‘தடுப்பூசி, முகக்கவசம் மட்டுமே Omicron-க்கு எதிரான ஆயுதங்கள்’ - தொற்றுநோய் நிபுணர் சுப்ரமணியன் சுவாமிநாதன்
ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் ஆயுதம் நம் கையில் தான் உள்ளது. முறையான முகக் கவசம் மற்றும் தடுப்பூசி மூலம் ஒமைக்ரான் பரவலில் இருந்து நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும்தற்காத்துக் கொள்ளலாம் என்கிறார் பிரபல தொற்று நோய்கள் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.
ஒமைக்ரான்... உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரே வார்த்தை இது...
2019ம் ஆண்டு சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட போது, இப்படி உலகையே அச்சுறுத்தும் நோயாக அது உருமாறும் என மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அந்த வைரஸ் பிடியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியவில்லை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உருமாறி இன்னமும் மக்களை பீதியிலேயே வைத்திருக்கிறது கொரோனா. பல நாடுகளில் கொரோனா நான்கு அலையைத் தாண்டி விட்டது.
இந்த சூழ்நிலையில் உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வகை உலக நாடுகள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல வகைகளில் உருமாறியுள்ள ஒமைக்ரான் கொரோனா வைரஸ் முதலில், கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னமும் அது எப்படிப்பட்ட தன்மையானது என்பதைப் பற்றிய தெளிவு ஆராய்ச்சியாளர்களுக்கு பிடிபடாத நிலையில், அது வேகமாக மேலும் பல நாடுகளுக்கு பரவத் துவங்கியுள்ளது மக்களை அச்சப்பட வைத்துள்ளது.
கடந்தாண்டு இதே போல் உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா வைரஸால் உலக நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்தியாவிலும்கூட முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனாலேயே ஒமைக்ரான் மீதான பயம் மக்களுக்கு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
மற்ற கொரோனா வைரஸ் திரிபுகளைவிட ஒமைக்ரான் மீது மட்டும் இப்படி ஒரு பயம் ஏற்பட காரணம் என்ன? உண்மையில் ஒமைக்ரான் எவ்வளவு ஆபத்தானது? அதன் பரவும் தன்மை எப்படிப்பட்டது? தடுப்பூசி போட்டவர்களையும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தாக்குமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன.
இந்நிலையில், யுவர்ஸ்டோரி தமிழுக்காக ஒமைக்ரான் பரவல் குறித்து பிரபல தொற்று நோய்கள் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதனிடம் பேசினோம்.
ஒமைக்ரான் உலகையே அச்சுறுத்தக் காரணம் என்ன?
வைரஸுக்கு இயல்பாகவே உருமாற்றம் அடையும் தன்மை அதிகம். கொரோனா வைரஸும் அப்படிப்பட்டதுதான். ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என இதுவரை பல்வேறு உருமாற்றத்தை அடைந்துள்ளது. எல்லா உருமாற்றத்தையுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் பெரும்பாலான உருமாற்றங்களால் நமக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.
ஆனால், சில உருமாற்றங்கள் இதற்கு விதிவிலக்கானவை. ஏனெனில் சில அதிவேகமாகப் பரவக்கூடியவையாக அல்லது ஏற்கனவே உள்ள மருந்து மாத்திரைகளுக்கு, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாதவையாக இருக்கலாம். சில சமயங்களில் அவை ஏற்படுத்தும் நோயின் தாக்கம் முந்தையதில் இருந்து வேறுபடலாம். இப்படிப்பட்ட உருமாற்றங்களை மருத்துவ உலகம் கூர்ந்து கவனிக்கும். ஏனெனில் அவற்றின் மூலம் பாதிப்புகள் அதிகமாகலாம்.
அப்படித்தான் கடந்தாண்டு ஆல்பா வைரஸ் மூலம் பல நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்தியாவில் இருந்து தோன்றிய டெல்டா வைரஸ் தான் இன்று உலக நாடுகளில் 99 சதவீத கொரோனா பாதிப்பிற்கு காரணமாக உள்ளது. டெல்டா மிக வேகமாகப் பரவக்கூடியது. தற்போது கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதைவிட பன்மடங்கு வேகமாகப் பரவக்கூடியதாக உள்ளது.
எப்படி மற்ற உருமாற்றங்களை அழித்து டெல்டா வைரஸ் முதலிடத்திற்கு வந்து ஆக்கிரமித்ததோ, அதேபோல் ஒமைக்ரானும் அந்த இடத்தை அடையலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் தான் ஒமைக்ரான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்பெர்க் அருகில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தான் முதன்முதலில் ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 77 பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. வழக்கமாக இப்படி நடத்தப்படும் ஆய்வுகளில் அனைத்தும் டெல்டா வகையாகத்தான் இருக்கும். ஆனால் அங்கோ 77ல் ஒன்று கூட டெல்டா இல்லை. அனைத்தும் ஒமைக்ரான்தான். இது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, தென்னாப்பிரிக்காதான் அதன் பிறப்பிடம் என்று கூற முடியாது. கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று தான் குறிப்பிட முடியும். தற்போது உலகில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அது மிக வேகமாகப் பரவுகிறது என்பது உறுதியாகியுள்ளது.
ஒமைக்ரானால் இந்தியாவில் 3வது அலை வருமா?
இதுபோன்ற நோய்த்தொற்றுகளை அலை எனக் குறிப்பிடுவது நாட்டிற்கு நாடு வேறுபடும். தற்போது சில நாடுகளில் நான்காவது அலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த நாடுகளில் ஒமைக்ரானால் ஐந்தாவது அலை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் அலையைவிட இரண்டாவது அலையில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது.
ஒவ்வொரு அலையையும் நோய்ப்பரவும் விகிதம் மற்றும் உயிரிழப்பு என வேறுபடுத்திப் பார்க்கலாம். அதிக இன்பெக்ஷனை ஏற்படுத்துவதையும் அலை எனலாம், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதையும் அலை என வகைப்படுத்தலாம். அதன்படி, பார்த்தால் ஒமைக்ரானால் நிச்சயம் அதிக இன்பெக்ஷன், அதாவது நோய்ப்பரவல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அச்சப்படத்தக்க வகையில் உயிரிழப்புகள் இருக்குமா என்பது குறித்து தற்போது தெளிவாகத் தெரியவில்லை. இதற்காகத்தான் ஒமைக்ரான் அதிகமுள்ள தென்னாப்பிரிக்காவைக் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
கொரோனா தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக வேலை செய்யுமா?
இப்போதைக்கு அதனை உறுதியாகச் சொல்ல முடியாது. இதுவரை பார்த்த அனைத்து உருமாற்ற வகைகளிலும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாதிரியான பாதுகாப்பு சதவீதம் மாறுபடுகிறது.
ஆரம்பத்தில் 70% இருந்தது, பீட்டா திரிபிற்கு இந்த பாதுகாப்பு 10% தான் இருந்தது. ஆனால், உயிர்ப் பாதுகாப்பு என்பது 90% மேல் உள்ளது. இதுவரை பார்த்த எல்லா திரிபுகளுக்குமே தடுப்பூசியால் உயிர்ப் பாதுகாப்பு உள்ளது என்பதால் ஒமைக்ரானிற்கும் அது பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற வைரஸ்களில் இருந்து வேறுபட்டு ஒமைக்ரான் ஏன் அச்சப்பட வைக்கிறது?
ஸ்பைக் புரொட்டீனில் பொதுவாக ஐந்தில் இருந்து எட்டு திரிபுகள் கண்டுபிடிக்கப்படும். ஆனால் ஒமைக்ரானில் சுமார் 32 திரிபுகள் இருக்கின்றன. ஒரே சமயத்தில் இது போல் அதிகப்படியான திரிபுகள் இருப்பது மிக மிக அபூர்வமான ஒன்று. அதோடு இது மிக மிக வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதைப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படுவதற்கு முன்னதாகவே இது அதிகப்படியான தொற்றுக்களை ஏற்படுத்திவிடும் அபாயமும் உள்ளது.
டெல்டாவைப் பொறுத்தவரை நாம் பட்ட பாடுகளில் இருந்து மற்ற நாடுகள் விழித்துக் கொண்டன. அதோடு, அப்போது மற்ற நாடுகளில் கொஞ்சம் கொரோனா கட்டுக்குள் இருந்ததால், இந்தியாவிற்கு அவை உதவிக்கரம் நீட்ட முடிந்தது. ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை. ஒமைக்ரான் ஒரே சமயத்தில் எல்லா நாடுகளையும் தாக்கும்போது, யாராலும் யாருக்கும் உதவி செய்ய முடியாத நிலை ஏற்படலாம். எனவே இந்தியாவிற்கு மற்ற நாடுகளால் உதவ முடியாது என்ற நிலை ஏற்படலாம்.
எப்படி தப்பிக்கலாம்?
பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரானைக் கட்டுப்படுத்திவிட முடியாது. ஏனென்றால் நாம் சுதாரிப்பதற்கு முன்னதாகவே ஒமைக்ரான் பல நாடுகளுக்கு பரவி விட்டது. பயணத்தடைகள் மூலம் நோயை கொஞ்சம் தள்ளிப் போடலாமே தவிர, தப்பிக்க இயலாது. நோய்ப்பரவலை கட்டுக்குள் வைப்பது நம் கையில் தான் உள்ளது.
அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முறையாக மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாகவே ஒமைக்ரான் பரவலில் இருந்து தப்பிக்க முடியும். எவ்வளவுக்கெவ்வளவு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகலைக் கடைபிடிக்கிறமோ அந்தளவிற்கு நல்லது. அதை அலட்சியப்படுத்தும் போது ஆபத்து தானாக வந்து சேர்கிறது.
மாறுபடும் அறிகுறிகள்?
ஒமைக்ரானின் அறிகுறிகள் இதுதான் என்பது இன்னமும் வரையறுக்க முடியாமல் இருப்பது கவலைதரும் விசயமாக உள்ளது. தொடர்ச்சியாக இருமல், காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இப்போது ஒமைக்ரானின் முக்கிய அறிகுறியாக தலைவலியை தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படையில் பார்த்தால் தலைவலி இருப்பவர்களை எல்லாம் கொரோனா பரிசோதனை செய்யச் சொல்ல முடியுமா? அப்படியென்றால் யாரையெல்லாம் கொரோனா பரிசோதனை செய்யச் சொல்ல வேண்டும் என்பதே கடினமான விசயமாகி விடும்.
எனவே, அவர்கள் சொல்வதை அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள முடியாது. அனைவருக்கும் காய்ச்சல், இருமலோடு மட்டும் கொரோனா வரும் எனச் சொல்ல முடியாது. இதை நாம் அவர்களது ஆய்வில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
உலகச் சுகாதார நிறுவனம் கூறுவது போல், நாடுகளின் தடுப்பூசி சமத்துவநிலையின்மை தான் ஒமைக்ரான் பரவலுக்குக் காரணமா?
நிச்சயமாக... நோய் எதிர்பாற்றல் உள்ளவர்கள் உடம்பில் கொரோனா வைரஸால் நீண்ட காலம் வசிக்க இயலாது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள உடம்பில் நீண்ட காலம் வசிக்கும் வைரஸ் எளிதாக உருமாற்றம் அடைந்து விடும். இதனால்தான் ஒரே சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என கடந்தாண்டே வல்லுநர்கள் வலியுறுத்தினர்.
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் தாக்கம் ஏற்படுமா?
இன்பெக்ஷன் வருவது வேறு, நோய் வருவது வேறு. தடுப்பூசி போட்டாலும் கொரோனா இன்பெக்ஷன் ஏற்படலாம். ஆனால் அது நோயாக மாறி அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதோடு, தடுப்பூசி போட்டாலும் எப்போதுமே முழுப் பாதுகாப்பு என்பது கிடையாது. ஆரம்பத்தில் 70% சதவீதமாக இருக்கும் பாதுகாப்பு, நாளடைவில் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். அதனால் தான் மேலைநாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது பற்றி பேசி வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி போட்டு விட்டால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் இறப்பு மற்றும் கடும் நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தடுப்பூசி போட்டவர்களுக்கும் இன்பெக்ஷன் வருகிறது என்பதை பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அது பயப்படத்தக்க ஒன்றல்ல.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் எத்தனை பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறும் அளவிற்கு கடுமையான நோய்த்தாக்கம் ஏற்பட்டது, உயிரிழப்புகள் ஏற்பட்டதாக என்பதைத்தான் இங்கே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்படியே அவர்கள் தரும் தரவுகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கும் வர இயலாது. ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் போடப்படும் தடுப்பூசிகள் வேறு, இங்கு வேறு.
இப்போதைக்கு நமக்கு இருக்கும் இரண்டு பெரும் ஆயுதம், ஒன்று தடுப்பூசி மற்றொன்று முகக்கவசம். எனக்கு வராது என இளக்காரமாக இதைக் கடந்து செல்ல முடியாது. தேவையின்றி வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாமல் வெளியில் செல்லும் சமயங்களில் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மட்டுமே ஒமைக்ரான் மட்டுமல்ல. இனி எந்த மாதிரியான திரிபுகள் வந்தாலும் அவற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றும் கேடகமாக இருக்கும்.
ஒமைக்ரான் பற்றிய ஆரம்பகால தரவுகள் மட்டுமே இப்போது நமக்குக் கிடைத்துள்ளது. இன்னமும் அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே விழிப்போடு இருப்பது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் கடந்த மூன்று மாத காலமாக எங்குமே பயணம் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு தென்னாப்பிரிக்க நாட்டவருடன் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, ஏற்கனவே ஒமைக்ரான் இந்தியாவில் கம்யூனிட்டி லெவல் பரவலைத் தொடங்கி விட்டது தெரிகிறது. இப்போது நாம் நம்மைப் பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே, இனி வரும் பாதிப்புகளில் இருந்து தப்பலாம். அதைவிடுத்து, இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து பரவல் அதிகமான பிறகு பயந்து பயனில்லை.
வைரஸ் பரவல் அதிகமாக அதிகமாக சமூகத்தில் தொற்றும் அதிகரிக்கும், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவரின் உடல் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஒமைக்ரானைப் பொறுத்தவரை வைரஸின் அளவு அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே உடல்நலப் பாதிப்பும் அதிகமாக இருக்குமோ என்ற கவலையும் உள்ளது.
இதற்கு முன்பு வரை ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மீண்டும் கொரோனா வராது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒமைக்ரானில் அப்படியில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளே ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவை எதற்குமே இன்னமும் தெளிவான தரவுகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.