சிறிய வெற்றிகளையும் பாராட்டுங்கள், அதற்கு அதிகம் செலவு ஆகாது...
மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த ஷாம்பு பாக்கெட்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்த சாஷே கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர், பணக்காரர்களுக்கு கிடைப்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் தொலைநோக்குடன் யோசித்த ஒருவர்.
இந்த மனிதர் வேறு யாருமில்லை, 1.5 கோடி வேலை வாய்ப்புகளுக்கு மேல் உருவாக்கிய சாஷே புரட்சியை கொண்டு வந்த மறைந்த சின்னி கிருஷ்ணன் தான். அவரது மகன்களான சி.கே.ரங்கநாதன், கெவின்கேர் நிறுவனத்தை நிறுவியவர் தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி, ஷாம்பு வர்த்தகத்தை பல கோடி வர்த்தமாக மாற்றினார். தந்தை பெயரிலான சிக் ஷாம்பு, நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக இருக்கிறது.
கடந்த வார துவக்கத்தில், யுவர்ஸ்டோரி, மறைந்த சின்னி கிருஷணனுக்கு, அவரது பங்களிப்பிற்காக லெஜெண்ட் ஆப் டிஸ்ரப்ஷன் விருதை வழங்கிய போது, அவர் சார்பாக மகன்கள், சி.கே.ரங்கநாதன், சி.கே.குமரவேல், சி.கே.அசோக்குமார் மற்றும் சி.கே.ராஜ்குமார் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக மேடைக்கு வந்து விருதை பெற்றுக்கொண்டது அருமையான தருணமாக அமைந்தது.
மறைந்த தங்கள் தந்தைக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று அவர்கள் தெரிவித்தனர். மிகவும் உணர்ச்சியமயமாக காணப்பட்ட மகன்கள், தங்கள் தந்தை மற்றும் அவர் நம்பிய எளிய கொள்கையை விளக்கினர்:
“பணக்காரர்கள் அனுபவிக்கும் எல்லாம், சாமானிய மனிதர்களும் வாங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.”
இதுவே மறைந்த சின்னி கிருஷ்ணனின் தாத்பரியமாக இருந்ததாம்.
சின்னி கிருஷ்ணனின் கண்டுபிடிப்பு நீண்ட நீடித்த தாக்கத்தை செலுத்தி வரும் நிலையிலும், ஒரு தேசமாக அவரை நாம் உரிய வகையில் கவுரவிக்கவில்லை. இது என் மனதில் இந்த கேள்வியை எழுப்பியது.
நாம் ஏன் நமது நாயகர்களை கொண்டாடுவதில்லை? இந்தியாவுக்கு வெளியே உள்ள நாயகர்களை கொண்டாடுவதில் வேகம் காட்டும் நாம் ஏன், நம் மத்தியில் உள்ள நாயகர்களை அங்கீகரித்து கொண்டாட மறுக்கிறோம்?
எளிமையான உதாரணம் ஒன்றை அளிக்கிறேன். இப்போதெல்லாம் கல்லூரிகளில் உள்ள அடைகாக்கும் மையங்களின் சுவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் மஸ்க் மற்றும் மார்க் ஜக்கர்பர்க் உள்ளிட்ட சர்வதேச சாதனையாளர்களின் படங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. இப்படி செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நாம் ஏன் சுவர்களில் நம்முடைய சாதனையாளர்கள் மற்றும் நாயகர்கள் படங்களை இடம்பெறச்செய்வதில்லை?
பாராட்டுங்கள்; அதற்கு அதிக செலவு ஒன்றும் ஆகிவிடாது...
பாராட்டாக சில வார்த்தைகள், கொஞ்சம் கொண்டாட்டம், அவர்களின் பங்களிப்பை கொஞ்சம் அங்கீகரிப்பதற்கு எதுவும் செலவு ஆகப்போவதில்லை. இதற்கு நாம் தாராள மனதுடன் நடந்து கொண்டால் போதும்.
நம்மிடம் உள்ள ஃபெராரி கார் அல்லது வேறு விலை உயர்ந்த பொருட்களை எதையும் விற்று தாராளமாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நம்முடைய செயல், சிந்தனை, வார்த்தைகளில் அதை வெளிப்படுத்தினால் போதும். இது நமக்குள் இருப்பது தான், ஆனால் முடிவில்லா ஒப்பீடுகளை துரத்திச்செல்வது மூலம் இதைத் தவறவிடுகிறோம்..
நம்முடைய இலக்குகள் இன்னமும் எட்டப்படாத நிலையில், இலக்கு என்பது யூனிகார்னாக வேண்டும் என்றோ, அடுத்த சுற்று நிதி திரட்ட வேண்டும் என்றோ, பெரிய ஒப்பந்தம் பெற வேண்டும் என்றோ, நிர்ணயித்துக்கொண்ட டவுண்லோடுகளை அடைய வேண்டும் என்றோ அல்லது பெரிய இலக்குகளுக்குள் சிறிய இலக்காக இருந்தாலும், அவை எட்டப்படாத நிலையில் கொண்டாட என்ன இருக்கிறது என (சரியாக) கேட்கலாம் என்பது எனக்குத் தெரியும் தான்.
ஆனால் ஒரு நிமிடம் நிதானமாக யோசிக்கவும். நாம் தினமும் பெறும் சிறிய வெற்றிகள் என்னாகின்றன? நாம் அந்த வெற்றிகளையாவது கொண்டாடுகிறோமா? நம்மையும், இந்த தினசரி வெற்றிகளை சாத்தியமாக்குபவர்களையும் நாம் பாராட்டிக்கொள்கிறோமா?
உண்மை என்னவெனில், வார்த்தைகள், சிந்தனை மற்றும் செயல்களில் தாராள தன்மை என்பது நம்மிடம் இருந்து துவங்க வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு, நம் வாழ்க்கையில் நாயகர்களாக இருப்பவர்களுக்கு நம்முடைய பாராட்டுகளை தெரிவிப்போம்.
நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் கொண்டாடுவது எளிதானது அல்ல என எனக்குத்தெரியும். ஆனால் தயவு செய்து இவ்வாறு செய்யுங்கள். நம்முடைய சிறிய வெற்றிகளை நாம் நேசித்து கொண்டாடும் போது, நம்மைச்சுற்றி இருப்பவர்களின் வெற்றியை அதிகம் நேசித்து கொண்டாட முடியும்.
அன்னை தெரேசா மேற்கொள் தான் என் நினைவுக்கு வருகிறது:
“ரொட்டியை விட உலகில் அன்பு மற்றும் பாராட்டுக்கான பசி தான் அதிகம் உள்ளது...”.
ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ரத்தா சர்மா | தமிழில்; சைபர்சிம்மன்