ராட்சத ‘கொரோனா’ அரக்கனை தீயில் எரித்த மும்பை மக்கள்!
உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவை அரக்கனாக சித்தரித்து ஹோலி தினத்தன்று எரித்துக் கொண்டாடினர் மும்பைவாலாக்கள்.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெகுவேகமாய் பரவிய இந்த வைரஸ் 146 நாடுகளை தாக்கியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கொரோனா பரவுதலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்கையில், கொடூர கொரோனாவை வீழ்த்தும் நோக்கில், மும்பைவாசிகள் கடந்த வாரம் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தில் கொரோனா வைரசின் உருவத்தை அரக்கன் வடிவத்தில் சித்தரித்து, தீயில் எரித்துக் கொண்டாடியுள்ளனர்.
ஹோலி என்றாலே நினைவுக்கு வருவது வண்ணங்கள். சிறியவர்கள், பெரியவர்கள் என்ற எந்த வயது வித்தியாசமுமின்றி ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறி கொள்ளஉதவும் ‘கலர்ஃபுல் ஃபெஸ்டிவல்’ ஹோலி. மஞ்சள், சிவப்பு, பச்சை, ஊதா, ஆரஞ்சு என வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் அப்பிவிடுவது, கலர் பவுடர் கரைத்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றிக் கொள்வது என அந்நாளே வண்ணமயமாக இருக்கும்.
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் ‘கொரோனா’-வின் அச்சத்தால், பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஹோலி கொண்டாட்டத்தினை தவிர்த்து விட்டனர். அதனால், கலர்ஃபுல் விழாவும் வழக்கத்தை களை இழந்தது.
இரண்டு நாள் ஹோலிப் பண்டிகையில், முதல் நாள் ‘ஹோலிகா தஹான்’ எனப்படும் ஹோலிகா அரக்கியை கொல்வது போன்ற நிகழ்வு நடைபெறும். ஹோலி பண்டிக்கை கொண்டாட்டத்தின் ஒரு பகுதி ‘ஹோலிகா தகான்’.
கடந்த வாரம் முடிந்த ஹோலி பண்டிகையில், மும்பையின் வொர்லி பகுதியைச் சேர்ந்த மக்கள் ‘கொரோனா’வை ஹோலிகாவாக சித்தரித்து எரித்துக் கொண்டாடியுள்ளனர்.
நீல நிறத்தில் அசுரன் போன்றே வடிவமைக்கப்பட்ட ராட்சத பொம்மையில் ‘கொரோனா’ என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அசுரனின் உருவத்தை பெரிய கொம்புகள் மற்றும் சூட்கேஸை சுமந்து செல்லும் பயங்கரமான பற்களை வைத்து வடிமைத்துள்ளனர். அதற்கு, அரக்கர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் பெயரை அடிப்படையாகக் கொண்டு ‘கொரோனாசூர்’ என்று பெயரிட்டுள்ளனர். கொரோனாசூர் என்றால் ‘கொலையாளி கொரோனா வைரஸ் அரக்கன்’ என்று பொருளாம்.
இச்சடங்கு செய்வதன் மூலம் தீமையினை தோற்றுவிட்டதாக நம்புகின்றனர். கொரோனாசூரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ வைரலாகி வருகிறது.