சென்னையில் தொடங்கிய சைக்கிள் நிறுவனம் நாசிக் சென்று வெற்றி கண்ட கதை!
பெங்களூரு மற்றும் நாசிக்கில் அலுவலகம் கொண்ட பகிர்வு போக்குவரத்து சேவை நிறுவனமான Tilt, வர்த்தக நிறுவன வளாகங்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் தனக்கான தனி இடத்தை தேடிக்கொண்டுள்ளது.
வெற்றிகரமான பல ஸ்டார்ட் அப்களை போல, டில்ட் (Tilt ) 2016ல் கல்லூரி திட்டமாக துவங்கியது. அப்போது அது பெடல் என அழைக்கப்பட்டது.
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் பயின்று கொண்டிருந்த அதன் நிறுவனர் தீபக்.வி.எஸ், பாஸ்டன் மற்றும் பாரீஸ் ஆகிய நகரங்களில் செயல்படும் நல்ல போக்குவரத்து தீர்வுகளால் ஊக்கமடைந்து, அது போன்ற தீர்வை இந்திய நகரங்களுக்கு வழங்க விரும்பினார்.
இதே கால கட்டத்தில் சீனாவில், ஓபோ, மோபைக் போன்ற ஸ்டார்ட் அப்கள் மூலம் சைக்கிள் ஷேரிங் பிரபலமாகிக் கொண்டிருந்தது. ஆனால் இத்தகைய போக்குவரத்து இன்னமும் இந்தியாவில் பிரபலமாகவில்லை. எனவே, தீபக் சிறிய அளவில் துவங்க விரும்பி, எஸ்.ஆர்.எம் வளாகத்திற்குள் பயணிப்பதற்கான பைக் அமைப்பை உருவாக்கினார்.
டிசிஎஸ் நிதி
2016ல், தீபக் தனது நண்பர்களுடன் சிலருடன் இணைந்து, முன்னோட்ட வடிவம், கருத்தாக்க வடிவம் மற்றும் வன்பொருள் அமைப்புகளை பரிசோதிக்கத்துவங்கினார்.
“பல்கலைக்கழகத்தில் இருந்து சிறிய தொகையை திரட்டியதோடு, சென்னையில் உள்ள சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர்கள் முதல் கட்ட சைக்கிள்கள் கொடுத்தனர். அதை கொண்டு முதல் 9 மாதங்களுக்கு முன்னோட்ட சேவையை வழங்கினோம்,” என்கிறார் தீபக்.
”சைக்கிள் பகிர்வு முறை குறித்து புரிந்து கொள்ள இந்த முன்னோட்ட திட்டம் உதவியது. மக்கள் உண்மையில் சைக்கிள் பயன்படுத்த விரும்புகின்றனரா?, அவர்கள் தேவை என்ன? அவர்களுக்கு பிடித்த வண்ணங்கள் எவை? என்று அறிந்து கொள்ள கருத்துக்கணிப்புகள் நடத்தினோம்” என்கிறார் அவர்.
ஆனால், மென்பொருளை உருவாக்குவதை விட, வன்பொருள் சார்ந்த தயாரிப்பை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. “இது மிகவும் மெதுவான செயல்பாடாக இருந்தது. நுணுக்கமான திட்டமிடல் தேவைப்பட்டது” என்கிறார் தீபக். நிறைய ஆய்வு பணிகள் தேவைப்பட்டன. பாகங்களை வாங்கி, முன்னோட்ட வடிவத்தை பேப்ரிகேட் செய்வது செலவு மிக்கதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, இக்குழுவுக்கு, டிசிஎஸ் பவுண்டேஷன் டிஜிட்டல் முயற்சிகள் தலைவரின் அறிமுகம் கிடைத்தது. 2017ல் மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பவுண்டேஷன் முயற்சியான டிஜிட்டல் இம்பேக்ட் ஸ்கொயர் திட்டத்தில் பெடல் உருவாக்கப்பட்டது.
சிறிய தொகை திரட்டிக்கொண்டு, டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட நாசிக் சென்றோம் என்கிறார் தீபக்.
சீரான வளர்ச்சி
2017 முதல் 2019 வரை, Tilt நாசிக் நகராட்சி மற்றும் நாசிக் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து சிறிய முன்னோட்ட திட்டங்களை மேற்கொண்டது. மேலும், புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் வளாகம் மற்றும் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜூப்லி பார்க் ஆகியவற்றில் தனது வாகனங்களை இயக்கியது. இதனிடையே பெடல், டில்ட் என மாறியது.
“ 2018 ஆரம்ப காலத்தில், சைக்கிள் பகிர்வு சேவையில் இருந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து தீர்வாக வளர்ச்சி அடைந்தோம். அதே நேரத்தில், மின்சார வாகனங்களை சேர்த்துக்கொண்டோம். இந்த பரந்த பார்வை, பெடல் நிறுவனத்தை டில்ட் என மாற்றிக்கொள்ள வைத்தது,” என்கிறார் தீபக்.
இப்போது, டில்ட் நாடு முழுவதும் வளாகங்களில் வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களில் 25,000 பயனாளிகளுடன், 60,000 மணி நேர சைக்கிள் பயன்பாட்டை கொண்டுள்ளது. ஒரு பயனாளி தினமும் ஆறு முறை சைக்கிள் பயணம் செய்கிறார். தனது சைக்கிள் பயன்பாட்டு விகிதத்தை இரு மடங்காக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதல் இரண்டு மாத செயல்பாட்டின் போதே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 2,000 முறைக்கு மேல் இந்த சைக்கிள்களை பயன்படுத்தினர். அதன் பிறகு, நிறுவனத்தின் வேறு பிரிவுகளும் சைக்கிள் தேவை என கோரிக்கை வைத்ததால் சைக்கிள்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
’பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து, குறுகிய தொலைவு செல்பவர்களை நீண்ட தொலைவுக்கு பயன்படுத்த முயன்று வருகிறோம்” என்கிறார் தீபக்.
வருவாய் வழி
இந்தியாவில் உள்ள மற்ற பகிர்வு போக்குவர்த்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போல அல்லாமல், டில்ட் ஒரு பி2பிசி நிறுவனமாகும். இது நிறுவனங்கள், நகராட்சிகள் மற்றும் நகரியங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இவை நிறுவன சைக்கிள்களை பயன்படுத்துகின்றன. ஊழியர்கள் அல்லது உறுப்பினர்கள் தங்கள் அடையாள அட்டை மூலம் சைக்கிள்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
” வளாகங்கள் மிகப்பெரிய வாய்ப்பாக அமைகின்றன. இந்தியாவில் மொத்தம் 10,000 வரத்தக நிறுவன வளாகங்கள் உள்ளன. இந்த பரப்பில் எங்களுக்கான இருப்பை உருவாக்கிக் கொண்டுள்ளோம். டாடா குழுமம் மூலம் சென்றடைந்த பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்கிறார் தீபக்.
டில்ட், சைக்கிகள், இ-சைக்கிள்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் சிறு பஸ்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. “ஒவ்வொரு வளாகமும் மாறுபட்ட தேவையை கொண்டிருக்கும். எல்லோருக்கும் ஒரே வகை தீர்வு பொருந்தது,” என்கிறார் தீபக்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனம் தனது வாகனங்கள் எண்னிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதில் 30 முதல் 40 சதவீதம் மின்வாகனங்களாக இருக்கும். மேலும் தொழில்நுட்ப காப்புரிமைக்கும் நிறுவனம் விண்னப்பித்து காத்திருக்கிறது.
சொந்த நிதியில் இயங்கி வரும் நிறுவனம், நிறுவன பயனாளிகள் மற்றும் டில்ட் செயலி மூலம் பயன்படுத்தும் உறுப்பினர்களிடம் இருந்து சந்தா மூலம் வருவாய் ஈட்டுகிறது.
பகிர்வு போக்குவரத்து
ஒரு சில தேவதை முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டிருந்தாலும், டில்ட் இப்போதைய நிலையில் தனது பங்குகளை அளிக்கத் தயாராக இல்லை.
“நாங்கள் வியூக நோக்கிலான முதலீட்டை எதிர்பார்க்கிறோம். மதிப்பீட்டு குமிழை உருவாக்க விரும்பவில்லை,” என்கிறார் தீபக்.
பகிர்வு போக்குவரத்து துறை இப்போது நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் இந்தத் துறை இருப்பிடம் செல்வதற்கான போக்குவரத்தில், 2030ம் ஆண்டில் 35 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம் என மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
இந்தச் சூழலில், வர்த்தக நிறுவனம் சார்ந்த மாதிரி தங்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்பை அளிக்கும் என டில்ட் நம்புகிறது.
”மற்ற நிறுவனங்கள் இந்திய சாலைகளை சைக்கிள்களை நிறைக்கும் சீன மாதிரியை பின்பற்றும் நிலையில், நாங்கள் பொறுப்பான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் தீபக்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில் : சைபர்சிம்மன்