மன அழுத்தம், பாதியில் நின்ற பள்ளிப் படிப்பு: விடா முயற்சியால் ரூ.1800 கோடி சொத்தை உருவாக்கிய ‘நாஸ்டி கால்’
9 வயதில் எலுமிச்சை பானம் விற்றுக் கொண்டு, குப்பைத் தொட்டியில் கிடைத்தவற்றை சாப்பிட்டு கஷ்டப்பட்ட சிறுமி, இன்று ரூ.1,800 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு உரிமையாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புவதற்கு கடினமான இந்தக் காரியத்தை தனது முயற்சியின் மூலம் நிஜமாக்கி இருக்கிறார் சோபியா அமோருசோ.
வெற்றி தானாக வந்து கதவைத் தட்டும் என முயற்சிகள் எதுவும் செய்யாமல், ஓய்வெடுப்பவர்கள் கடைசி வரை காத்திருக்க மட்டும் தான் முடியும். எப்போதுமே வெற்றி அவர்கள் வசமாகாது. மாறாக யார் தடைகளைத் தாண்டி போராடத் தயாராகிறார்களோ அவர்களுக்கு வெற்றி மாலை போட்டு வரவேற்கும். நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. எப்போதும் உழைத்துக் கொண்டே இருந்தால் தான் வெற்றி நம் வசமாகும்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சோபியா அமோருசோ (Sophia Amoruso). தனது ஒன்பது வயதில் உயிர் வாழ, உணவுக்காக அவர் பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், தனது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் மூலம், இன்று அவர் அமெரிக்காவில் சுயதொழில் செய்து சாதித்துக் காட்டிய பணக்காரர்களில் ஒருவராகி இருக்கிறார். தற்போது அவரது ’நாஸ்டி கால்’ (Nasty Gal) பிராண்டானது உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
பரிதாபமான குழந்தைப்பருவம்
கலிபோர்னியாவின் சான் டியாகோவில் கடந்த 1984ம் ஆண்டு பிறந்தவர் சோபியா. பள்ளிப் பருவத்திலேயே மனச்சோர்வு, கவனம் பற்றாக்குறை மற்றும் ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு என பல்வேறு பிரச்சினைகளில் சிக்கினார். இதனால் அவர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. அந்த சமயத்தில் அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் வேலையையும் இழந்ததால், குடும்பத்திலும் நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவானது. ஒருகட்டத்தில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
இதனால் வருமானத்திற்காக சிறுவயதிலேயே அவர் ஏதாவது வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தனது ஒன்பதாவது வயதில் அவர் எலுமிச்சை பானம் விற்கும் கடை ஒன்றைத் திறந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வேலை என மாறிய சோபியா, தனது 22வது வயதை அடைந்த போது, கிட்டத்தட்ட பத்து வெவ்வேறு தொழில்களில் அனுபவம் பெற்றவராய் இருந்தார். அந்த வயதில் கல்லூரி ஒன்றின் பாதுகாவலர் பணியிலும் அவர் இருந்தார்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் அவர் சில கசப்பான அனுபவங்களையும் பெற வேண்டி இருந்தது. இளம்பெண்ணாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார் அவர். மேற்கு கடற்கரையில் குப்பைகளைப் பொறுக்கிப் போடும் வேலை செய்தவராக வேலை பார்த்தபடி, சில திருட்டு சம்பவங்களிலும் அவர் ஈடுபட்டார்.
அப்படியாக 2003ம் ஆண்டு திருட்டு ஒன்றில் ஈடுபட்டபோது, போலீசிடம் சிக்கினார். பின்னர் அபராதம் கட்டியதால் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் மனம் மாறிய சோபியா, இனி திருடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறி, சான் பிரான்சிஸ்கோவைச் சென்றடைந்தார். அங்கு ஒரு சமூகக் கல்லூரியில் சேர்ந்து தனது படிப்பைத் தொடர முயற்சித்தார்.
தொழில் நுணுக்கம்:
அந்த நேரத்தில்தான் அவர் ஒரு ஈபே கடையைத் திறந்தார். 1975 ஆம் ஆண்டு வெளியான பெட்டி டேவிஸின் ஆல்பத்தால் கவரப்பட்டு தனது ஈபே கடைக்கு நாஸ்டி கால் விண்டேஜ் எனப் பெயரிட்டார்.
அந்தக் கடைக்குத் தேவையான ஆடைகளை மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் இடங்களில் வாங்கினார். பின்னர் அவற்றை அதிக லாபம் வைத்து விற்பனை செய்தார்.
உதாரணத்திற்கு எட்டு டாலருக்கு வாங்கிய ஒரு ஜாக்கெட்டை அவர் ஆயிரம் டாலருக்கு விற்றார். இந்திய மதிப்பில் சொல்வதென்றால், ரூ.515க்கு வாங்கிய அந்த ஜாக்கெட்டை அவர் ரூ.64 ஆயிரத்து விற்பனை செய்தார்.
சோபியா ஆடை பொருட்களுக்காக தொண்டு கடைகளை சோதனை செய்வார், பின்னர் அந்த ஆடைகளை அதிக விலைக்கு விற்கிறார். அவர் Chan 8 (ரூ.515) க்கு வாங்கிய ஒரு சேனல் ஜாக்கெட் $1,000 (ரூ .64,395) க்கு விற்கப்பட்டது. சோபியா தான் கலந்துகொண்ட ஒரு புகைப்படம் எடுத்தல் வகுப்புகளிலிருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி, பாணி, புகைப்படம், தலைப்பு மற்றும் தயாரிப்புகளை தானாகவே அனுப்புவார்.
தான் கலந்து கொண்ட புகைப்பட வகுப்புகளில் பெற்ற அறிவைக் கொண்டு, தான் விற்கும் ஆடைகளை அவரே விதவிதமாக புகைப்படம் எடுத்தார். பின்னர் அவற்றிற்கு சரியான பேர் வைப்பது, ஆர்டர் செய்யப்பட்ட ஆடைகளை பத்திரமாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளையும் அவர் ஒருவராக மேற்கொண்டார்.
சோபியாவின் தீவிர உழைப்பால், நாஸ்டி காலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது தனித்துவமான இளம் பெண்களுக்கான விண்டேஜ் ஆடைகள் அதிகம் விற்பனையானது. சோபியா தனது பேஷன் பிராண்டைப் பற்றி மேலும் விளம்பரப்படுத்த, ஆரம்பத்தில் மைஸ்பேஸையும், பின்னர் ஃபேஸ்புக்கையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
ஆனால் அப்போதும் அவருக்கு ஒரு இடையூறு ஏற்பட்டது. எல்லாம் லாபமாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், ஈபேயில் சோபியா தனது சொந்த வலைதளத்தை விளம்பரப் படுத்த அதிகம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டில் சிக்கினார். இதனால் அவரது ஈபே சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த திடீர் பின்னடைவால், அவரது ஐந்து வருட கடின உழைப்பும் குப்பைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டது.
ஆனாலும் சோபியா மனம் தளரவில்லை. ஈபே புறக்கணித்ததால், தானே ஒரு சொந்தக் கடையை ஆரம்பிக்க அவர் முடிவு செய்தார். அதற்கான வேலைகளையும் அவர் முடுக்கி விட்டார். சில ஊழியர்களைக் கொண்டு, லாஸ் ஏஞ்சல்ஸில் தனது சொந்த சில்லறை விற்பனையை அவர் துவக்கினார்.
முன்மாதிரி தொழிலதிபர்:
ஏற்கனவே தான் பெற்றிருந்த நல்ல பெயரை முன்னிருத்தி, முதலீட்டாளர்கள் பலரை அவர் அணுகினார். இதனால், நாஸ்டி காலுக்கான பங்குகளில் 49 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 315.2 கோடி) நிதி திரட்டப்பட்டது. அதனைப் பயன்படுத்தி அவர் தொழிலை மென்மேலும் விரிவுப் படுத்தினார்.
2008ம் ஆண்டு 2,23,000 டாலராக இருந்த அவரது வருமானம், 2011ம் ஆண்டு 23 மில்லியன் டாலராக உயர்ந்தது. தனது தொழில் உயர்வுக்கு தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக அவர் பயன்படுத்திக் கொண்டார். அதனாலேயே அவரை டெக்னாலஜியின் சிண்ட்ரெல்லா என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2012ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பணக்கார சுயதொழில் புரியும் பெண்களின் பட்டியலில் அவரது பெயரும் இடம் பிடித்தது. அப்போது அவரது சொத்தின் மதிப்பு 280 மில்லியன் டாலராக உயர்ந்திருந்தது. இந்திய மதிப்பில் அது ரூ.1,801.6 கோடி ஆகும்.
தனது தொழிலில் பெற்ற வெற்றியையும் தாண்டி, சமூகத்தில் பெண் தொழில் முனைவோருக்கான நல்ல முன்மாதிரியாக திகழ்ந்தார் சோபியா. பெண்கள் சுயதொழிலில் சாதிக்க முடியாது என்ற பிம்பத்தை தன் வெற்றியின் மூலம் அவர் உடைத்துப் போட்டார். ஆடைகள் சில்லறை விற்பனையில் அவர் பெற்ற வெற்றி, நவீன பெண்ணியத்திற்கு ஜோதியாக ஒளியைத் தந்தது.
வியாபாரத்தில் பிற்போக்குத்தனமான வரையறைகளை அழிக்க முடிவு செய்தார் சோபியா. அதனால் உறுதியான, தங்களுக்கென தொழிலில் லட்சியம் கொண்டிருந்த இளம் பெண்களை அவர் ஊக்குவித்தார்.
சோபியாவின் வெற்றிப் பயணம் நெட்பிளிக்ஸில் கேர்ள் பாஸ் என்ற பெயரில் தொடராக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஆனால் முதல் சீசனோடு அத்தொடர் நிறுத்தப்பட்டது. அவரின் வாழ்க்கை கேர்ள் பாஸ் என்ற பெயரில் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளது. இன்றைக்கு உயிரோடு இருக்கும் பெண் தொழிலதிபர்களில், அழகான, கவர்ச்சியான ஒருவராக சோபியாவும் ஒருவர் ஆவார்.
தொழிலைத் தாண்டி அவர் 2017ம் ஆண்டு ஊடகத்துறையிலும் கால் பதித்தார். கேர்ள் பாஸ் மீடியா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். இவைகளைத் தாண்டி சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமாக்களிலும் சோபியா நடித்துள்ளார். ஆனால், அவை அனைத்திலும் தனது சொந்தக் கதாபாத்திரமாகவே அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் பட்டியல்:
கடற்கரையில் தேவையற்றதை பொறுக்கும் தொழிலாளியாக இருந்து, இன்று உலகமே மரியாதை செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார் சோபியா. ஃபோர்ப்ஸ் 30 க்கு கீழ் 30 பட்டியலிலும் அவரது பெயர் இடம் பிடித்துள்ளது.
சோபியாவின் கற்றுக் கொள்ளும் ஆர்வமே, வாழ்க்கைப் பற்றிய அச்சத்தை புறந்தள்ளி, இன்று அவரை வெற்றியாளர் ஆக்கியுள்ளது. விடாமுயற்சி மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை எப்படிப்பட்ட அடிமட்ட நிலையில் இருந்தும், மக்கள் ஆச்சர்யமாக பார்க்கும் இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சோபியா.