வீட்டு வாசலில் மனைவி, குழந்தைகள் விட்டு விலகி டீ அருந்திச் சென்ற கொரோனா வாரியர்!
தன் வீட்டு வாசலில் அமர்ந்து தேநீர் பருகும் இவரது புகைப்படத்தினை ஒரு மாநிலத்தின் முதல்வரே டுவிட்டரில் பகிர்ந்து பெருமையாக கருதியுள்ளார், யார் இவர்?
அழகிய மாலைப் பொழுதில், கதிரவன் இளமையான நிலவொளிப் போன்று தன்மையாக கதிர்களை வீசிட, இளவெயில் முகத்தில் முத்தமிட, நிழலின் மடியில் அமர்ந்து ஒரு கோப்பை தேநீர் பருகும் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ‘சன் கிஸ்டு’ எனும் ஹேஷ்டெக் கீழ் பகிரப்படும். ஆனால், அவைகளுள் ஒன்றல்ல, இது! ஏனெனில், இது பாசப்போராட்டத்தின் சாட்சி. ஆம்,
கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து மக்களை காப்பாற்றும் மருத்துவரான இவர், 5 நாள் தொடர் பணிக்கு பிறகு குடும்பத்தைக் காண வீட்டிற்கு வந்தபோதும் குடும்பத்தினருடன் அருகிலமர்ந்து பேசமுடியாமல் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அவர்களை ஏக்கமாக காணும் காட்சியின் நிழற்படம்.
மனிதயினத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுவரும் கொரோனா வாரியர்களான மருத்துவர்களும், செவிலியர்களும் நேரம் காலம் பாராது, குடும்பத்தை எண்ணாது தன்னலமின்றி சேவை செய்து வருகின்றனர்.
இப்புகைப்படத்திலிருக்கும் மருத்துவரான சுதிர் குமார் டெஹாரியா, மத்திய பிரதேசத்தின் பேபால் மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி.
மாவட்டத்தின் கொரோனா வார்டுக்கு முழு பொறுப்பாளராகியிருக்கும் அவர், 5 நாட்களாக மருத்துவமனையிலே இருந்து பணிப்புரிந்துள்ளார். வீட்டிற்கே செல்லாமல் பணிபுரிந்த சுதிர், குடும்பத்தினரை காண வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், கொரோனாவின் தீவிரத்தை நன்கு அறிந்த சுதிர் வீட்டிற்குள்ளும் செல்லவில்லை, குடும்பத்தினரையும் நெருங்கவில்லை.
‘சமூக விலகலை' கடைபிடித்து வரும் குடும்பத்தினரிடமிருந்து 2 மீட்டர் தொலைவில் வீட்டின் வாசலில் இருந்த குட்டிச்சுவரின் மீது அமர்ந்தார் சுதிர். ஒரு கப்பில் தேநீர் பருகியப்படி, மனைவி, மகள் மற்றும் மகனை அவர் பார்க்கும் புகைப்படத்தினை அம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் கவுகான் அவரது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்தார்.
“போபால் மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சுதிர். 5 நாட்களாக மருத்துவமனையிலே தங்கி பணிபுரிந்துள்ளார். குடும்பத்தினரை காண வீட்டிற்கு சென்றபோதிலும், அவர்களை வாசலிலே அமர்ந்து பார்த்துவிட்டு, தேநீர் பருகினார். டாக்டர் சுதிர் மற்றும் அவரை போன்ற ஆயிரக்கணக்கான கொரோனா வாரியர்களுக்கு வாழ்த்துகள். உங்களை எண்ணி பெருமை அடைகிறோம்,” என்று டுவீட்டிருந்தார்.
போபாலில் (7.4.20) மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் டெஹாரியா தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான முறை ரீடுவிட் செய்யப்பட்ட இப்புகைப்படத்தை முதல்வரை தவிர, பல பிரபல டுவிட்டராட்டிகளும் பகிர்ந்து, இவர்களை போன்று செயல்படுவோர் சூப்பர் ஹீரோக்கள் என்று பெருமைப்படுத்தி அழைத்தனர். ஆனால், அது மட்டும் போதாது. வீட்டிலே இருந்து சமூக விலகலை கடைப்பிடிப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றியாகயிருக்கும். ஏனெனில், போபாலின் நிலையறிந்தும் சுதிர்'கள் நமக்காக பணியாற்றி வருகிறார்கள்.
தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் குடும்பங்களைத் துறந்து மக்களுக்காக மருத்துவமனையே கதி எனக் கிடந்தது கொரோனா வைரஸ் பணியில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு மருத்துவர்களும், செவிலியர்களும் ரியல் ஹீரோக்களே!