உலக அரங்கு கால்பந்தாட்டத்தில் கால்பதிக்கும் கைத்தறித் தொழிலாளர்கள் மகள் மாரியம்மாள்!
இளையோர் இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வாகி சாதனைப் படைத்துள்ளார் நாமக்கல்லைச் சேர்ந்த +2 மாணவி.
பொதுவாக ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று தனது நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்பதுதான். இத்தகைய ஓர் வாய்ப்பைத்தான் சமீபத்தில் பெற்றிருக்கிறார் தமிழகத்தில் உள்ள நாமக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவியான மாரியம்மாள்.
தனது ஆர்வத்தாலும், விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் இவர், 2020ல் பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) நடத்தும் இளையோருக்கான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கிறார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் – காந்திமதி தம்பதியின் மகளான மாரியம்மாள் நாமக்கல் அரசினர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
தனது வெற்றிப் பயணம் குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,
”எனது பெற்றோர் கைத்தறி தொழிலாளர்கள். என் சகோதரர் திருச்சியில் உள்ள ஓர் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் ஓர் கால்பந்தாட்ட வீரர். அவரைப் பார்த்துதான் எனக்கும் கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் உண்டானது. உலக அளவில் கால்பந்தில் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.”
தொடக்கத்தில் நான் கால்பந்து விளையாட்டில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது பெற்றோர், எனது ஆர்வத்தைப் பார்த்து எனக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர்.8ஆம் வகுப்பு படிக்கும்போதே, நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற்றுக் கொண்டே படித்தேன். 5 வருடங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். தற்போது பிளஸ் 2 படித்துவரும் நிலையிலும் காலை, மாலை என இருநேரமும் கடும் பயிற்சியில் ஈடுபடுவேன்.
ஒரிஸா, மணிப்பூர், தெலுங்கானா, மஹாராஷ்டிரம், கோவா போன்ற மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் நாமக்கல் அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம். இந்நிலையில் 2018ல் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் கால்பந்துப் போட்டியில் நான் அடித்த 12 கோல்களே எங்களது அணியில் வெற்றிக்கு வழிவகுத்தது.
இதையடுத்து, 17 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துவிட்டது.
பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலா மற்றும் ஒரிஸாவில் உள்ள கட்டாக் போன்ற இடங்களில் 25 நாள்கள் பயிற்சி பெற்றேன். இப்பயிற்சியில் களத்தில் எப்படி நின்று உறுதியுடன் விளையாடவேண்டும், பந்தை எவ்வாறு சக வீரர்களுக்கு கடத்தவேண்டும் என்பன போன்ற கால்பந்தாட்ட விளையாட்டின் நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
ஜெர்மனி, பூடான், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளேன். குடும்பச்சூழல் காரணமாக கால்பந்து விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவது சற்றுக் கடினமாக உள்ளது, என்கிறார் மாரியம்மாள்.
ஆனாலும், அரசு அளிக்கும் உதவியாலும், எனது பயிற்சியாளர் கோகிலா அளிக்கும் ஊக்கத்தாலும், எதிர்காலத்தில் கால்பந்தாட்டத்தில் உலக அளவில் ஜொலிக்கவேண்டும் என்ற லட்சியத்தில் விளையாடுகிறேன் என்கிறார்.
2020-ல் நடைபெறும் 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து நான் மட்டுமே தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியளித்தாலும், மற்ற மாநில மொழிகளைப் பேசும் வீராங்கனைகளுடன் தொடர்பு கொள்வது சற்று கடினமாக உள்ளது. ஆனாலும் எவ்வித தடைகளையும் தாண்டி வெல்லமுடியும் என்ற மன உறுதியுள்ளது என்கிறார் அவர்.
பயிற்சிக்காக தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் பள்ளிக்குச் சரிவர செல்ல இயலவில்லை. எனவே, விடுதியில் இருந்தவாறே கல்வி கற்க அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறும் மாரியம்மாள்.
எதிர்காலத்தில் உலக அளவில் மிகச் சிறந்த கால்பந்தில் வீராங்கனையாகவும், பயிற்சியாளராகவும் வருவதே தனது லட்சியம் என்கிறார்.
பெண் குழந்தைகள் கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டு உலகிலும் தங்களது சிறகுகளை விரித்து வெற்றிகளை குவித்து வரும் காலமிது. இத்தகைய விளையாட்டுகளில் பங்கேற்பதால் அவர்களின் மனமும், உடலும் உறுதியடைவதோடு, கிடைக்கும் வெற்றிகளின் மூலம் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை கிடைக்கிறது.
இன்னும் இவரைப் போன்ற விளையாட்டுத் துறையில் திறமையானவர்கள் ஏராளமானோர் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளனர். அவர்களை சரியாக அடையாளம் கண்டு முறையாகப் பயிற்சியளித்தால்போதும், நாமும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக் கொண்டு வரலாம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.