ஆன்லைனில் கோயில் வழிபாடு, இ-ஹோமம், பரிகாரப் பூஜைகள் அதிகரிப்பு!
கொரோனா உள்ளடங்கால் ஒட்டுமொத்த நாடே முடங்கி, பலரால் கோயில்களுக்கு சென்று வழிபட முடியாததால், வீட்டிலிருந்தபடியே கடவுளை பிரார்த்தனை செய்ய உதவுகிறது சில ஆன்லைன் வழிபாட்டுத் தளங்கள்.
வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. இந்தப் பயணத்தில் ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டாலும் ஜாதி, மத பேதமின்றி பலரும் முதலில் நாடுவது இறையருளை மட்டுமே. மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டாலும் கோவிலுக்குச் சென்றால் மனம் நிம்மதியடையும் என்பது பலரது திடமான நம்பிக்கை.
பணம், பொருள், வீடு, கல்வி, உடல்நலம், வாழ்க்கைத் துணை, குழந்தைப் பேறு, சிறந்த வேலை என மக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடவுளை வழிபடுவது வழக்கம்.
கோயிலில் தெய்வத்தின் முன் பலர் ஒன்றுகூடி வழிபட்டாலும் ஒவ்வொருவரின் கோரிக்கைகளும் மாறுபடும். ஆனால் இன்று உலக மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது கொரோனா நோய்தாக்கம். இன்று இந்தக் கொடிய நோய்தொற்றில் இருந்து பாதுகாக்கப்படவேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் ஒரேகுரலில் வேண்டுகின்றனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் தாக்கம் அதிக வீரியத்துடன் உலகம் முழுவதும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து மக்களிடம் வலியுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் வல்லரசு நாடுகளையே நடுங்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய நோய்தொற்றால் தினமும் எண்ணற்ற உயிர்கள் மடிந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் மிகவும் வேதனையடையச் செய்கிறது. அச்சத்தை ஏற்படுத்துகிறது. என்ன நேர்ந்துவிடுமோ என்கிற பதட்டம் மனதில் நிறைந்துள்ளது.
இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் துளிர்விட்டு நம் மனதை அமைதிப்படுத்த இறைவழிபாடு உதவும். ஆனால் ஒட்டுமொத்த நாடே முடக்கப்பட்டுள்ளதால் கோயில்களுக்கு சென்று வழிபடுவது சாத்தியமில்லாமல் போனது. வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலிருந்தபடியே கடவுளை பிரார்த்தனை செய்ய உதவுகிறது சில ஆன்லைன் வழிபாட்டுத் தளங்கள்.
ஆம்! ஆன்லைனில் வழிபாடுத் தளங்கள் பல உள்ளன. இந்தப் பகுதியில் பிரத்யேகமாக பல நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய ஆன்லைன் வழிபாட்டுத் தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக இந்தப் பிரிவில் செயல்படும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பரிகாரப் பூஜைகள், ஹோமம், இ-அர்ச்சனை, புனித யாத்திரை, கோயில்களில் தரிசன டிக்கெட் புக்கிங், புனித கோயில்களில் இருந்து பிரசாதம் வழங்குதல் என ஆன்மீகம் தொடர்பான முழுமையான சேவையை வழங்குகிறது ‘27 மந்த்ரா’ நிறுவனம்.
“நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் மெய்நிகர் வடிவில் வழங்கப்படும் ஆன்மீகச் சேவைகளுக்கான தேவை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மிருத்யுஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியவற்றிற்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளது,” என்கிறார் 27 மந்த்ரா நிறுவனர் அஜய்.
இந்த ஸ்டார்ட் அப்’பின் வாடிக்கையாளர்கள் பூஜைகளை மெசெஞ்சர் அல்லது வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் பார்க்கலாம். அவர்கள் விரும்பும் பூஜை அல்லது ஹோமத்தை புரோகிதர் அவரது அறையில் இருந்தவாறே மந்திரங்களை உச்சரித்தபடி சிறப்பாக செய்து முடிப்பார் என்கிறார் அஜய்.
அதேபோல் VR Devotee நிறுவனத்தின் இணை நிறுவனரான அஷ்வனி கார்க் கூறும்போது,
“நாடு முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் மக்களால் கோயில்களுக்கு செல்லமுடிவதில்லை. இதனால் மக்கள் எங்கள் தளத்துடன் இணைந்திருக்கும் அளவு 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது,” என்றார்.
“இதற்கு முன்பு எங்கள் குழுவினர் கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜைகளை நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதியளிக்குமாறு கோரிக்கை வைப்பார்கள். ஆனால் தற்போது வழிபாட்டுத் தலங்கள் எங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பக்தர்கள் ஆன்லைனில் பூஜைகளைக் கண்டு வழிபட உதவுமாறு கேட்டுக்கொள்கின்றன,” என்றார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சேவையளித்து வரும் வேதிக்ஃபோக்ஸ் (Vedicfolks) நிறுவனம் வேதபாடசாலைகள் அமைத்து வேதங்களில் பயிற்சியளிக்கிறது.
இந்நிறுவனம் தற்போது பிரத்யேகமாக புரோகிதர்களை நியமித்து பூஜைகளையும் ஹோமங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய சேவைகளை வணிக ரீதியாக கவனம் செலுத்தாமல் மக்கள் நலனை மையப்படுத்தி மேற்கொள்கிறது.
“தற்போதுள்ள லாக்டவுன் காலகட்டத்தில் மக்கள் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்வதற்காக தொடர்புகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மகாமிருத்யுஞ்சய ஹோமம், ஹனுமான் சாலீஸா, தன்வந்திரி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகளை இலவசமாக மக்கள் நலன் கருதி மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் வேதிக்ஃபோக்ஸ் நிறுவனர் நவ்னீத் கிருஷ்ணா.
இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற வழிபாட்டு முறை சமீப காலத்தில் அறிமுகமாகியிருப்பினும் வெளியில் செல்ல இயலாதவர்களுக்கு இந்த அனுபவம் தற்போது ஒரு வரப்பிரசாதமே.
பெரும்பாலும் வெளியில் கோயில்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் இருக்கும் முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் போன்றோர் இத்தகைய தளங்களின் பயனர்களாக இருந்த நிலையில் தற்போது வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் இத்தளங்கள் பலருக்கு அறிமுகமாகி வருகிறது. இவற்றின் பயனர் தொகுப்பும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
மொத்தத்தில் உலகையே உலுக்கி வரும் இந்தக் கொடிய நோயின் வீரியம் குறைந்து விரைவில் பிணியில்லா வாழ்க்கையை மக்கள் வாழவேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையாக உள்ளது.
கட்டுரை: ஸ்ரீவித்யா