ஆரோக்கிய உணவை நோக்கி மக்களை கொண்டு செல்லும் பொறியியல் பட்டாதாரி!
கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் என இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய உணவை உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக பெற்று குறைந்த விலையில் விற்கிறார் சோமசுந்தரம்.
தற்பொழுது அதிகம் பேசப்பட்டு வரும் தலைப்பு ஆர்கானிக் பொருட்கள் மற்றும் இயற்கை விவசாயம். நாகரிகம் வளர வளர நாம் இயற்கையை மறந்து தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிவிட்டோம். இதனால் இயற்கை உணவையும் மறந்து பல கலப்பட உணவை உண்ணுகிறோம். இதனால் ஆர்கானிக் விவசாயம் மீண்டும் தலைதூக்கி பலர் இதில் ஈடுப்படுகின்றனர். அந்த வகையில் பல ஆர்கானிக் தயாரிப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் HC ஆர்கானிக் என்னும் நிறுவனத்தை துவங்கியுள்ளார் சோமசுந்தரம்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் ஒரு பொறியியல் பட்டதாரி. சிறு வயது முதலே சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று கனவோடு இன்று நிறுவனம் நிறுவியுள்ளார்.
“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம். பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வி அடைந்து இருக்கிறேன்,”
என பேசத் துவங்குகிறார் இவர். 2013-ல் கல்லூரி படிப்பை முடித்த இவர் ஒரு வருடம் மும்பையில் தன் படிப்புக்கு ஏற்ற வேலையில் பணிபுரிந்தார். ஆனால் தொழில்தொடங்கும் நோக்கத்தோடு மீண்டும் சேலத்திற்கு வந்துவிட்டார். அதன் பின் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுப்பட்டார். ஆனால் அதிலும் அவர் கண்டது தோல்வியே.
“என் தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்டது பலரும் செய்யும் தொழிலை நாமும் செய்தால் வெற்றிபெற இயலாது என்று. நமக்கு என்று ஒரு வித்தியாசமான பாதையை உருவாக்க வேண்டும் என்பதுதான்...”
அவர் தழுவிய தோல்விக்கு பிறகு, மக்கள் ஆரோக்கியத்திற்கும், மக்களின் முக்கிய சிக்கல்களை தீர்க்கும் வகையில் தொழில் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன் பின் தோன்றியதே இந்த ’HC ஆர்கானிக்’ நிறுவனம். தான் முன்னே செய்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணம் இன்றி இருந்த சோமசுந்தரம், தன் நண்பரின் கடன் உதவியோடு இந்நிறுவனத்தை துவங்கினார்.
ஆர்கானிக் பொருட்கள் விற்பனை என்ற தன் தொழில் யோசனையை பகிர்ந்தவுடன் தன் உடன் இருந்த பலர் இது லாபம் ஈட்டாது என விலகிக்கொண்டனர். அதனால் துணை நிறுவனர்கள் இல்லாமல் தனியாக இயக்கி வருகிறார். இந்நிறுவனத்தை துவங்கக் காரணமாக இருக்கும் தன் பின்னணி கதையை விளக்குகிறார்.
“கூலி தொழிலாளர்களாய் இருக்கும் என் பெற்றோர்கள் அந்த காலத்தில் 20கீமி நடப்போம், நோய் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறுவார்கள். அதற்கு முக்கியக் காரணம் உணவு தான்.”
இரசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, குதிரைவாலி, செக்கில் ஆட்டிய எண்ணைய் அவர்கள் சாப்பிட்டார்கள் நோய் இல்லாமல் இருந்தார்கள், ஆனால் நாம் இரசாயணம் உரத்தை கலந்த உணைவை தான் சாப்பிடுகிறோம், இதை மாற்ற வேண்டும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவேண்டும் என்பதே என் நோக்கம் என்கிறார் இவர்.
பலர் எதிர்க்க, கேலி செய்ய கடந்த மார்ச் மாதம் 100 சதுர அடியில் இந்நிறுவனத்தை துவங்கினார். இ-காமர்சை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைனில் ஆர்கானிக் பொருட்களை விநியோகம் செய்கிறார். இயற்கையான முறையில் எந்த ஒரு ரசாயனம் இல்லாத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்பவர்களையும் இந்நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. இயற்கை உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் இயற்கையை பாதிக்காத பொருட்களான பாக்குமட்டை தட்டு, மண் பானை போன்ற Eco product தயாரிப்புகளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
“இதன் மூலம் மக்களுக்கு நேரடியாக ஆரோக்கியமான பொருட்களை கொண்டு சேர்க்க முடிகிறது. மேலும் மக்களுக்கு இயற்கைப் பொருள் பற்றிய விழிப்புணர்வையும் எங்களால் கொடுக்க முடிகிறது,” என்கிறார்.
தற்பொழுது ஆப்லைனில் முழுமையாக இயங்குகிறது. அதன் முலம் விற்பனையில் ரூ.8000 லாபம் ஈட்டுகிறது இந்நிறுவனம். முழுமையான ஆன்லைன் பயன்பாடு விரைவில் துவங்கும் என கூறினார். மேலும் ஆன்டிராய்ட் ஆப்-ஐ விரைவில் கொண்டு வர உள்ளனர். சில மாதங்களுக்கு முன் துவங்கி இருந்தாலும் கூட 120 வாடிக்கையாளர்களை தங்களுடன் இணைத்துள்ளனர் இவர்கள். மேலும் 40 விற்பனையாளர்களும், விவசாயிகளும் விற்பனை செய்து கொண்டு வருகின்றனர்.
“எங்கள் நிறுவனம் மூலம் அனைத்து வித மக்களுக்கும் இயற்கையான ஆரோக்கியமான உணவு எளிதிலும் விலை குறைவாகவும் கிடைக்கும். மேலும் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும் கிடைக்கும்,”
என நம்பிக்கையுடன் பேசுகிறார் சோமசுந்தரம். மக்களின் கருத்துகளை புரிந்துகொண்டு மக்களின் முழு திருப்திக்காக விநியோகத்திற்கு பின் பணம் பெரும் வசதி, பொருளை திரும்ப கொடுக்கும் வசதி மற்றும் பணம் திரும்ப பெரும் வசதியையும் கொடுத்து உள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் நலம் பெரும் வகையில் உள்ளது. விவசாயிகள் நேரடியாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும். மேலும் ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்வதால் உலகின் மண் வளமும் காக்கப்படும்.
ஒரு விவசாயி அவர்களின் பொருட்களை ஒரு தரகர் மூலம் விற்பனை செய்வதால் 20% முதல் 40% வரை அவர்களின் பொருட்களின் விலையை குறைத்துத் தரவேண்டி இருக்கும், ஆனால் இந்நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பொது மிகக் குறைந்த சேவை கட்டணமாக (14%) மட்டுமே பெறப்படுகிறது.
”விவசாயிகள் அவர்களின் பொருட்களின் விலையை அவர்களே தீர்மானிக்க முடியும், இதனால் விவசாயிகளும் அதிக லாபத்தில் பொருளை விற்க முடியும். மக்களும் குறைந்த விலையில் இயற்கைப் பொருட்களை வாங்க முடியும்,” என முடிக்கிறார் சோமசுந்தரம்.
இன்னும் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறவில்லை, அவர்களுக்கு இயற்கை விவசாயத்தை பற்றி எடுத்துரைக்க வேண்டும் என விரும்புகிறார் இவர். வரும் ஆண்டுகளை ஆரோக்கியமானதாக வி்ழைகிறார் இந்த இளைஞர்.
வலைதள முகவரி: HC ஆர்கானிக்