கொரோனா தடுப்பூசி போட்ட இளம் பெண்னுக்கு அடித்த லக்: குலுக்கலில் ரூ.7 கோடி பரிசு!
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய யுக்தி!
அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக தடுப்பூசி இயக்கத்தை விரிவாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
எனினும் அமெரிக்கர்களிடம் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரியவந்தது. அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான 117 மில்லியன் அமெரிக்கர்கள் புதன்கிழமை நிலவரப்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு தரவுகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், குறைந்து வரும் நோய்த்தொற்றுகள் காரணமாக தடுப்பூசிகளை நாடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை சமீபத்திய வாரங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இதையடுத்து, அதனை மேம்படுத்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஓஹியோ மாகாண அரசு அதனை மேம்படுத்த தன் மாகாண மக்களுக்கு ஒரு இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி,
வாரந்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 1 மில்லியன் அமெரிக்க டாலர், பேஸ்பால் டிக்கெட் மற்றும் பீர் சலுகை போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்ட பின் ஓஹியோ மாகாணத்தில் தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அரசு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தநிலையில் இந்த வாரத்துக்கான குலுக்கல் லாட்டரி பரிசை ஓஹியோ கவர்னர் அறிவித்தார். அதில்,
முதல் வாரத்திற்கான குலுக்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்காவின் 22 வயது இளம் பெண்ணான அபிகைல் புஜென்ஸ்கே ஒரு மில்லியன் டாலர் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பெறப்போகும் பரிசுத்தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் ஆகும்.
புஜென்ஸ்கே தனது காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஓஹியோ கவர்னர் மைக் அவரை தொலைபேசியில் அழைத்து பரிசு பெற்ற விவரத்தை சொல்லியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இதைக்கேட்டு சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த புஜென்ஸ்கே சில நிமிடங்கள் கழித்து தனது பெற்றோரிடம் தகவலை சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்திருக்கிறார்.
முதல் அதிர்ஷ்டஷாலியாக பரிசு வென்றுள்ளது தொடர்பாக பேட்டியளித்துள்ள இளம் பெண் புஜென்ஸ்கே,
"என்னால் இதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இதற்கு முன் சிலருக்கு லாட்டரி பரிசு அடித்ததை செய்திகளில் படித்துள்ளேன். இப்போது நானே அந்த அதிர்ஷ்டசாலி என நினைக்கும்போது மகிழ்ச்சி. இது வேறு ஒருவருக்கு நடப்பதைப் போல உணர்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். என்னால் நம்ப முடியவில்லை," என்று நெகிழ்ந்துள்ளார்.
இதற்கிடையே, புஜென்ஸ்கேவை போல், இங்க்லூட்டைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜோசப் கோஸ்டெல்லோ என்பவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்காக பரிசு கிடைத்துள்ளது.
அவருக்கு, ஓஹியோ பொதுப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் கல்வி பயில கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்பது தான் அவருக்கு கிடைத்துள்ள லாட்டரி பரிசு. இதில் புத்தங்கங்கள் உட்பட படிப்புக்கு தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: மலையரசு