'கொரோனா வைரஸ்' இந்தியா, சீனா ஸ்டார்ட் அப் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நிதி முதலீடுகள், தொழில் சூழல் மற்றும் பொருளாதாரததின் மீதான தாக்கமும் தீவிரமாக உள்ளது.
சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது. COVID-19 என குறிப்பிடப்படும் இந்த வைரஸ், வூஹானில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகக் கருதப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்று, உலகப் பொருளாதாரத்தை உலுக்கி, அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா குழுமம், கொரோனா வைரஸ், பொருளாதாரத்தின் மிகுந்த பாதிப்பை உண்டாக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவுவது, அலிபாபா நிறுவனத்திற்கு உடனடியாக பல சவால்களை உண்டாக்கியிருப்பதாக குழும சி.இ.ஓ டேனியல் ஜாங் கூறியுள்ளார்.
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அலிபாபா பங்குகள் அண்மையில் 2.4 சதவீதம் சரிந்தது. இந்த வைரஸ், வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை மாற்றி இருப்பதாகவும், உணவுப் பொருட்கள் விற்பனை அதிகரித்து, துணிகள், மின்னணு பொருட்கள் விற்பனை சுணக்கம் கண்டிருப்பதாகவும் அலிபாபா நிறுவனம் கூறியதாக அல்ஜஸிரா தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.
பயண பாதிப்பு
மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால், கடைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. மேலும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான பயணங்களையும் இது பாதித்துள்ளது. வர்த்தகப் பயணங்களும் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிதி திரட்டும் முயற்சியும் சுணக்கம் காணலாம் என அஞ்சப்படுகிறது.
“நிறுவனவர்கள், பெரும்பாலும் நிதி திரட்டுவதற்காக சிங்கப்பூர் மற்றும் சீனா செல்வது வழக்கம். ஆனால், ஜனவரி முதல் அனைத்து பயணத் திட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. நிதி திரட்டுவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் முடங்கியுள்ளன,” என்று ’சி’ சுற்று நிதி திரட்டும் முயற்சியில் ஈட்டுள்ள நிறுவனர் ஒருவர் கூறுகிறார்.
சீனா முதலீட்டாளர்கள் 2016 முதல் இந்தியாவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய ஸ்டார்ட் அப்களில் சீன முதலீடு, 2016 ல் 668 மில்லியன் டாலராக இருந்தது 2018 ல், 5.6 பில்லியன் டாலராக உயர்ந்தது.
“சீன முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப்களுக்கு நிதி கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை. களத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை. வங்கிப்பணிகள் முடங்கியுள்ளன. ஆனால், இது ஆரம்ப காலம் தான்,” என்று ரெட்பிரைட் பார்ட்னர்ஸ் நிறுவன ஜெனரல் பார்ட்னர் பிரிஜ் பாஷின் கூறுகிறார்.
இந்த பிரச்சனை மேலும் ஒரு மாதம் நீடித்தால் பெரிய அளவில் தாக்கம் இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். “இரண்டு மூன்று வாரங்களாக பயணங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதால், ஒரு சில நிறுவனங்கள் காத்திருக்கும் உத்தியை கடைப்பிடிக்கின்றன. ஜப்பான், கொரியா, அமெரிக்க மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்கள் என சந்தையில் வாய்ப்புகள் ஆழமாக உள்ளன. ஆனால், இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்,” என்கிறார்.
இந்த வைரஸ் ஆசியா முழுவதும் நிதித் திரட்டுவதை பாதித்திருக்கிறது. 2019 இறுதியில் சீன முதலீடுகளில் தொய்வு உண்டானது. அமெரிக்க-சீன வர்த்தக உறவு பதற்றத்தில் இருந்து இது துவங்கியது.
“நிறுவனங்கள் காத்திருக்கும் உத்தியை கடைப்பிடிப்பதால் குறைந்து இரண்டு காலாண்டுகளுக்கு நிதித் திரட்டல் பாதிக்கும் என ஸ்டார்ட் அப்களிடம் முதலீட்டு நிறுவனங்கள் கூறியதாக, முன்னணி ஆலோசனை நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறினார்.
சீன பொருளாதார தேக்கம்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு முதல் காலாண்டில் சீன பொருளாதார வளர்ச்சியில் 4 சதவீத சரிவு இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்வீடனின் ஐகியா, அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. நோய் பரவுவதை தடுக்க, கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் கண்டெயர்னர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 24 விமான சேவை நிறுவனங்கள் சீனாவுக்கு விமானங்களை நிறுத்தியுள்ளன. சீனாவுக்குள்ளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
“வாடகைக் கார்கள் இயங்குகின்றன. ஆனால் அவற்றில் சவாரி செய்பவர்கள் குறைவு. மக்கள் பல வாரங்களாக வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்,” என்று சீனாவில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள வர்த்தக இழப்பை ஈடு செய்ய வாடகை கார் ஓட்டுனர்களுக்கு 77 மில்லியன் டாலர் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு மற்றும் டாக்சி நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ள இந்த நிதி மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு வாடகை கார் டிரைவர்கள் நாள் ஒன்றுக்கு 20 டாலர் பெற முடியும்.
ஹாங்காங் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஹாங்காங் கார் டிரைவர் ஒருவர் கூறுகிறார். பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணியாற்றுவதாலும், ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கைக் குறைந்திருப்பதாலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார். பணியில் ஈடுபடும் டிரைவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 15 சதவீத டிரைவர்கள் பணிக்கு வராமல் இருக்கின்றனர்.
ஆன்லைனில் மாற்றம்
முதலீட்டாளர்களின் போக்கு, வாடிக்கையாளர்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் எதிர்மறையாக பாதித்துள்ளதாக அலிபாபா முதன்மை நிதி அதிகாரி மேகி வூ, அல்ஜஸிரா தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி சீராக உள்ளது ஆனால், லாஜிஸ்டிக் பிரச்சனைகள் உள்ளன. “உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யப்பட 24 முதல் 48 மணி நேரம் ஆகிறது. மேலும் கிடைக்கும் பொருட்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது,” என தொழில்நுட்ப ஊழியர் கூறுகிறார்.
வணிகர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அலிபாபா போன்ற நிறுவங்கள் வழங்கி வருகின்றன. டெலிவரி ஊழியர்களுக்கு மானியம் அளிப்பது போன்றவை இதில் அடங்கும்.
வாடிக்கையாளர்கள் பொருட்களை திருப்பி அளிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அலிபாபா நிறுவனம் இதற்கான காலத்தை அதிகமாக்கியுள்ளது. நிறுவனம் தனது கடன் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இது உள்ளூர் வாடகை பொருளாதாரத்தை பாதித்துள்ளது. அலிபாபா நிறுவனமும் தனது டிமால் மேடை வணிகர்களுக்குச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது நிறுவன வருவாயை பாதிக்கும்.
உற்பத்தி, விற்பனை, லாஜிஸ்டிக்ஸ் மீதான தாக்கம் பொருளாதாரத்தை பாதிக்க உள்ளது.
இந்தியாவில் இவற்றின் தாக்கம் உணரப்பட்டாலும், பார்மா, மின்னணுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் 300 மில்லியன் கம்ப்யூட்டர்களில் 90 சதவீதம், 110 மில்லியன் ஏசிகளில் 80 சதவீதம், 2 பில்லியன் ஸ்மார்ட் போன்களில் 70 சதவீதம் சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களில் இந்தியாவில் இ-காமர்ஸ் மூலம் விற்கப்படுபவை இ-காமர்ஸ் விற்பனையில் பாதி பங்களிப்பை செலுத்துவதாக தெரிகிறது. இந்த காலாண்டில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் என பல பொருட்களுக்கு இந்தியா சீனாவை சார்ந்துள்ளது. இந்த பொருட்கள் இங்கே தயாரிக்கப்பட்டாலும், மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து வருகின்றன. சீனாவில் விநியோக மற்றும் உற்பத்தி வலைப்பின்னலை பெற்றுள்ளோம். ஆனால், இயக்கம் இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்று ஸ்டார்ட் அப் நிறுவனர் ஒருவர் கூறுகிறார்.
பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை இப்போது அளவிடுவது கடினம் என்றாலும், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தி சீனா விரைவாக மீண்டு வருவதில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்