தவறாக முடிவெட்டிய நட்சத்திர ஹோட்டல் சலூன்: ரூ.2 கோடி இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு!
மாடலுக்கு நேர்ந்த சோகம்!
டெல்லியில் இருக்கிறது இந்திய தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் (N.C.D.R.C). 1988ல் ஏற்படுத்தப்பட்ட இந்த தீர்ப்பு ஆணையம் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளான கலப்படம், தரமற்ற பொருள் விற்பனை, கூடுதல் விலை போன்றவற்றுக்கு தீர்வு வழங்கி வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் இந்தத் தீர்ப்பு ஆணையத்தில் வந்த வழக்கு ஒன்று கவனம் ஈர்த்திருக்கிறது. ஹரியானா மாநிலம், குருகிராம் நகரத்தைச் சேர்ந்தவர் ஆஷ்னா ராய் என்ற பெண். 45 வயது மாடலான இவர், அழகுசாதனப் பொருள்கள் விளம்பரங்களில் நடிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளார்.
இந்திய அளவில் ரீச் ஆன, பேன்டீன் ஷாம்பூ மற்றும் வி.எல்.சி.சி அழகுசாதனப் பொருள்களின் விளம்பரங்களில் நடித்த பிரபலமான இவர், கடந்த 2018ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12-ம் தேதி டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டனான ஐ.டி.சி மௌரியாவில் உள்ள சலூனுக்கு தனது முடியை அலங்காரம் செய்துகொள்வதாக சென்றுள்ளார்.
வழக்கமாக இங்கு தான் அவர் முடி அலங்காரம் செய்துகொள்வார். அவருக்கென தனி ஊழியர் வழக்கமாக முடி அலங்காரம் செய்வார். ஆனால் அன்றைய தினம் அந்த ஊழியர் விடுமுறை என்பதால் ஆஷ்னா திரும்பச் செல்ல முற்பட்டுள்ளார்.
சலூனின் மேனேஜர், வேறு ஒரு ஊழியரை முடி திருத்தம் செய்ய நியமிக்க ஆஷ்னா மறுத்துள்ளார். ஆனால் மேனேஜர் புதிய ஊழியரும் முடி திருத்துவதில் கை தேர்ந்தவர், என்று வற்புறுத்தி ஆஷ்னாவை முடி அலங்காரம் செய்ய வைத்துள்ளார். அப்போதும் அந்த ஊழியரிடம் ஆஷ்னா,
“இன்னும் சில தினங்களில் இன்டெர்வியூ இருப்பதால் கவனமாக முடி திருத்தம் செய்ய வேண்டும்," என்று கூறி அவருக்கேற்ற ஸ்டைலை சொல்லியிருக்கிறார்.
அந்த ஊழியரோ ஆஷ்னா சொன்ன மாதிரி அலங்காரம் செய்யாமல், தோள்பட்டை வரை தலைமுடியை முழுவதுமாக வெட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆஷ்னா, அங்கேயே கூச்சல் போட்டிருக்கிறார். உடனே மேனேஜர் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். என்றாலும் தான் சொன்னதை கேட்காமல் தவறாக முடி திருத்திய அந்த ஊழியரை பைவ் ஸ்டார் ஹோட்டல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, ஆஷ்னாவின் வேண்டுகோளின்படி, ஐ.டி.சி நிர்வாகம் பிரத்யேக தலைமுடி சிகிச்சைக்கு நிபுணர்களை ஏற்பாடு செய்திருக்கிறது. நிபுணர்கள் அளித்த தலைமுடி சிகிச்சை காரணமாக ஆஷ்னாவின் தலைமுடி சேதமடைந்துடன், ஒருவித எரிச்சலையும் தலையில் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் அவரால் விளம்பரப் படங்களில் நடிக்க முடியாமல் போக, மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
இதன்பின்னே இது தொடர்பாக நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஆஷ்னா. சில தினங்கள் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆர்.கே.அக்ரவால் மற்றும் ஆணைய உறுப்பினர் எஸ்.எம்.கண்டிகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அதில்,
ஆஷ்னாவுக்கு தவறான சிகிச்சை அளித்தது உறுதிப்படுத்தப்பட, அவருக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடாக நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “பெண்கள் பொதுவாகவே தங்கள் கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்துவதுண்டு. ஆஷ்னா ராய் மாடல் இதை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. ஆனால், சலூன் நிர்வாகம் அளித்த தவறான சிகிச்சையால் ஆஷ்னா தனது வேலைவாய்ப்பை இழந்து பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார். மேலும்,
இது அவருடைய வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி, ஒரு சிறந்த மாடலாகும் கனவை சிதைத்தது. இதற்கு காரணம், ஆஷ்னாவின் அறிவுரைகளை மீறி சலூன் அவருக்கு தவறான முடித்திருத்தம் செய்துதான்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
தகவல் உதவி: என்டிடிவி | தொகுப்பு: மலையரசு