30 நிமிட யோகா; மூலிகை தேநீர்; 1 ஸ்பூன் ச்யவன்ப்ராஷ்...
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ட்விட்டரில் டிப்ஸ் தந்த மோடி!
உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கொரோனா நோய் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது.
இந்நோய்க்கு இன்னும் சிகிச்சை இல்லை என்றாலும் ஒரு வலுவான நோயெதிர்ப்புச் சக்தி, நோய் தாக்குதலை எதிர்க்கும் என்று பல சுகாதார நிபுணர்களும் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்நிலையில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நடவடிக்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, அவற்றை வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு மக்களை வலியுறுத்தி உள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மனித சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். கோவிட்-19க்கு மருந்து இல்லை என்ற சூழலில், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய முன்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது ஆகும்.
வாழ்வின் அறிவியலாக இருக்கின்ற ஆயுர்வேதம், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ள இயற்கையின் கொடைகளை எடுத்துக் காட்டுகிறது. ஆரோக்கிய வாழ்வை பராமரிப்பதற்கான ‘தினச்சார்யா' எனும் தினசரி சிகிச்சை முறை மற்றும் ‘ரிதுச்சார்யா' எனும் பருவ நிலைகளுக்கு ஏற்ற சிகிச்சை முறை ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் இருந்து முன்தடுப்பு பராமரிப்புக்கான ஆயுர்வேதத்தின் அறிவு உருவாகியுள்ளது.
ஒருவர் தன்னைப் பற்றி விழிப்புணர்வு பெறுதல் மற்றும் ஒரு தனிநபர் தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதனைப் பராமரித்தல் ஆகியவை ஆயுர்வேதத்தின் பாரம்பரிய நூல்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக மட்டுமே தவிர, கோவிட்-19க்கான சிகிச்சை அல்ல என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளை ட்விட்டரில் பகிர்ந்த மோடி,
‘‘ஆயுஷ் அமைச்சக நெறிமுறையைப் பார்த்து, அதை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்துவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நல்ல ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடையாளம்,'' என்று குறிப்பிட்டு பகிர்ந்தார்.
வெகு வேகமாய் கொரோனா வைரஸ் பரவும் இக்காலக் கட்டத்தில், உடலின் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பபை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தி உள்ள வழிமுறைகள் இவைகள்:-
1. நாள் முழுவதும் சூடான நீரைக் குடிக்கவும்.
2. நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் யோகா, பிராணயாம் மற்றும் தியானத்தை பயிற்சி செய்யவும்.
3. மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் பயன்படுத்தவும்.
நோய் எதிர்ப்புச் சக்தி ஊக்குவிக்கும் ஆயுர்வேத நடவடிக்கைகள்:-
1. தினமும் காலையில் 1 டீஸ்பூன் அல்லது 10 கிராம் சியவன்பிரஷ் எடுத்து கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை இல்லாத ச்யவன்ப்ராஷ் உட்கொள்ளுங்கள்.
2. துளசி, இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றால் செய்யப்பட்ட மூலிகை தேநீரை நாளொன்றுக்கு ஒன்று அல்ல இருமுறை பகிருங்கள். உங்களது சுவைக்கேற்ப வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.
3. ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை 150 மில்லி சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கவும்.
எளிய ஆயுர்வேத நடைமுறைகள்:-
1. மூக்கு பிரயோகம்: காலை மற்றும் மாலை இரு வேளைகளில் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை இருநாசிகளிலும் தடவவும்.
2. எண்ணெய் கொப்பளிக்கும் சிகிச்சை: 1 டீஸ்பூன் எள் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளியுங்கள். இதை குடிக்க வேண்டாம். 2 முதல் 3 நிமிடங்கள் வாயில் கொப்பளித்து துப்பியவுடன், வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.
வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் இருக்கையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:-
1.கொதிக்கும் நீரில் புதினா இலைகள் அல்லது ஓமம் போட்டு ஆவி பிடிக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதைச் செய்யவும்.
2. இருமல் அல்லது தொண்டையில் எரிச்சல் இருந்தால் நாட்டுச் சர்க்கரை / தேனுடன் கிராம்புப் பொடியைச் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடவும். இந்த நடவடிக்கைகள் சாதாரணமான வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு குணம் அளிக்கும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகள் பெறுவது நல்லது.
நோய்த்தொற்றுகளுக்கு எதிராக மனிதருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இந்த வைத்தியங்களுக்கு இருப்பதாக நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற வைத்தியர்கள் இந்த நடைமுறைகளை பரிந்துரைத்ததை அடுத்து அவற்றை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவ்வைத்தியர்களின் குழுவில் கோவையைச் சேர்ந்த பத்மஸ்ரீ வைத்தியர் பி.ஆர்.கிருஷ்ணகுமாரும் ஒருவர்.
கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ