‘மீட்புப்பணியில் ஈடுபட்ட எங்கள் ஊழியர்களை மதிப்புடன் நடத்துங்கள்’ - ஏர் இந்தியா கோரிக்கை
கொரோனா பாதித்த வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா குழுவினரை, குடியிருப்பு சங்கங்கள் மோசமாக நடத்தப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் பரவிய சீனாவின் வூஹான் மாகாணத்தில் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் மிலன், ரோம் நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
எனினும், பல்வேறு குடியிருப்பு சங்கங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் ஏர் இந்தியா ஊழியர்களை விலக்கி வைக்கும் செயலில் ஈடுபடுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கப்படுவதாகவும், பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று வந்த காரணத்தினால் மட்டும் காவல்துறை அழைக்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படி ஊழியர்களைத் தடுக்கும் வகையில் செயல்படுபவர்கள், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அன்பானவர்கள், குழந்தைகள், ஏர் இந்தியா ஊழியர்களால் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பதை மறந்து விடுகின்றனர் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படித் தீரத்துடன் செயல்பட்டவர்களில், ஐந்து வயது குழந்தைக்கு தாயான ஸ்வாதி ராவலும் ஒருவர். ரோமில் சிக்கியிருந்த 265 இந்தியர்களை மீட்டு வந்த ஏர் இந்தியா777 விமானத்தை இவர் இயக்கினார்.
இந்த தீரச்செயலை பத்திரிகையாளர் விஷ்ணு சோம் பாராட்டியுள்ளதோடு, குடியிருப்பு சங்கத்தினரின் அறியாமையை சுட்டிக்காட்டியுள்ளார். நடிகரும், செயற்பாட்டாளருமான ஸ்வாரா பாஸ்கரும், இந்த செயலைக் கண்டித்துள்ளார்.
"இது வெட்கக்கேடானது. இவர்கள் பால்கனியில் இருந்து கைத்தட்டுவார்கள். ஆனால் நாட்டைக் காக்க உயிரைப் பணயம் வைத்து உழைப்பவர்களை இப்படி மோசமாக நடந்துவார்கள்,” என அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பீதிக்கு மத்தியில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் தீரச்செயலில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா ஊழியர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறும் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஏர் இந்தியா தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
டென்சின் நோர்ஜோம் | தமிழில்: சைபர்சிம்மன்