Covaxin தடுப்பூசிக்கு 81% செயல்திறன்: 3ம் கட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது பாரத் பயோடெக்!
விமர்சகர்களுக்கு பதிலடி தரும் தரவு!
இந்திய நிறுவனம் பாரத் பயோடெக்-ன் உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசி 'கோவாக்சின்' 'Covaxin', மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில், இரண்டாவது டோஸ் போட்டபின் 81% இடைக்கால செயல்திறன் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி மனித பரிசோதனை 3ம் கட்டத்தில் 25,800 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை எடுத்துக் கொண்ட அனைத்து பங்கேற்பாளர்களும் தடுப்பூசி மருந்தால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை இந்திய அரசாங்கத்தின் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து நடத்தப்பட்டது. இது இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சோதனை ஆகும்.
“முன் தொற்று ஏற்படாதவர்களுக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாவது டோஸ், COVID-19 தொற்றை தடுப்பதில் 81% இடைக்கால செயல்திறனைக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்து இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது. பங்கேற்பாளர்கள் 1: 1 விகிதத்தில் தடுப்பூசி பெற்றனர். இது தடுப்பூசி பயனாளிகள் நன்கு பொறுத்துக் கொள்ளப்படுவதைக் காட்டுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
"மேலதிக தரவுகளை சேகரிப்பதற்காகவும், கூடுதல் இரண்டாம் நிலை ஆய்வு முனைப்புள்ளிகளில் கோவாக்சினின் செயல்திறனை மதிப்பிடுவதற்காகவும் 130 உறுதிப்படுத்தப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு மட்டும் இறுதி பகுப்பாய்வு வரை மருத்துவச் சோதனை தொடரப்பட வேண்டும்," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகள், தடுப்பூசி பாதுகாப்பானது என்ற பாரத் பயோடெக்கின் கூற்று மற்றும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டங்களில் ஒன்றை இந்தியா வெளியிடுவதால், மக்களிடையே நிலவும் தயக்கத்தை சமாளிக்க உதவும். முன்னோடியில்லாத வகையில் அவசர அவசரமாக கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கும் இந்த தரவு பதிலடி கொடுக்கும் என பாரத் பயோடெக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகளை அறிவித்துவிட்டு பேசிய பாரத் பயோடெக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், டாக்டர்.கிருஷ்ண எல்லா,
“அறிவியலை கொண்டு கொரொனா வைரஸுக்கு எதிரான நமது போராட்டத்தில், தடுப்பூசி கண்டுபிடிப்பில் இன்று ஒரு முக்கியமான மைல்கல். 27 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட தடுப்பூசியின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையின் முடிவுகளின்படி, கொரோனாவை எதிர்த்து உயர் மருத்துவ செயல்திறன் இருப்பது வெளிவந்துள்ளது. தொடர்ந்து உருமாறி வரும் தொற்றினை எதிர்த்தும் இது செயல்படுகிறது, என்றார்.
இந்தியாவில் கோவாக்சினின் மூன்றாம் கட்ட செயல்திறன் தரவுகள் வருவதற்கு முன்னரே மக்களுக்கு செலுத்தும் ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. அதன் செயல்திறன் குறித்த சில சந்தேகங்களும், கேள்விகளும் எழும்பிய நிலையில், இந்த முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
இன்றைய முடிவுகளை வெளியிட்டு பேசிய பாரத் பயோடெக் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா,
“இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தடுப்பூசி மருந்தின் கண்டுபிடிப்பு மற்றும் அதன் மருத்துவப் பரிசோதனை கட்டத்தில் எங்களுடன் இருந்த பார்ட்னர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பாரத் பயோடெக் குழுவினருடன் இந்த முக்கிய தருணத்தை பகிர்ந்து கொள்கிறோம்,” என்றார்.
இதற்கிடையே, புது டெல்லியில் உள்ள அதிகாரிகள், பாரத் பயோடெக் நிர்வாகமும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை தீவிரமாக பாதுகாத்துள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது பெரிய பரவலை தடுக்கவும், இந்தியாவின் அறிவியல் திறனை மற்ற நாடுகளுக்கு காட்டிடவும் இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் பயன்பெறும்.
இந்நிலையில், புதன்கிழமை காலை 7 மணி வரை 3,12,188 அமர்வுகள் மூலம் 1.56 கோடிக்கு மேல் (1,56,20,749) தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக தற்காலிக அறிக்கையின்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதே அறிக்கையில், இவர்களில் 67,42,187 சுகாதாரப் பணியாளர்கள் (1 வது டோஸ்), 27,13,144 எச்.சி.டபிள்யூ (2 வது டோஸ்), 55,70,230 முன்னணி தொழிலாளர்கள் (1 வது டோஸ்) மற்றும் 834 எஃப்.எல்.டபிள்யூ (2 வது டோஸ்), 45 வயதிற்கு மேற்பட்ட 71,896 பயனாளிகள் குறிப்பிட்ட இணை நோய்களுடன் (1 வது டோஸ்) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 5,22,458 பயனாளிகள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புதிய கோவிட் -19 நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 85.95% வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.