பி.எப் உறுப்பினர்கள் KYC பூர்த்தி செய்ய அடையாளமாக ஆதார் ஏற்பு!
EPFO உறுப்பினர்கள், 3 மாத சம்பளத்திற்கு நிகரான தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ள அனுமதித்ததை அடுத்து கே.ஒய்.சி நடைமுறையை ஆன்லைனில் பூர்த்தி செய்ய ஆதார் அட்டை ஆதாரமாக தரலாம்.
தொழிலாளர் ஷேமநல நிதியை நிர்வகிக்கும் இ.பி.எப்.ஓ, (EPFO) உறுப்பினர்கள், கே.ஒய்.சி (KYC) நடைமுறையை பூர்த்தி செய்ய, தங்கள் பிறந்த தேதியில் மாற்றம் செய்ய ஆதாரமாக ஆதார் அட்டையை ஆன்லைனில் சமர்பிப்பதை ஏற்றுக்கொள்ளும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"கொரோனா பாதிப்பின் நடுவே, ஆன்லைன் சேவைகளின் அணுகலை நீட்டிக்கும் வகையில், பி.எப் உறுப்பினர்கள், தங்கள் நிரந்தர கணக்கு எண் ( யூஏ.என்) கேஒய்சி பூர்த்தி செய்வதாக இருக்கும் வகையில், பிஎப் ஆவணங்களில் பிறந்த தேதியை திருத்த வழி செய்யும் வகையில், கள அதிகாரிகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட உத்தரவை பி.எப் அலுவலகம் பிறப்பித்துள்ளது’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருத்தம் மேற்கொள்ள, ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள பிறந்த தேதி, ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு தேதிகளுக்கும் இடையிலான வேறுபாடு மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும்.
பிஎப் உறுப்பினர்கள், திருத்தக் கோரிக்கையை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.
உறுப்பினர்களின் பிறந்த தேதியை உடனடியாக, தனித்தனமையான அடையாளத்திற்கான இந்திய ஆணையத்திடம் (UIDAI) சரி பார்க்க இது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் உள்ள பிஎப் உறுப்பினர்கள், பிஎப் முன்பணம் கோரி விண்ணப்பிக்கும் போது, ஆன்லைன் கோரிக்கையை விரைந்து பரிசீலிக்குமாறும் கள அதிகாரிகளுக்கு பிஎப் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக, பிஎப் உறுப்பினர்கள், மூன்று மாத சம்பளத்திற்கு நிகரான தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என கடந்த மாத இறுதியில் அனுமதி அளிக்கப்பட்டது.
எனினும், இந்த வசதி கேஒய்சி பூர்த்தி செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்நிலையில், தற்போதைய உத்தரவு உறுப்பினர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண் கேஒய்சி பூர்த்தி செய்திருப்பதை உறுதி செய்ய உதவும்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்