'சாஷே' அறிமுகப்படுத்திய மறைந்த சின்னி கிருஷ்ணனுக்கு 'லெஜன்ட்’ விருது!
YourStory Disruptors Tamil Nadu 2018 நிகழ்ச்சியின் சிறப்பம்சமான ’The Legend of Disruption’ விருது, பொருட்களை ’சாஷே’ வடிவில் அறிமுகப்படுத்தியதற்காக மறைந்த சின்னி கிருஷ்ணன் அவர்களுக்கு இவ்விருது வழங்கி கௌரவித்தது யுவர்ஸ்டோரி.
இந்த ஆண்டு முதல் முறையாக யுவர்ஸ்டோரி அறிமுகப்படுத்தியுள்ள ’YourStory Disruptors Tamil Nadu 2018’ நிகழ்ச்சி, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பலருக்கு உந்துதலளித்த முன்மாதிரியான நபர்களை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதாகும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட போது, அந்த அரங்கம் முழுவதும் நம்பிக்கையும் ஊக்கமும் நிரம்பியிருந்தது.
இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். உற்பத்தி, பத்திரிக்கைத் துறை, கலை, பொழுதுபோக்கு, இலக்கியம், தொழில்நுட்பம், இசை, விளையாட்டு, மின்வணிகம், சமூக சேவை, உணவு மற்றும் பானங்கள், ஆட்சிமுறை, அரசியல், விவசாயம் மற்றும் சேவைகள் போன்ற வெவ்வேறு பிரிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சின்னி கிருஷ்ணன் – Legend of Disruption
1970-களில் புதுமையாக சிந்தித்து சாஷேவை அறிமுகப்படுத்தி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி புரட்சி செய்த மறைந்த சின்னி கிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக்கும். இன்றைய சில்லறை வர்த்தக பேக்கேஜிங் உலகில் சாஷே என்பது தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது. சந்தையில் புதுமை படைத்த இந்த கண்டுபிடிப்பாளரை நாற்பதாண்டுகளுக்குப் பிறகு யுவர்ஸ்டோரி ’Legend of Disruption’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
மறைந்த சின்னி கிருஷ்ணன் அவர்கள் தனது புதுமையான கண்டுபிடிப்பு மூலம் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்ததற்கும் ஒட்டுமொத்த எஃப்எம்சிஜி மற்றும் நுகர்வோர் துறைக்கும் உந்துதலளித்ததற்கும் Legend of Disruption விருது வழங்கி யுவர்ஸ்டோரி கௌரவித்தது.
சின்னி கிருஷ்ணனின் மகன்களான சி.கே. ராஜ்குமார், சி.கே, அசோக் குமார், சி.கே. ரங்கநாதன், சி.கே. குமரவேல் ஆகிய நால்வரிடமும் இந்த விருதினை வழங்கினார் க்ரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவனர் பேராசிரியர் பாலா வி. பாலசந்திரன்.
சிகே அசோக் குமார் கூறுகையில்,
”இது என்னுடைய அப்பாவிற்கு கிடைத்த முதல் விருது. ஒரு நாள் இந்த சாஷே கண்டுபிடிப்பு நம் குடும்பத்தை உலகமே அறியச் செய்யும் என்று என் அப்பா என்னிடம் கூறுவார்,” என்றார்.
எஃப்எம்சிஜி துறையின் பிரபல நிறுவனமான கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் கூறுகையில்,
”பணக்காரர் ஒருவர் அனுபவிக்கும் எந்த ஒரு விஷயமும் ஒரு சாமானியரையும் சென்றடையும் விதத்தில் மலிவு விலையில் கிடைக்கவேண்டும் என்பதே என் அப்பாவின் கனவாக இருந்தது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
”அப்பா பல பொருட்களை சாஷேவில் பேக் செய்தார். அதில் ஒன்றுதான் ஷாம்பூ. இது இன்றைய அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியதுடன் மிகப்பெரிய எஃப்எம்சிஜி ஜாம்பவான்களின் பேக்கிங் ஸ்ட்ராடெஜியாகவும் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
அத்துடன் சாஷே 1.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
சாஷே அறிமுகமானதன் பின்னணி
சின்னி கிருஷ்ணன் இளம் வயதான 48 வயதிலேயே உயிரிழந்தார். ”என்னுடைய அப்பா மாதத்திற்கு 5,000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே ஈட்டிவந்தார்,” என்று சி.கே. ரங்கநாதன் குறிப்பிட்டார்.
சின்னி கிருஷ்ணன் இறந்தபோது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இரண்டு லட்ச ரூபாய் கடனுடன் இந்த வணிகம் இருந்தது. ”வணிக ரீதியான புரிதல் எங்களில் யாருக்கும் இல்லை,” என்றார் ரங்கநாதன். எனவே சகோதரர்கள் நால்வரும் வணிகத்தை மூடிவிட தீர்மானித்தனர்.
இவர்கள் வங்கியை அணுகியபோது கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லையெனில் அடமானம் வைக்கப்பட்ட அவர்களது வீடு ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர். வீடு ஏலத்தில் விடப்படுவதைத் தவிர்க்க மருத்துவராக இருந்த மூத்த மகன் ராஜ்குமாரும் வழக்கறிஞராக இருந்த அசோக்குமாரும் தங்களது பணியை விட்டு விலகி நிறுவனத்தை நடத்த முடிவு செய்தனர்.
”அதன் பிறகு நடந்த அனைத்தும் அனைவரும் அறிந்ததே,” என்றார் ரங்கநாதன்.
இறுதியாக வெல்வெட் இண்டர்நேஷனல் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விரிவடைந்து சிறப்பாக செயல்பட்டது. தனது அப்பா படைத்த புதுமையை தனது வணிகத்தில் புகுத்தி இன்றளவும் அதைத் தொடர்ந்து வருகிறார் சி.கே. ரங்கநாதன்.
சின்னி கிருஷ்ணன் எவ்வாறு முதல் முதலாக சாஷேவை உருவாக்கினார்?
பிவிசி ஃபோல்டர்களை சீல் செய்ய உதவும் இயந்திரத்தை முதலில் மாற்றியமைத்தார். அதன் பிறகு செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படுத்தப்படும் ட்ரான்ஸ்பரண்ட் பைப்பை எடுத்துக்கொண்டார். ட்ரான்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக்கின் ஒரு முனையை மூடிவிட்டு தண்ணீரை நிரப்பினார். பின்னர் மற்றொரு முனையையும் சீல் செய்தார். இப்படித்தான் சாஷே உருவானது. ஆனால் அதைத் திறப்பது கடினமாக இருந்தது.
ஆய்வக லீக்கேஜ் கிட்டை வாங்கி அதிலிருந்து சாஷே உருவாக்கினார். அந்த சாஷேக்களில் தேங்காய் எண்ணெய், தேன், ஷாம்பூ ஆகியவற்றை பேக் செய்தார். முதலில் இந்த மூன்று தயாரிப்புகள் மட்டுமே சாஷேயில் விற்பனை செய்யப்பட்டது. இவர்களது சொந்த ஊரான கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இந்த சாஷேக்களை விற்பனை செய்யத் துவங்கினார்.
”என் சகோதரர்களே இதை இந்தியா முழுவதும் மட்டுமல்லாது அதைத் தாண்டியும் எடுத்துச் சென்றனர்,” என்றார் ரங்கநாதன்.
இந்த வணிகம் நிலைத்திருக்கக் காரணமான ஊழியர்களுக்கு ராஜ் குமார் நன்றிகளோடு பாராட்டினார். அவர் கூறுகையில், “பின்னாளில் மிகப்பெரிய நிறுவனமாக உருவானபோதும் நாங்கள் துவங்கியபோது ஒன்றிரண்டு பேர் மட்டுமே இணைந்திருந்து இதை சாத்தியப்படுத்தினர்,” என்றார்.
சாஷே என்கிற ஒற்றை யோசனையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றதற்காக ரங்கநாதனை பாராட்டினார்.
”நாங்கள் துவங்கியபோது 5 கோடி ரூபாயாக இருந்த ஷாம்பூ துறை இன்று 9,000 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது. உறவினர்கள் பலர் வணிகத்தை மூடிவிடுமாறு அறிவுறுத்தினர் ஆனால் அவரிடம் அசைக்கமுடியாத மன வலிமை இருந்தது,” என்றார்.
தலைமுடி முறையாக பராமரிக்கப்படாமல் சாலையில் சுற்றித்திரிந்த குழந்தைகளைக் கண்டபோதுதான் பணக்காரர்கள் அனுபவிக்கும் விஷயங்கள் ஏழை மக்களிடம் சென்றடையும் நிலையில் இருக்கவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டதாக அவர் விவரித்தார்.
”தன்னலமின்றி மற்றவர்களுக்காக வாழ்பவர்களும் அவர்களது கண்டுபிடிப்பும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கும்,” என்றார் ராஜ்குமார்.
ஆங்கில கட்டுரையாளர் : வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி | தமிழில் : ஸ்ரீவித்யா