கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதோ!
இந்தியா முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியுள்ள நிலையில், தடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்து கொள்வது, இதற்கான வாய்ப்புகள் என்ன? செலவு என்ன போன்ற பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய முயற்சியாக, ஜனவர் 16ம் தேதி இந்தியா, கோவிட்-19 தடுப்பூடி போடும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளைத் துவக்கியது.
மருத்துவ வல்லுனர்கள், சுகாதார ஊழியர்கள், மாநில முதல்வர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்திய பிறகு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்டு தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என அறிவித்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவப் பணியாளர்கள், முதல் நிலை ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், காவல் மற்றும் துணை ராணுவப் படையினர் முதல் கட்டமாக தடுப்பூசி பெறுவார்கள். இரண்டாம் கட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் தடுப்பூசி பெறுவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும் விதம், இதற்கு பதிவு செய்து கொள்ளும் முறை உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்...
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவிஷீல்டு (CoviShield) மற்றும் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின் (Covaxin) ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்வது விருப்பத்தேர்வாகும்.
பதிவு செய்யும் வழிமுறை
இந்திய அரசு உருவாக்கியுள்ள Co-Win செயலி மூலம் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து கொள்ள முடியும். தற்போது முன்னோட்ட வடிவில் உள்ள இந்த செயலி, இன்னமும் பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோரில் வரவில்லை. இப்போதைய நிலையில் மருத்துவ ஊழியர்கள் மட்டுமே இதில் பதிவு செய்து கொள்ள முடியும்.
தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை பின் தொடரவும் இந்த செயலி உதவும். புகைப்பட அடையாள அட்டை பதிவு செய்து கொள்வது அவசியம்.
பதிவு செய்ய பொருந்தக்கூடிய ஆவணங்கள்:
· டிரைவிங் லைசன்ஸ்
· வாக்காளர் அட்டை
· பாஸ்போர்ட்
· பான் கார்டு
· வேலை அட்டை
· பென்ஷன் அட்டை
· தொழிலாளர் அமைச்சக மருத்துவக் காப்பீடு அட்டை
· 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை
· வங்கி, அஞ்சலக கணக்கு அட்டை
· மத்திய, மாநில அரசு வழங்கும் சேவை அடையாள அட்டை
· எம்.பி. , எம்.எல்.ஏக்கள் அடையாள அட்டை
தடுப்பூசி செயல்முறை
தடுப்பூசிக்காக பதிவு செய்து கொண்டவுடன், தடுப்பூசி போடப்படும் நாள் தொடர்பான தகவல் மொபைல் எண்ணுக்கு வரும். இந்த விவரத்தை தடுப்பூசி மையத்தில் காண்பிக்க வேண்டும்.
தடுப்பூசி மையத்தில் உள்ள அதிகாரி இந்த விவரங்களை சரி பார்ப்பார். அதன் பிறகு தடுப்பூசி போடப்பட்டு அந்த தகவல் செயலியில் பதிவேற்றப்படும். அதன் பிறகு இரண்டாம் டோஸ் போடுவதற்கான நாள் தெரிவிக்கப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின், 30 நிமிடம் மையத்தில் இருக்க வேண்டும். ஏதேனும் அசெளகர்யம் ஏற்பட்டால், அங்குள்ள மருத்துவப் பணியாளர் உதவியை நாட வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்.
தடுப்பூசி செயல்பாடு
28 நாள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் டோசுக்கு பிற்கு உடலில் ஆண்டிபாடி உருவாகும்.
தடுப்பூசி பாதுகாப்பு
இரண்டும் தடுப்பூசிகளுமே அனுமதி பெற்றவை என்றாலும், ஏதேனும் அலர்ஜி போன்றவை இருந்தால் 30 நிமிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். புற்றுநோய், இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்கள் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி பெறலாம்.
முதல் கட்ட தடுப்பூசிக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் அதன் பிறகு பொதுமக்களுக்கான செலவு பற்றிய விவரம் இல்லை. கோவிட்ஷீல்டு தடுப்பூசி முதல் 100 மில்லயன் டோஸ்களுக்கு ரூ.200 என்ற விலையிலும், அதன் பின் தனியார் மருத்துவமனையில் டோஸ் ரூ.1,000 எனும் விலையிலும் கிடைக்கும் எனத்தெரிகிறது. கோவாக்சின் தடுப்பூசி, டோசுக்கு ரூ.206 விலை இருக்கும்.
முதல் இரண்டு கட்டங்களுக்கான தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டங்கள் தொடர்பான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்- சைபர்சிம்மன்