குடியரசுத் தின விழாவில் சாகசம் செய்யக் காத்திருக்கும் பைக் வீராங்கனைகள்!
சி.பி.ஆர்.எப் பிரிவைச்சேர்ந்த 65 வீராங்கனைகள் கொண்ட குழு, 350 சிசி பைக்கில் சாகசம் செய்ய உள்ளது.
குடியரசுத் தின அணிவகுப்பின் போது, சி.பி.ஆர்.எப்பை சேர்ந்த வீராங்கனை மட்டுமே கொண்ட குழு பங்கேற்று அதிரடி சாகசங்களை நிகழ்த்த உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 65 பேர் குழு, அணிவகுப்பின் இறுதியில் 350 சிசி பைக்கில் அக்ரோபேட்டிக் சாகசங்களை நிகழ்த்திக்காட்டும்.
"குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் நம்முடைய பைக் வீராங்கனைகள் பங்கேற்பது இது முதல் முறை. நம்முடைய அனைத்து பணிப் பிரிவுகளிலும் பெண்களை ஈடுபடுத்த வேண்டும் எனும் உறுதிக்கேற்ப 2014ம் ஆண்டு இந்த குழு உருவாக்கப்பட்டது,” என்று சிபிஆர்.எப் செய்தி தொடர்பாளர் டி.ஐ.ஜி மோசஸ் தினகரன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அதி விரைவு படையில் பணியாற்றி வரும் சீமா நாக், இந்த குழுவுக்கு தலைமை வகிப்பார்.
உலகின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சி.பி.ஆர்.எப்பின் சிறப்பு கலவர தடுப்பு பிரிவாக அதி விரைவு படை திகழ்கிறது.
இந்த சாகசக்குழுவின் உறுப்பினர்கள் சி.பி.ஆர்.எப் பயிற்சியாளர்களால் பிரத்யேகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 25 முதல் 30 வயது பிரிவில் உள்ளனர். படையில் பல்வேறு பிரிவுகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வீராங்கனைகள் குழு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத்தில் வல்லப்பபாய் பட்டேல் பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தின் போது சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் பார்த்தார்.
சி.பி.ஆர்.எப் 1986ல் ஆசியாவில் முதல் பெண்கள் பிரிவை உண்டாக்கியது. தற்போது ஆறு பெண்கள் பிரிவைக் கொண்டுள்ளது. குடியரசுத் தின விழா அணிவகுப்பின் போது, சிபி.ஆர்.எப் வீராங்கனைகள் குழு, 9 பைக் சாகசங்களை செய்து காட்டி, இறுதியாக மனித பிரமிட்டை உருவாக்க உள்ளனர்.
2018 நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படையைச்சேர்ந்த வீராங்கனைகள் குழு இதே போன்ற சாக்சத்தை நிகழ்த்தினர். 2015ல், ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை பெண் அணிவகுப்பு குழுவினர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
அணிவகுப்பு வழக்கப்படி, பி.எஸ்.எப் மற்றும் ராணுவத்தின் பைக் வீரர்கள் குழு, ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு சாகச நிகழ்ச்சியை நடத்தும். இந்த ஆண்டு சி.பி.ஆர்.எப் பெண்கள் குழுவுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்