மேற்குத் தொடர்ச்சி மலை அடியில் தேனி தென்னந் தோப்புக்குள் ஐ.டி நிறுவனம்!
கொரோனா அச்சத்தால் குளுகுளு ஏசி ஹைடெக் அலுவலகத்தை இயற்கை கொஞ்சும் கிராமத்துக்கு இடம்மாற்றிய பெங்களுரு நிறுவனம்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கையாக, பெரும் ஐடி நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிப்புரிய அறிவுறுத்தியுள்ளது. இப்படியொரு பதட்டமான சூழலில், பெங்களூரைச் சேர்ந்த ஐ.டி நிறுவனம் ஒன்று அவர்களது அலுவலகத்தையே, தென்னந்தோப்புக்கு மாற்றியுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘இன்ஸ்டா கிளீன்’, கொரோனா வைரசின் அச்சத்தால், அவர்களது இருப்பிடத்திலிருந்து 450கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள தென்னந்தோப்பிற்குள் நிறுவனத்தை மாற்றியுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தம்பட்டி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் செம்மண் தரையில் போர்வை விரித்து, கையில் மடிக்கணிணியுடன் சிலர் அமர்ந்தும், தலையணையில் படுத்துக்கொண்டுமாய் பணியை இயற்கை எழிலுடன் மேற்கொள்கின்றனர்.
அலங்கரிக்கபட்ட அறையில் குளுகுளு ஏசியுடன் ஐடி மக்களின் வாழ்வு என பெயரடுத்து வைத்திருக்கும் ஹைடெக் வாழ்க்கைக்கான சாதனங்கள் எதுவுமின்றி இயற்கை கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இதமான காற்று, பச்சைப் புல்வெளிகள் என்று இயற்கையை ரசித்தவாறு இந்த குழுவினர் உற்சாகத்துடன் பணிப்புரியும் புகைப்படங்கள் இணையத்தில் பரவ வைரலாகினர்.
“பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. வைரஸ் தாக்கிவிடுமோ என்கிற அச்சமே பணிபுரிய முடியவில்லை. வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணிபுரிவது மேற்கொண்டு பயத்தைதான் ஏற்படுத்தும். அதனால், வொர்க் ஃப்ரம் ஃபார்ம் என்று தோட்டத்தில் அலுவலகத்தை மாற்றினோம்.
எங்களது நிறுவனத்தில் 20பேர் பணிபுரிகின்றனர். அதில் 8பேர் கொண்ட டீம்மை மட்டும் அழைத்து கொண்டு எனது சொந்த ஊரில் உள்ள எங்கள் தோட்டத்துக்கு வந்தேன். இங்கு அமைதியான சூழலில் பணிபுரிவது எங்களது லைஃப் ஸ்டைலையே மாற்றிவிட்டது.
“பெங்களூரில் என்னுடைய நாள் 11 மணிக்கு தான் தொடங்கும். இங்கு, 7-8-9 என்று ஒரு நாளை பிரித்து வைத்துள்ளோம். 7மணி நேர பணி. 8 மணி நேர தூக்கம், 9 மணி நேரம் ஊர் சுற்றல் என்று பிரித்துள்ளோம்,” என்றார் இன்ஸ்டாகிளீனின் நிறுவனர் அரவிந்த்.
உண்மையில், அவர்கள் பணியே இயற்கை சார்ந்தது தான். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இந்தியாவின் முதல் ஈகோ ப்ரெண்ட்லி செயலியை உருவாக்கி உள்ளது. ‘இன்ஸ்டா க்ளீன்’ எனப்படும் அச்செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம் தேவையற்ற மின்னஞ்சல்கள் மெயில் ஐ.டி-க்கு வராமல் தடுக்க முடியும்.
பெரும்பாலும் மெயில் ஐடி-க்கு அவசிய மின்னஞ்சல்கள் வருவதை காட்டிலும், மார்க்கெட்டிங்காக நிறுவனங்களின் தரப்பிலிருந்து அனுப்பபடுக்கின்ற மின்னஞ்சல்களே அதிகம். அவற்றை இன்ஸ்டாகீளின் ஆப், செய்திமடல்கள், ஸ்பேம்கள், லேபிள்கள், அனுப்புநர்கள், அளவு, நேரம் ஆகியவற்றை அடிப்படை கொண்டு தேவையற்ற அஞ்சல்களை தானாக வரிசைப்படுத்திக் கண்டறிகிறது.
மேலும் அவற்றை அன்சப்ஸ்கிரைப் அல்லது டெலீட் செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிளிக்கில் தேவையற்ற மின்னஞ்சல்கள் மெயில் ஐடி-க்கு வருவதை தடுக்கலாம். இதனால், மெயில் ஐடி மட்டும் வரிசையாக அழகாகுவதில்லை, சுற்றுப்புறமும் பாதுக்காக்கப்படுகிறது. ஆம், ஒரு இ-மெயில் மூலமாக 5 கிராம் அளவிற்கு மனிதன் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றான்
“அடுத்து 4 அல்லது 5 ஆண்டுகளில் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினையாக ‘டிஜிட்டல் மாசுபாடு’ உருவெடுக்கும்.
ஏனெனில், நீங்கள் வாட்சப்பில் ஒவ்வொரு முறை ஒரு மெசேஜ் அனுப்பும் போதும், ஃபேஸ்புக்கை பயன் படுத்தும் போதும், யூடியுப்பில் பார்க்கும் போதும், ஒரு மெயில் அனுப்பும் போதும் கார்பன் தடத்தை உருவாக்கும். இவையனைத்தையும் செயல்படுத்த சர்வர் வேண்டும். சர்வரை செயல்படுத்த மின்சாரம் தேவை. அதற்கு மின்சார நிலையத்தை நாடுகிறது. அங்கிருந்து ஒவ்வொரு முறை நாம் மெயில் அனுப்பும்போதும் கார்பன்-டை- ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.
ஒரே ஒரு இ-மெயில் அனுப்புவதற்கு மட்டும் 5 கிராம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. ஒரு மனிதன் அவனது வாழ்நாளில், 1.5 டன் முதல் 1.8டன் அளவிலான கார்பன் டை ஆக்சசைடை வெளியிடுகிறான்.
அதற்காக இ-மெயில் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. ஆனால், ஒரு நாளுக்கு நமக்கு வரும் இ-மெயில்களில் பயனுள்ளதாய் இருப்பது குறைவு தான். மார்க்கெட்டிங்காக அனுப்பப்படும் மெயில்களே அதிகம். அவற்றை இன்ஸ்டா கிளீன் ஆப் மூலம் தவிர்த்துவிடலாம். அதனால் தான் அதற்கு இன்ஸ்டாகிளீன் என்று பெயரிட்டோம், என்கிறார் இன்ஸ்டா கிளீனின் நிறுவனர் அரவிந்த்.
நான்கு சுவருக்குள் பணிபுரிந்து கொண்டு, ஓட்டல் சாப்பாட்டை உண்டு வாழ்ந்த இளம் டெக்கீகள், இளநீர், களி, கூழ் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு மண்வாசத்துடன், பணிபுரிவது அவர்களுக்கு புது புத்துணர்ச்சியை அளித்துள்ளது என்கின்றனர்.
தென்னந்தோப்புக்குள் பணிபுரிய தொடங்கியதிலிருந்து அவர்களது கிரியேட்டிவ் திறனும் அதிகரித்துள்ளது என்றும் கூறுகின்றனர். ஏனெனில், ஆப்-ன் அடுத்த அப்டேஷனில் செயலியை டவுன்லோடு செய்து, மரம் நட விருப்பம் தெரிவித்தால், அதை இவர்களே செய்யும் வசதியை இணைத்துள்ளனர். இந்த யோசனையை, இவர்கள் தென்னந்தோப்பில் அமர்ந்துதான் செயல்படுத்தியுள்ளனர்.
அதாவது, ஆப்பில் கேம் போன்ற ஒரு அம்சத்தினை இணைத்துள்ளனர். அதன்படி, ஆப்பை பயன்படுத்தி டெலீட் செய்யப்படும் ஒவ்வொரு இ-மெயிலுக்கும் ‘ஈகோ-காயின்களை’ சம்பாதிக்கலாம். முதல் 1000 காயின் போனசாக வழங்கப்படும். அடுத்தடுத்து மெயிலை டெலீட் செய்வதன் மூலமாகவும், பிறருக்கு ஆப்பினை பரிந்துரை செய்வதன் மூலமாகவும் காயின்களை சேகரிக்கலாம். 1000காயின்கள் சேகரித்தவுடன், ஒரு மரத்தை நடுவதற்கு அதை பயன்படுத்தலாம். மரநடும் பணியை அலுவலகத்தினரே செய்து முடிப்பர்.
இதுவரை 6 லட்சத்து 38 ஆயிரம் பேர் இன்ஸ்டாகிளீளை டவுன்லோடு செய்துள்ளனர்.
ஈகோ காயின் வசதியை இணைத்த ஐந்து நாள்களில், சுமார் 3,000 பேர், மரம் நட விருப்பம் தெரிவித்துள்ளனர். தேனி போன்ற இயற்கைச் சூழல் மிகுந்த பகுதி யில் ஐ.டி நிறுவனத்தை செயல்படுத்தியதில் ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், தேனி டூ சென்னை சென்று பணிபுரியும் இளைஞர்கள், ஊரிலே பணிபுரிவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டு வருவதாக தெரிவித்தார் அரவிந்த்.
இப்படியொரு இடம் தான் அலுவலகம் என்றால் யாருக்குதான் பணிபுரிய ஆசை வராது?!
ஆப் டவுன்லோட் செய்ய :- Instaclean