ரயில்வே உருவாக்கியுள்ள குறைந்த செலவிலான வென்டிலேட்டர் ‘ஜீவன்’
இந்திய ரயில்வே, கொரோனா பாதிப்பு சூழலில் உதவக்கூடிய செயற்கை சுவாசக் கருவியை குறைந்த செலவில் வடிவமைத்து, ICMR அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
கொரோனா பாதிப்புக்கு நடுவே, உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவும் வகையில், இந்திய ரயில்வே தனது கபுர்தலா ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ஜீவன் எனும் பெயரில் குறைந்த செலவிலான செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) மாதிரியை உருவாக்கியுள்ளது.
இந்த மாதிரிக் கருவி தற்போது ஐ.சி.எம்.ஆர் அனுமதிக்காக காத்திருப்பதாக ரயில்வே வட்டாரம் தெரிவிக்கிறது.
"கம்பிரஸர் இல்லாமல் இதற்கு ரூ.10,000 ஆகலாம். ஐ.சி.எம்.ஆர் அனுமதி கிடைத்தவுடன், மூலப்பொருட்கள் இருந்தால், ஒரு நாளில் இத்தகைய 100 வென்டில்லேட்டர்களை தயாரிக்க முடியும்,” என்று இந்த முயற்சியின் பின்னே உள்ள ஆர்.சி.எப் பொது மேலாளர் ரவீந்தர் குப்தா கூறினார்.
"மொத்தத்தில் செலவு வழக்கமான வென்டிலேட்டர் செலவை விட மிகக் குறைவாக இருக்கும்,’ என்று அவர் தெரிவித்தார்.
நுரையீரலில் காற்று மற்றும் பிராணவாய்வை செலுத்தக்கூடிய செயற்கை சுவாசக் கருவியான வெண்டிலேட்டர்கள், கோவிட்-19 வைரஸ் தாக்குதலால் நுரையீரல் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மோசமான சூழலில் இந்தியாவுக்கு மே மாத வாக்கில் 100,000 முதல்220,000 வென்டிலேட்டர்கள் தேவைப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 57,000 வென்டிலேட்டர்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவை ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலை கொண்டுள்ளன.
இந்த சாதனம், மோட்டார் அல்லது பிஸ்டன் போன்ற இயங்கும் பகுதி இல்லாமல், காற்றை செலுத்தக்கூடிய காற்றை அழுத்தும் பகுதியை பிரதானமாகக் கொண்டுள்ளது.
மைக்ரோபிராசஸர் கட்டுப்பாடு கொண்டுள்ளது. இதற்கான சர்க்யூட்டை ஆர்சிஎப் குழு வடிவமைத்துள்ளது என்று குப்தா கூறுகிறார். நோயாளியின் சுவாசத்தை சீராக்க ஒரு வால்வ் பொருத்தப்பட்டுள்ளது, இந்த சாதனத்தை கையடக்க வடிவில் உருவாக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் கிடைக்கும் பாகங்களை கொண்டு இந்த மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளதாக குப்தா கூறினார்.
11 பேர் குழு உருவாக்கிய ‘ஜீவன்’ செயற்கை சுவாசக் கருவியை தயாரிக்கல், வால்வ் மற்றும் மைக்ரோபிராசஸர் ஆகிய இரு பாகங்களை மட்டும் வெண்டர்களிடம் இருந்து தருவிக்க வேண்டும். ஆர்சிஎப் அவசர கால சேவை மூலம் இவற்றை கொண்டு வரலாம்.
இந்த சாதனம், சுவாசக் கட்டுப்பாடு, டைடல் வால்யூம் ஆகிய வென்டிலேட்டர்களின் முக்கியக் காரணிகளை அளிப்பதாக குப்தா கூறினார்.
“இன்று இறுதியாக சில சோதனைகளைச் செய்து பார்த்தோம். அதன் பயனாக, முழுமையான அவசர நிலை வென்டிலேட்டர் சாதனத்தை மூன்றில் ஒரு பங்கு செலவில் உருவாக்கும் சாத்தியத்தை பெற்றுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் செலவு ஏற்பட்டால் கூட, ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ஆகாது என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்