ஊரடங்கால் ஜலந்தர், கங்கை நதியில் நடந்த அதிசயம்!
ஊரடங்கு உத்தரவு மனிதர்களை முடக்கிப் போட்டிருந்தாலும் இயற்கைக்கு மறுமலர்ச்சி தரும் விதமாக ஜலந்தர், கங்கையில் நடந்திருக்கிறது அதிசயம்.
உலகெங்கும் கொரோனா யுத்தம்! மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என ஊரடங்கு சட்டம்! கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை என்று கெடுபிடி காட்டும் மத்திய, மாநில அரசால் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர் மக்கள். கொரோனா நோய் பரவலைத் தடுக்க சமூக விலகலே தீர்வு என்பதால் உலக நாடுகள் முதல் உள்ளூர் வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசியத் தேவைக்கான வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் இயங்க அனுமதியில்லை. பணிக்குச் செல்வோர் வீடுகளில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. மார்ச் 25 முதல் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் ஊரடங்கால் சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் வெறிச்சோடி இருக்கின்றன.
ஓய்வின்றி இருந்த சாலைகள் தற்போது காற்று வாங்கிக் கொண்டு ஜாலியாக இருக்கின்றன. வாகன சத்தங்கள் இல்லாததால் வனவிலங்குகள் துள்ளாட்டம் போடுகின்றன. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை இல்லாததால் மக்களுக்கும் மாசில்லாத காற்று பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஊரடங்கால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தாலும் எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நாம் மட்டும் கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக் கொள்ளவில்லை, இயற்கையும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. காற்று மாசால் மறைந்து போன இமயமலை அழகு மீட்கப்பட்டிருக்கிறது. கழிவுகளால் களங்கப்படுத்தப்பட்டிருந்த கங்கை நதி தெளிந்த நீரோடையாகி இருக்கிறாள்.
பஞ்சாப் மாநில ஜலந்தர் நகரம் இமாச்சலப் பிரதேச எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதி மக்கள் இந்த மலைத்தொடரின் அழகை தங்கள் ஊரில் இருந்து பார்த்து ரசித்திருக்கின்றனர். ஆனால் அதிகரித்த காற்று மாசு காரணமாக அந்த மலைத்தொடர் வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது இவர்களால். அருகில் இருந்தும் மாசு காரணமாக இவர்கள் கண்ணை விட்டு மறைந்தது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக ஜலந்தர் பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் காற்று மாசு பல மடங்கு குறைந்திருக்கிறது. இதனால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு ரம்மியமான தோற்றம் வெளிப்பட்டிருக்கிறது. இந்த அழகிய பனிமலையின் அழகைக் கண்டு அங்கிருக்கும் மூத்த குடிமக்கள் உற்சாகமடைந்துள்ளனர். பழைய நினைவுகளை இன்றைய தலைமுறையினருடன் பகிர்ந்து வருகின்றனர். மூத்தவர்களே இப்படி மகிழ்ந்தால் 21வது சென்சூரியன்ஸ் சும்மாவா செல்பியாக எடுத்து சமூகவலைதளங்களில் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
இதே போன்று கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகளும் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்கூடங்களில் இருந்து வெளியேறி ஆற்றில் கலக்கும் கழிவுகள் முற்றிலுமாக கலப்பது நின்றுபோயுள்ளது. இதனால் கான்பூரில் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 40-50 சதவிகித அளவுக்கு மேம்பட்டுள்ளதாக இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வாரணாசி ஐஐடியின் பேராசிரியர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதலால் நடக்கும் இயற்கை மாறுதல்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறது. அதற்காக ஊரையே முடக்கி வைக்க வேண்டியதில்லை, இதில் இருந்து நமக்கும் இயற்கைக்கும் சாதகமான ஒரு தீர்வை எதிர்காலத்தில் எடுக்கலாம் என்பதற்கான ஒரு சிறு உதாரணமே ஜலந்தர் மற்றம் கங்கையில் நடந்துள்ள அதிசயங்கள்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி