தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: மக்கள் எப்படி தயாராக இருக்க வேண்டும்?
கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டவுடன் நீங்கள் உடனே பதற்றமடைந்து கடைகளுக்கு ஓடவேண்டாம்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில் தீவிர நோய் கண்காணிப்பு மற்றம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தொற்று நோய்கள் சட்டம், 1897ல் ஷரத்து 2ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் தொடங்கி 31.3.2020 வரை நடைமுறையில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
144 தடையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
- அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆம்னி பஸ்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
- அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன்கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும் வணிக வளாகங்களும் பணிமனைகளும் இயங்காது.
- அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றம் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும் தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
- தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றம் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசியப் பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
- அத்தியாவசியமான பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய கட்டிடப் பணிகளைத் தவிர பிற கட்டிடப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கான சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.
- வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றம் பிற இடங்களில் தங்கி இருக்கம் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு விற்பனை செய்யும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் வழக்கம் போல இயங்கும்.
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் தாமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு நோய் அறிகுறி வருகிறதா என்பதை கண்காணித்து அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா பிறருக்குப் பரவுவதை தடுக்க பெரும் உதவியாக இருக்கும்.
144 தடை உத்தரவால் கர்ப்பிணி பெண்கள் முதியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களின் போக்குவரத்திற்கும், விற்பனைக்கும் எந்தத் தடையும் இல்லை.
ஏன் தடை உத்தரவு?
கொரோனா நோய் பரவல் இந்தியாவிலும் தீவிரமாகி வருகிறது. மருந்தே கண்டுபிடிக்காததால் கொரோனவை கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்த நாடுகளே கண்ணீர் விட்டு வருகின்றன. இந்த நேரத்தில் சமூகத் தொலைவும், தனிமைப்படுத்தலும் அவசியம் என்பதை மக்கள் உணராமலேயே இருக்கின்றனர். நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் தொடர்ந்து 14 நாட்கள் அவர் தன்னை தனிமைபடுத்திக்கொண்டு இருக்க வேண்டியது அவசியம்.
இந்த விழிப்புணர்வு இன்றி தமிழக மக்கள் இருக்கின்றனர். மக்கள் ஊரடங்கின் போது முழு ஒத்துழைப்பு தந்த போதும் இன்று மக்கள் நடமாட்டமானது இருக்கத் தான் செய்கிறது. எனவே சட்டத்தை பயன்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே 144 தடை உத்தரவானது போடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடக் கூடாது, நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. அத்தியாவசியமான நிகழ்ச்சி என்றால் மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறையிடம் அனுமதி வாங்கி நடத்தலாம். ஒற்றுமையோடு இருப்போம் சுய தனிமைப்படுத்தல் மூலம் கொரோனாவை வெல்வோம்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி