சமூக ஊடகக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க, தில்லி நீதிமன்றம் மறுப்பு!
பொய் கணக்குகளை கண்டறிவதற்காக, சமூக ஊடக கணக்குடன், ஆதார் அல்லது பான் எண்ணை இணைக்க உத்தரவிட கோரும் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொய் கணக்குகளை கண்டறிவதற்காக, சமூக ஊடகக் கணக்குகளை, ஆதார், பான் அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க உத்தரவிட முடியாது என தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிக அளவில் இருக்கும், உண்மையான பயனாளிகளின் தரவுகள் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல இது வழிவகுக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக சேவை கணக்குகளுடன் ஆதார், பான் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை இணைப்பது கொள்கை முடிவு எடுப்பது அல்லது ஏற்கனவே உள்ள சட்டங்களை திருத்துவது ஆகியவை தேவைப்படக் கூடியது என்றும் இதை நீதிமன்றம் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் டி.என்.பட்டேல், சி.ஹரிசங்கர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.
"சட்டத்தை அவற்றின் தன்மைக்கேற்ப விளக்கிச் சொல்வது தான் நீதிமன்றங்களின் பணி. சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது எங்கள் வேலை இல்லை,” என்று தெரிவித்த பெஞ்ச், அசாதரணமான வழக்குகளில் சட்டத்தில் இடைவெளி இருக்கும் போது நீதிமன்றம் தலையிடலாம் என்று தெரிவித்தது.
இந்த வழக்கில், ஆதார் அல்லது பான் விவரங்களை சமூக ஊடக கணக்குடன் இணைப்பது மத்திய அரசால் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கியமான பணி என்றும், இது உண்மையான பயனாளிகளின் தரவுகள் தொடர்பான பாரதூர விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதால், நீதிமன்றம் தலையிடக்கூடிய இடைவெளியாக கருத முடியாது என்றும் பெஞ்ச் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்ட கமிஷன் அறிக்கையை ஏற்கனவே பரிசீலித்துக் கொண்டிருப்பதால், இது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த பெஞ்ச், சமூக ஊடக கணக்குடன் ஆதார், பான் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைய மத்திய அரசுக்கு உத்தரவிட கோரும் பொது நலன் நோக்கிலான மனுவை தள்ளுபடி செய்தது.
இருப்பினும், உண்மையான பயனாளிகளின் தரவுகள் அடையாளத்தை மனதில் கொள்ள வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில்முடிவு எடுக்கும் முன் சரியான சமன் தேவை என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. தனது உத்தரவில், மனுவை தாக்கல் செய்த பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய கருத்துபடி 20 சதவீத சமூக ஊடக கணக்குகள் போலியானவை என்பதை சுட்டிக்காட்டியது.
"20 சதவீத போலி கணக்குகளை கண்டறிய, உண்மையான பயனாளிகளின் அனைத்துத் தரவுகளும் வெளிநாடுகளுக்கு செல்லும். எனவே, இந்த இணைப்பை நீதிமன்றம் உத்தரவிட்டால், உண்மையான பயனாளிகளின் தரவுகளும் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உண்டாகும்,” என பெஞ்ச் தெரிவித்தது.
சமூக ஊடகத்தில் யார் வேண்டுமானாலும், நீதிபதிகள் உள்ளிட்ட யார் பெயரில் வேண்டுமானாலும் போலி கணக்குகளை உண்டாக்கி, சர்சைக்குரிய தகவல்களை பரப்பலாம் என்பதால் இது தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என உபாத்யாய தனது மனுவில் கூறியிருந்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்