லே ஆஃப் இல்லை, ஊழியர்களுக்கு போனசுடன் சம்பளம்: Paytm அதிரடி!
இதுமட்டுமல்ல புதிதாக ஊழியர்களையும் பணியில் சேர்க்க உள்ளது பேடிஎம்.
கொரோனா தாக்கம் உலகம் முழுதும் பெரிய அலையை உருவாக்கியுள்ளது. அதிலும் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் பெரிய அளவில் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் பல பெரிய நிறுவனங்கள் கூட பிசினஸ் இல்லாததால், ஊழியர்களின் சம்பளத்தில் கட், பணியை விட்டு அனுப்புவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் தளமான Paytm கடந்த வாரம் ஒரு போனஸ் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தனது ஊழியர்களுக்கு ‘ESOP'( ஊழியர்களுக்கு பங்கில் உரிமை) என்ற அடிப்படையில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புப் பங்குகளைத் தருவதாக அறிவித்துள்ளது பேடிஎம். இதன் மூலம் ஊழியர்கள் பலர் பேடிஎம்-ன் ஒரு அங்கமாகிவிடுவார்கள்.
“அதிக ஈடுபாட்டுடன், நிறுவன வளர்ச்சிக்கு பணிபுரிந்த சிறந்த ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 250 கோடி மதிப்பிலான பங்குகளை அடுத்த 3-4 மாதங்களில் பேடிஎம் வழங்கும்,” என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சரி போனஸ் தான் என்றால், பேடிஎம் நிறுவனம் சுமார் 500 பேரை புதிதாக வேலைக்குச் சேர்க்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே கிட்டத்தட்ட 5000 பேர் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
குறிப்பாக இன்சூரன்ஸ், கடன் மற்றும் பேடிஎம் மணி ஆகிய துறைகளில் வேலைக்கு புதிய ஆட்களை எடுக்கக்கூடம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது 5ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ள பேடிஎம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழக்கம் போல் வழங்கப்படும் என்று அதன் தலைமை மனிதவள அதிகாரி ரோஹித் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஐடி, உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பல பெரிய நிறுவனங்கள் செயல்பாடுகளின்றி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறி வருகின்றனர்.
ஊரடங்கு சமயத்தில், பல நிறுவனங்கள் செயல்பட முடியாத சூழ்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான பேடிஎம்-ன் பிசினஸ் பெருகியுள்ளதாக கருதப்படுகிறது.