அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் ஜோடியாக வென்ற சாதனை தம்பதி!
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமே என உணர்த்தியுள்ளனர் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி.
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமே என உணர்த்தியுள்ளனர் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி. அனுபவ் சிங் மற்றும் விபா சிங் எனும் அந்த தம்பதி, கணவன், மனைவியாக ஒன்றாக தேர்வெழுதியதோடு, தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்து வியக்க வைத்துள்ளனர்.
சத்திஸ்கர் மாநிலத்தில் 1 மற்றும் 2 கிரேடுகளுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கணவன், மனைவி அபினவ் சிங் மற்றும் விபா சிங் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
298.3744 மதிப்பெண்களுடன் அபினவ் முதலிடமும், 283.9151 மதிப்பெண்களுடன் விபா இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.
”இன்று எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவது கடினமாக உள்ளது. இந்தத் தருணத்திற்காக தான் காத்திருந்தேன். பல தோல்வி முயற்சிகளுக்குப் பிறகு, நாங்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெறுவோம் என நம்பினேன்,” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அபினவ் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்தனராம். கடந்த 2008 ம் ஆண்டு ஒரு பயிற்சி குழுவில் சந்தித்தவர்கள், அதன் பின் ஒன்றாக படிக்கத் துவங்கி 2014ல் திருமணம் செய்து கொண்டனர். கணவன், மனைவியான பிறகும் தேர்வுக்கான தயாரிப்பை நம்பிக்கையோடு விடாமல் தொடர்ந்துள்ளனர். அதன் பயனாக, இன்று முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
”நாங்கள் ஒன்றாக படிப்போம். நாங்கள் பேசிக்கொள்வது கூட, தேர்வுக்கான தயாரிப்பு தொடர்பாகவே இருக்கும்,” என்கிறார் அபினவ்.
”நாங்கள் இருவரும் தேர்ச்சி பெறுவோம் என்று நிச்சயம் தெரியும். ஆனால் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்போம் என நினைத்துக்கூட பார்த்ததில்லை.” என்று விபா உற்சாகமாக கூறுகிறார்.
பஞ்சாயத்து துறையில் கிராம அதிகாரியாக பணியாற்றிய விபா, கடந்த பல ஆண்டுகளாக வேலையையும் படிப்பையும் சேர்த்து கவனித்து வந்திருக்கிறார்.
நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் எந்த வயதிலும் தேர்வில் வெற்றி பெறலாம் என்பதற்கான ஊக்கம் தரும் உதாரணமாக இந்த தம்பதி விளங்குகின்றனர்.
இந்த தம்பதியின் சாதனை குறித்து ஏ.என்.ஐ நிறுவனம் டிவிட்டரிலும் செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளது. அதில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழில் :சைபர்சிம்மன்