கொரோனா: டிவிஎஸ், ஹூண்டாய், ராயல் என்பீல்டில் உற்பத்தி நிறுத்தம்!
இந்தியாவில் தீவிரம் காட்டி வரும் கொரோனாவால் தொழிலாளர்களின் நலன் கருதி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கார், பைக் உற்பத்தியை நிறுத்தம் செய்துள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவான் நிறுவனங்களாக இருப்பவை நாடு முழுவதிலும் தங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களான மாருதி சுசூகி, ஹூண்டாய், டிவிஎஸ், ராயல் என்பீல்டு மற்றும் சுசூகி மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
தொழிற்துறை அமைப்புகளான இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு அமைப்பு (ACMA) இணைந்து கோவிட்- 19 நோய் பரவலைத் தடுக்க தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைக்க கேட்டுக் கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி & ஹூண்டாய் உற்பத்தி நிறுத்தம்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாருதி சுசூகி முடக்கத்தை அறிவித்தது. குருக்ராம் மற்றும் மானேஸ்வரில் உள்ள உற்பத்தி மற்றும் அலுவலக செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அரசின் அறிவிப்பை பொறுத்தே மீண்டும் எப்போது செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்படும் என மாருதி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் பரவல் செய்தி வெளியானது முதலே மாருதி தன்னுடைய ஆலைகள் மற்றும் அலுவலகங்களில் சுய சுகாதாரம், உடல் வெப்பத்தை பரிசோரித்தல் உள்ளிட்டவற்றை அமல்படுத்தி இருந்தது. எனினும் 3வது கட்டத்தில் இந்தியாவில் நோய் பரவல் இருப்பதை கருத்தில் கொண்டு மாருதி முழு முடக்கத்தை அறிவித்துள்ளது.
இதே போன்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் மார்ச் 23.3.2020, திங்கட்கிழமை முதல் சென்னை தொழிற்சாலை இயங்காது என்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 23 முதல் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த உற்பத்தி முடக்கமானது நீடிக்கும் என்று ஹூண்டாய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவசரத் தேவைக்கான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் தொடர்ந்து வழங்கும், வாரன்டி முடியும் நிலையில் இருப்பவர்கள் கவலைப்ட வேண்டாம் அவர்களுக்கான கால நிர்ணயமானது மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்துத் தரப்படும் என்றும் ஹூண்டாய் உறுதியளித்துள்ளது.
இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் மூடல்
இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான ராயல் என்பீல்டு, சுசூகி மோட்டார் சைக்கிள் மற்றம் டிவிஎஸ் உள்ளிட்டவையும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
மார்ச் 23 முதல் 2 நாட்களுக்கு உற்பத்திகள் நிறுத்தப்படுவதாக டிவிஎஸ் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் அயல்நாடுகளில் செயல்படும் தொழிற்சாலைகள் முழுவதும் மார்ச் 31 வரை மூடப்படுவதாக ராயல் என்பீல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கோவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் ராயல் என்பீல்டின் உற்பத்தி அனைத்து மார்ச் 23,2020 முதல் மார்ச் 31,2020 வரை நிறுத்தப்படுகிறது. இந்த முடக்கக் காலத்தில் தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கோ, கடைநிலை பணியாளர்கள் வரையோ எந்த ஆட்குறைப்பும், ஊதியக் குறைப்பும் செய்யப்படாது என்று ராயல் என்பீல்டு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ராயல் என்பீல்டின் சென்னை உற்பத்தி மையம் மற்றும் சென்னையில் செயல்படும் தொழில்நுட்ப மையங்கள், பிரிட்டனின் லெய்செஸ்டர்ஷைரும் மூடப்பட்டுள்ளது.
சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா, குர்கானில் உள்ள தன்னுடைய ஆலையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியுள்ளது.
“பணியிடத்தில் தொழிலாளர்களின் நலனில் எப்போதும் சுசூகி மோட்டார் சைக்கிள் அக்கறையுடன் இருக்கிறது, அத்தியாவசியத் சேவைகள் துறையில் இல்லாத பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்று அதன், இந்திய நிர்வாக இயக்குனர் கொசிரா ஹிராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு : கஜலெட்சுமி