கிரிக்கெட் கனவு டூ மைக்ரோசாப்ட் தலைவர்: சத்ய நாதெல்லாவின் பயணம்!
சத்ய நாதெல்லா பற்றி வேறு சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்துக்கு மத்தியில், மைக்ரோசாப்ட் ஜான் தாம்சனுக்கு பதிலாக தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லாவை நிறுவனத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது மைக்ரோசாப்ட்.
லிங்க்ட்இன் மற்றும் ஜெனிமேக்ஸ் போன்ற கையகப்படுத்துதல்கள் உட்பட மைக்ரோசாப்டின் வணிகத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர் நாதெல்லா. 2014 ஆம் ஆண்டில் முதன்முதலில் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல் நாதெல்லாவை உலகம் கவனித்து வருகிறது.
ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த நாதெல்லாவுக்கு இப்போது மைக்ரோசாப்டின் பார்வையை வடிவமைக்கும் தலைவராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மைக்ரோசாப்டின் 46 ஆண்டு வரலாற்றில் மூன்றாவது தலைவர் என்ற பெருமைக்கும், அதேநேரம், பில் கேட்ஸுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
நாதெல்லா 2014ல் சிஇஓவாக பதவியேற்றபோது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்க முறைமையைச் சார்ந்திருப்பதிலிருந்து விலகிச் செல்லும் எதிர்காலத்தை வடிவமைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.
2014 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில், உலகம் மொபைல் சாதனங்களை பெரிய அளவில் ஏற்றுக்கொண்டதால், மைக்ரோசாப்ட் அதன் புதிய யோசனைகள் மற்றும் முயற்சிகளை வெற்றிபெற போராடியது. மொபைல் சாதனங்களில் அதன் முயற்சிகள் தோல்வியுற்றன. பங்கு விலையும் சரியத் தொடங்கின.
ஆனால், பொறுப்பேற்ற ஒரு சில ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் மீதான உலகத்தின் பார்வையை மாற்றத் தொடங்கினார் நாதெல்லா. அவர் எடுத்த முயற்சியால் இன்று மைக்ரோசாப்ட், உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக ஆகியுள்ளது. இந்த நிலையை அடைய, நாதெல்லா செய்தது விண்டோஸ் கடந்த காலத்திலிருந்து விலகிச் செல்வது மட்டுமல்லாமல், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற எதிர்கால வணிகத்தை உருவாக்கியது தான்.
இதனால், மைக்ரோசாப்ட் கடந்த ஆண்டில் சுமார் 34 பில்லியன் டாலர் வருவாயுடன் - ஒரு மகத்தான கிளவுட் கம்ப்யூட்டிங் வணிகத்தை உருவாக்கியது. இது கூகுள் பெற்றதை விட அதிகம். இவரின் சாதனையை பாராட்டும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ப்ளூம்பெர்க் பிசினஸ் வீக் கட்டுரை, ‘மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் (இப்போது) ஒரு நாடெல்லிசன்ஸ் கொண்டிருக்கிறது,’ என்று தலைப்பிட்டது.
நாதெல்லா தனது ஆரம்ப காலங்களில் ஒருபோதும் இதுபோன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றில் பணியாற்ற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அவரின் கனவு எல்லாம் தனது சொந்த மாநிலமான ஹைதராபாத்துக்காக கிரிக்கெட் விளையாடுவதையும் பின்னர் ஒரு வங்கியில் வேலை செய்வதாகத் தான் இருந்துள்ளது.
இதுபோக வேறுசில திட்டங்களும் இருந்துள்ளன. என்றாலும் இவ்வளவு பெரிய நிலையை அவர் நினைத்துப் பார்த்தது இல்லை.
இத்தகைய சாதனையை செய்த இந்தியாவில் பிறந்த நாதெல்லாவை பற்றி ஒரு சில தகவல்கள்!
* நாதெல்லா ஹைதராபாத்தில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர்.
* இவரது தந்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி, அவரது தாயார் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றியவர்கள்.
* பேகம்பேட்டையில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பும், மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)யில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்திருக்கிறார்.
* நாதெல்லாவின் மனைவி அனுபமா நாதெல்லாவின் தந்தை ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்தவரின் மகள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாதெல்லாவின் மூத்த மகன் ஜெய்ன் ஒரு மாற்றுத்திறனாளி.
* அவரின் தற்போதை நிகர சொத்து மதிப்பு 420 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது மற்றும் அவரது சம்பளம் ஆண்டுக்கு 42 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* நாதெல்லாவும் அவரது குடும்பத்தினரும் வாஷிங்டனில் உள்ள பெல்லூவுக்குச் செல்வதற்கு முன்பு வாஷிங்டனின் சியாட்டிலில் ஒரு பெரிய மலையடிவார வீட்டில் வசித்து வந்தனர்.
* நாதெல்லா, 2017 ஆம் ஆண்டில் வெளியான 'Hit Refresh: The Quest to Rediscover Microsoft’s Soul and Imagine a Better Future for Everyone என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.