நீள்கதைகள் மூலம் தமிழை சிறப்பாகக் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் அருமையான பாடத்திட்டம்!
பள்ளி மாணவர்களுக்கு மொழியை ஒரு பாடமாக இல்லாமல் உணர்வுகள் கலந்த பற்றுடன் கற்றுத் தருகிறது ராஜேந்திரனின் பாடத்திட்டம். தன் ஓய்வூதியப் பணத்தை முதலீடு செய்து இவர் தொடங்கியுள்ள நிறுவனம் மூலம் இதுவரை 16 ஆயிரம் மாணவர்களிடம் நீள்கதை பாடத்திட்டத்தை கொண்டு சென்றுள்ளார்.
ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று ஒரு வழக்க மொழி உண்டு. ஒரு மாணவனை அனைத்து குணநலன்களோடும், எதிர்காலத்தில் அவன் இந்த சமூகத்தில் நல்ல நிலையில் சிறந்து விளங்க வழிகாட்டுவதும் அவர்களே. ஆசிரியர் என்பதை ஒரு பணியாக செய்யாமல் வாழ்க்கையாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே மாணவர்களின் கஷ்டங்களுக்குத் தீர்வு காணும் விடைகளையும் தர முடியும்.
அப்படித் தான் 34 ஆண்டுகளாக கேரள அரசின் கீழ் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன், மாணவர்கள் தமிழ் மொழியை உணர்வுள்ள பாடமாக கற்றுக் கொள்வதற்கான புதிய வழியை கண்டறிந்துள்ளார்.
"கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டம் கோழிப்பாறை எனது சொந்த ஊர். கோழிப்பாறை அரசுப் பள்ளியில் நான் ஆசிரியராகப் பணியாற்றிய போது 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடமெடுத்தேன். கேரள அரசின் கீழ் இயங்கினாலும் அந்தப் பள்ளியில் தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட வகுப்புகளையும் எடுத்திருக்கிறேன்.
மாவட்ட தொடக்கக் கல்வி திட்டம், மாநில பயிற்சியாளர், பாடப்புத்தக குழுவின் உறுப்பினர். இதுமட்டுமின்றி என்னுடைய வழிகாட்டுதலின்படி 3 தமிழ் பாடப்புத்தகங்கள் வெளிவந்திருந்தது. அப்போது பெரிய அளவில் மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அந்த மாதிரியான எந்த மாற்றமும் மாணவர்கள் மத்தியில் நடக்கவில்லை. ஏன் கல்வி பயிலும் முறையில் மாற்றம் ஏற்படவில்லை என்று எனது தேடலைத் தொடங்கினேன்," என்கிறார் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன்.
பெரும்பான்மையான அரசுகள் பாடப்பொருளில் அதிக நேரம் செலவிடுகின்றன அல்லது ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முறையில் சிறிது கவனக்குறைவு இருப்பதாக கருதினேன். இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது குழந்தைக்கு கற்றுக்கொள்ளக் கூடிய திறமை இருக்கிறது என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவே இல்லை.
குழந்தைகளுக்கு இருக்கும் சிந்திக்கும் திறனுக்கு ஏற்ப கற்பிக்காவிட்டால் எந்த கற்றலும் அவர்களைப் போய் சேராது. என்னுடைய பணிக்காலத்தில் நான் பல்வேறு முயற்சிகள் செய்து பார்த்த போதும் கற்றலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. என்னுடைய வகுப்பில் மாணவர்களுக்கு எது பிடிக்கிறது எது பிடிக்கவில்லை என்பதை ஆராய்ந்து அவை பற்றி எழுதத் தொடங்கிய போது என்னுடைய முயற்சிகள் பற்றி வெளியே தெரியத்தொடங்கியது என்கிறார் இந்த ஆசான்.
திண்டுக்கல்லில் இருந்து வெளிவந்த சிற்றிதழ் ஒன்றில் தன்னுடைய அனுபவங்களை எழுதத் தொடங்கிய ராஜேந்திரன், கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கினார். இந்த வரவேற்பு அவரை தாய் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் பயிற்றுநராக சிறிது காலம் பணியாற்ற வைத்துள்ளது.
அந்த சமயத்தில் தான் திருச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்தும், வகுப்பறையை நடத்தும் முறை குறித்து வழிகாட்டுதல்கள் அளித்துள்ளார். அப்போதும் மாணவர்கள் மத்தியில் மாற்றம் நடக்கவில்லை. தொடர்ந்து காரணத்தைத் தேடும் போது அந்தப் பாடங்களோ, வழிகாட்டுதல்களோ குழந்தைகளுக்கு ஏற்றது போல இல்லை என்ற தேடலின் பதிலாக ’நீள்கதை பாடத்திட்டத்தை’ கண்டறிந்துள்ளார் ராஜேந்திரன்.
குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் போது தான் அவர்கள் நம்மை கவனிப்பார்கள். கவனம் திரும்பிய பின்னர் அவர்களுக்கு ஏற்றாற் போல பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து கற்பித்தால் அது அவர்களை நல்ல முறையில் சென்றடையும் என்பதை மெல்ல மெல்ல கண்டறிந்தேன் என்கிறார் ராஜேந்திரன்.
ஒரு பாடத்தை வெறும் வார்த்தைகள் நிரம்பிய வரிகளாக படிக்கவோ அல்லது மனப்பாடம் செய்யவோ வைக்காமல் கதை போல அவற்றை கூறி ஒரு இடத்தில் சஸ்பென்ஸாக முடிக்கும் போது அடுத்து என்னவாக இருக்கும் என்று மாணவர்கள் சிந்திப்பார்கள். தொடர்ந்து ஆசிரியர்களிடம் அது பற்றி கேட்டுக் கொண்டே இருப்பார்கள் அந்த சமயத்தில் கற்றல் அட்டைகளை அறிமுகம் செய்த அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் மாற்றத்தின் விதை ராஜேந்திரன்.
கற்றல் அட்டைகளை நீள்கதை பாடத்திட்டத்தில் வைத்திருப்பதற்கான நோக்கமே பாடப்புத்தகத்திற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் இவைக்கு இல்லை என்பது தான். ஒரு பாடத்தை இப்படித்தான் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருக்கிறது. ஒரு புத்தகம் கையில் கிடைத்தால் இந்த புரிதல் இல்லாமல் பெற்றோரோ அல்லது தனிப்பயிற்சி ஆசிரியர்களோ தங்களுக்கு தெரிந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால் பெரியவர்கள் சொல்வதை திருப்பிச் சொல்வது தான் கல்வி என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேர் ஊன்றி விடுகிறது.
பாடப்புத்தகத்தின் கட்டுப்பாடுகளால் மாணவர்கள் வாசிப்பு அனுபவத்தையே மறந்து போகிறார்கள். நீள்கதை பாடத்திட்டத்தில் ஒரு பாடத்தை முதலில் கதையாக ஆசிரியர் கூற அது பற்றி மாணவர்கள் வகுப்பில் கலந்துரையாடி, என்ன நடந்திருக்கும் என்று மாணவர்கள் அவரவர் கற்பனைகளுக்கு ஏற்றாற் போல கூற இறுதியில் கதையில் உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று ஆசிரியர் மாணவர்களுக்கு கூறுவார். இதன் பின்னரே மாணவர்களுக்கு அந்தக் கதை தொடர்பான வார்த்தைகள் கற்றல் அட்டைகள் மூலம் கற்பிக்கப்படுகிறது.
“கருப்பு மை புரண்ட எழுத்துக்களுள் புதைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பதே வாசிப்பு.”
இப்படி வாசிக்கும் போது தான் மாணவர்கள் உயர் வகுப்புக்கு போகும் போது ஒரு புது புத்தகத்தை எடுத்து தானே வாசிப்பதற்கான பழக்கம் வரும். இப்போதும் குழந்தைகள் படிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு புதிதாக ஒரு புத்தகத்தை படிக்கும் ஆர்வம் ஏன் வரவில்லை என்றால் எழுத்துக்களையும், வார்த்தைகளையும் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு கற்றிருக்கின்றனர்.
படிப்பு என்றாலே கடினம் என்று கருதும் மாணவர்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும் அவர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே 2016ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற பின்னர் க்யூரியஸ் லெர்னிங் இனிஷியேட்டிவ் (Qurius learning Initiative) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி பள்ளிகளில் தமிழ் நீள்கதை பாடத்திட்டத்தை கற்றுத் தரும் முயற்சியில் இறங்கினேன் என்கிறார் ராஜேந்திரன்.
க்யூரியஸ் நிறுவனத்தின் அகாடமி இயக்குனராக ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். பங்குதாரர்களான சுந்தர வேலவன் செயல்பாட்டு இயக்குனராகவும், அனூப் பயிற்சியாளர்களுக்கான இயக்குனராகவும் செயல்பட்டு வருகின்றனர். பாடத்திட்டத்தை திட்டமிடும் குழு, அதனை கதை வடிவில் எழுதும் எழுத்தாளர்கள் என்று 8 பேர் கொண்ட மற்றொரு குழுவும் இவர்களின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனமானது மொட்டு வகுப்பு என்று சொல்லப்படும் எல்கேஜி முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் மொழியை உணர்வுள்ள பாடமாக கற்கும் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான ஆங்கில பாடத்திட்டமும் தற்போது வெள்ளோட்ட முறையில் 10 தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. அரசிடம் இந்த கல்வி முறையை கொண்டு செல்ல சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் ஆர்வம் இருக்கும் தனியார் பள்ளிகளில் நீள்கதை பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 31 பள்ளிகளில் தற்போது இந்த முறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அரசு கொடுத்துள்ள பாடப்புத்தகங்களோடு நீள்கதை பாடத்திட்டமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
குழந்தைகளின் உணர்வைத் தொடும் கதை வழி கற்பித்தலே அவர்களுக்கு மொழிப்பற்றைத் தரும். கேள்விக்கு பதில் எழுதுவது என்பது மொழியறிவில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே மாணவர்களுக்கு மொழி வடிவம் எப்படி வரவேண்டும் என்றால் அவர்களாகவே பாடல், கவிதை, கதை எழுதுதல், பட்டிமன்றத்தில் பேசுதல், நேர்காணல் எடுத்தல் என இதை நோக்கியே நகர்கிறது. நீள்கதை பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்களுக்கு 5ம் வகுப்பில் வைக்கப்படும் தேர்வு என்பது பள்ளியில் ஒரு நாள் நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்த வேண்டும்.
அழைப்பிதழ் தயாரிப்பில் தொடங்கி, நிகழ்ச்சி நிரல் உருவாக்குதல் என அனைத்தையும் மாணவர்களே செய்ய வேண்டும் இது தான் மாணவர்களின் மொழித்திறனுக்கான சவால் என்று செயல்பட்டு வரும் பாடத்திட்டத்தின் பயனை மாணவர்கள் மத்தியில் காண முடிவதாகக் கூறுகிறார் ராஜேந்திரன்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடத்திட்ட முறை உருவாக்கப்பட்டிருந்தாலும் பள்ளிகளிடம் இலவசமாக இதை கொண்டு செல்லும் போது அவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் போது பள்ளிகள் அதிக அக்கறை காட்டுவதால் மாணவர்களையும் இந்த முறை நாங்கள் திட்டமிட்டபடியே கொண்டு செல்லப்படுகிறது.
கற்றல் பொருட்களை அளிப்பதோடு ஒரு வாரத்திற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு வகுப்புகள், ஆசிரியருக்கான வழிகாட்டுதல் கையேடு என அனைத்தையும் உள்ளடக்கி ஒரு குழந்தைக்கு ரூ.300 இருந்தால் தான் நீள்கதை பாடத்திட்டத்திற்கானவற்றை தயார் செய்ய முடியும் என்கிறார் ராஜேந்திரன்.
தற்போது வகுப்பில் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பதை ஆசிரியரே முடிவு செய்கிறார். குழந்தைகள் என்ன கற்க வேண்டும் என்பதை அவர்கள் விருப்பத்திற்கே விட்டு விட வேண்டும். அது தான் கற்றல் அப்போது தான் சுயகற்றல் மற்றும் பொறுப்புணர்வு வரும் இதனை நோக்கமாக வைத்தே க்யூரியஸ் செயல்படுகிறது. இதன் வெற்றியையும் நாங்கள் மாணவர்கள் மத்தியில் காண முடிகிறது என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.
தமிழ் மொழிக்கான நீள்கதையையே தற்போது செயல்படுத்தி வருகிறோம் இதனை 5ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் நீள்கதை பாடத்திட்ட முறையில் கற்பித்தல் இருக்க வேண்டும் என்பதே ராஜேந்திரனின் விருப்பம் என்கிறார்.
க்யூரியஸ் நிறுவனத்தில் ராஜேந்திரன் மற்றும் வேலவன் தலா ரூ.5 லட்சம் முதலீடு செய்திருக்கின்றனர். இது தவிர தன்னுடைய ஓய்வூதியப் பணமான ரூ.15 லட்சத்தையும் ராஜேந்திரன் க்யூரியஸ் நிறுவனத்திற்கு கடனாக அளித்திருக்கிறார்.
“நான் செய்துள்ள முதலீடு திரும்ப எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனால் இது வரை 16 ஆயிரம் மாணவர்களிடம் நீள்கதைகளை கொண்டு சேர்த்திருக்கிறோம். அந்த மாணவர்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியே எனது வெற்றியாக நினைக்கிறேன்.” என்கிறார் ராஜேந்திரன்.
நீள்கதைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நிதியுதவி தேவைப்படுவதால் லாப நோக்கத்தை கருத்தில் கொள்ளாமல் கல்விச் சேவையாக குறைந்த வருமானத்தில் செய்ய விரும்பும் நிறுவனத்தின் நிதியுதவியை நாடுகிறார் ராஜேந்திரன்.