குடும்பத்தாரின் இறப்பு, திருமணம், மருத்துவ அவசரத்துக்கு வெளியூர் செல்ல அனுமதி!
ஊரடங்கு சமயத்தில் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பவர்கள் சிறப்பு அனுமதி பெற சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அவசரத் தேவைக்காக வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள் சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு, தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடெங்கும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, மக்கள் வீட்டிலேயே இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தவிர்க்க இயலாத அவசரத் தேவைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தேவை உள்ளவர்கள் அதற்காக விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகைய அனுமதி வழங்குவதற்காக சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம், மருத்துவ அவசர நிலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னைக்கு வெளியே அல்லது மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள், சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் மூலம், தொடர்பு கொண்டு அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ் அப் எண்: 75300 01100
இமெயிலில் தொடர்பு கொள்ள: [email protected]
சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்கள், அதற்கான ஆதாரங்கள் மற்றும் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்றும், இது அவசரத் தேவைக்கானது மட்டுமே என்றும் வழக்கமான பணிகளுக்கு பொருந்தாது என்றும் காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: சைபர்சிம்மன்