தமிழகத்தில் ‘தடுப்பூசி திருவிழா’ - இன்று முதல் மூன்று நாட்களுக்கு...!
4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும்!
சமீபத்ததில் கொரோனா 2ம் அலை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா செயல்படுத்தப்படும் என்றார். அதன்படி, தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா செயல்படுத்தப்படும்.
தற்போது ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ள சுகாதாரத்துறை, அதற்காக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரத்து 900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகின்றன.
மொத்தம் உள்ள 4,328 தடுப்பூசி மையங்களில் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த மையங்களின் இந்த தடுப்பூசி திருவிழா நாட்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும் என்பதால் தடுப்பூசி திருவிழாவுக்கு என தனியாக பிரத்யேக மையங்கள் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை தமிழகத்தில் நிலவி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,
"தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே சென்னையில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இந்த மாத இறுதிக்குள் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம். இதற்காக சென்னையில் 450 தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன."
மேலும், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் அரசின் கையிருப்பில் உள்ளன. அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால் தடுப்பூசி செலுத்தும் பணி சுணக்கம் கண்டிருந்தது. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மீண்டும் வேகப்படுத்தி இருக்கிறோம், என்று பேசியிருக்கிறார்.