உள்ளூர் நிறுவனங்களுக்கான வருமான வரி 25.17 சதவீதமாக குறைப்பு!
புதிய வரி விதிப்பு முறை ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், வர்த்தக நிறுவனங்களுக்கான வருமான வரி (Corporate Tax), அனைத்து செஸ் மற்றும் கூடுதல் வரிகள் உள்பட 25.17 சதவீதமாக குறைக்கபப்டுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விகிதம், இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
வர்த்தக வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளால் ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த அமைச்சர், வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
இதன் விளைவாக உள்ளூர் நிறுவனங்களுக்கான வருமான வரி, அவை எவ்வித சலுகைகளும் கோரவில்லை எனில் 22 சதவீதமாக இருக்கும்.
வருமான வரிச்சட்டம் மற்றும் நிதிச் சட்டத்தில் இதற்கான மாற்றம் அவசரச் சட்டம் மூலம் மேற்கொள்ளப்படும்.
22 சதவீத வருமான வரியை தேர்வு செய்யும் நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். அக்டோபர் 1 ம் தேதிக்கு பிறகு உண்டாக்கப்படும் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் எந்தவித சலுகையும் இல்லாமல் 15 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும் என்றும அவர் தெரிவித்தார்.
அனைத்து வரிகளையும் சேர்த்து புதிய நிறுவனங்கள் 17.01 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும். நிறுவனங்கள் தற்போது அனுபவித்து வரும் வரி விடுமுறை மற்றும் சலுகைகள் முடிந்த பிறகு குறைந்த வரி பிரிவுக்கு மாறிக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பங்குகள் பரிவர்த்தனை வரிக்கு உள்ளாகும் நிறுவனங்களின் சமபங்குகளை விற்பதால் உண்டாகும் மூலதன ஆதாய வரி மீது பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கூடுதல் வரியை வசூலிப்பதில்லை என்றும் அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு நிதிகழ முதலீட்டாளர்கள் கையில் உள்ள பங்கு பத்திரங்கள் உள்ளிட்டவை விற்பனையால் உண்டாகும் மூலதன ஆதாயம் மீதான சூப்பர் ரிச் வரியும் பொருந்தது.
அதே போக, ஜூலை 5க்கு முன் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்த நிறுவனங்களுக்கும் இந்த வரி பொருந்தாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பு செலவுக்கான 2 சதவீதத்தை, ஐஐடி,என்.ஐ.டி மற்றும் தேசிய ஆய்வுகூடங்களுக்கான அடைகாக்கும் நிதிக்கு செலவிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வரிச்சலுகைகள் மேக் இன் இந்தியாவில் ஊக்கம் அளித்து, பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஊக்கம் அளிக்கும் என நிதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தி பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்