பொதுத்தேர்வில் 97% எடுத்துள்ள ஷூ விற்பனையாளர் மகள்!
நடைபாதையில் ஷூ விற்பனை செய்பவரின் மகளான மது ஆர்யா மேற்படிப்பிற்கு அரசாங்கத்தின் உதவியை நாடுகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்கள், குறிப்பாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கபப்ட்டனர்.
எனினும் முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை மதிப்பிட்டு அதனடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீர்மானித்தது. இத்தகைய கடினமான சூழல்களிலும் பல மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அத்தகைய மாணவர்களில் ஒருவர்தான் மது ஆர்யா. இவர் மத்தியப்பிரதேசத்தின் ஷியாபூரைச் சேர்ந்தவர். இவர் 97 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அறிவியல் பாடத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
மதுவின் அப்பா ஷூ விற்பனை செய்கிறார். இருப்பினும் மது நன்றாகப் படித்து மத்தியப்பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய மேல்நிலை வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 485 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
“நான் கடினமாக உழைத்தேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை படிப்பேன். மருத்துவர் ஆகவேண்டும் என்று விரும்புகிறேன். நீட் தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகிறேன். என் பெற்றோரும் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். என் மேற்படிப்பிற்கு என் அப்பாவால் செலவிட முடியாது. இதற்காக அரசாங்கத்தின் தரப்பில் உதவி கோருகிறேன்,” என்று மது ஏஎன்ஐ-இடம் தெரிவித்துள்ளார்.
மதுவின் உடன் பிறந்தோர் ஐந்து பேர். பெற்றோர்களுடனும் உடன் பிறந்தவர்களுடனும் வசித்து வருகிறார் மது. குடும்பத்தின் ஏழ்மை நிலையால் வருங்காலத்தை நினைத்து இவர் கவலைப்படுகிறார்.
இவரது அப்பா உள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபாதையில் ஷூக்கள் விற்பனை செய்கிறார். மதுவின் மேற்படிப்பு அரசாங்கத்தின் உதவியினால் மட்டுமே சாத்தியப்படும் என்கிறார் மதுவின் அப்பா.
“என் மகளின் கனவை நனவாக்க நான் உதவ விரும்புகிறேன். ஆனால் என்னுடைய ஏழ்மை நிலை அதற்குத் தடையாக உள்ளது,” என்கிறார்.
இவரது வெற்றியைப் பாராட்டிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,
“மகள் மதுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் தாய்மாமன் சிவராஜ் இருக்கும்வரை நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. உங்களது லட்சியத்தை நீங்கள் அடைய என்னுடைய அரசாங்கம் அனைத்து விதங்களிலும் துணை நிற்கும். உங்கள் கனவு நிச்சயம் பலிக்கும். என்னுடைய ஆசீர்வாதங்கள்,” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA