயாளிகளுக்கு தடுப்பூசி போட மருத்துவர்கள் ஊக்குவிக்க வேண்டும்," என்று பேசினார்.
இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சில முக்கியமான புதிய விதிகள்!
* மத்திய மருந்து ஆய்வகம் (சி.டி.எல்) வெளியிட்ட அளவுகளின்படி, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்களது மாதாந்திர அளவுகளில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். மீதமுள்ள அளவுகளை மாநில அரசுகளுக்கும் திறந்தவெளி சந்தையிலும் (தனியாருக்கு) வழங்கலாம்.
* உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளுக்கும் திறந்த சந்தையிலும் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கு முன்கூட்டியே விலைகளை அறிவிக்க வேண்டும்.
* இந்த விலையின் அடிப்படையில், மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள், தொழில்துறை நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கலாம்.
* மத்திய அரசு மையங்களில் தடுப்பூசிகள், இலவசமாக வழங்கப்படுகின்றன, தற்போது தகுதியுள்ளவர்களுக்கு - சுகாதார ஊழியர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவது தொடரும்.
* கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மையம் தனது பங்கிலிருந்து தடுப்பூசிகளை ஒதுக்கும். தடுப்பூசி வீணாவது ஒரு மாநிலத்தின் ஒதுக்கீட்டை பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை.
* தற்போது தகுதியுள்ளவர்களுக்கு இரண்டாவது டோஸ் முன்னுரிமை அளிக்கப்படும்.