35 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்று 10 கோடி ரூபாய் வணிகம் செய்யும் டிசைனர்!
இவர் வடிவமைத்துத் தயாரிக்கும் ஸ்கார்ஃப் மற்றும் ஸ்டோல்கள் உள்ளூர் மற்றும் அமெரிக்கா, கனடா, ஸ்விசர்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளிலும் பிரபலமாகியுள்ளது.
உத்திர பிரதேசத்தின் சிறிய நகரமான புலந்த்ஷகர் பகுதியில் வளர்ந்தவர் ரச்னா பாவா. ஃபேஷன் மீது இவருக்கு ஆர்வம் அதிகம். குறைந்த விலையில் துணிகளை வாங்கி இவரே டிசைன் செய்து உள்ளூர் டெய்லரிகளிடம் கொடுத்து தைத்து வாங்கிக்கொள்வார். விரைவில் இவர் அணியும் ஆடைகள் மக்கள் கவனத்தை ஈர்த்தது. இவரது ஸ்டைலை பாராட்டத் தொடங்கினார்கள்.
பேஷன் வணிகத்தில் பெரியளவில் சாதிக்கவேண்டும் என்கிற இவரது கனவு இங்குதான் தொடங்கியது.
ரச்னா தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (NIFT) CAD படித்தார். 90’களில் டெல்லியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் சேர்ந்தார்.
நுணுக்கங்களைக் கற்றறிந்தார்
அந்த சமயத்தில் ரச்னா; ஆரம்ப சம்பளத் தொகையாக 4,500 ரூபாய் கேட்டார். அந்த ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதி ரச்னாவிற்கு சம்பளமாக 4,000 ரூபாய் கொடுப்பதாகவும் அவரது பணி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
”நான் பணியை விரைவாகக் கற்றுக்கொண்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். விரைவிலேயே நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவு குறித்த நுணுக்கங்களையும் கற்றறிந்தேன். எனக்கென பிரத்யேகமாக அறை ஒதுக்கப்பட்டது. ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்றோம். என்னுடைய முதலாளியால் ஸ்டாலுக்கான டிசைனை செய்யமுடியாமல் போனது. நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். சிறந்த வடிவமைப்பிற்காக எங்களுக்கு விருது கிடைத்தது. அப்போதிருந்த ஜவுளித் துறை அமைச்சரின் கைகளால் அந்த விருதினை பெற்றுக்கொள்ளுமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். அது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமாக அமைந்தது,” என்றார்.
நான்கு முதல் ஐந்தாண்டுகளில் பணி மாற்றம் குறித்து தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். ஸ்கார்ஃப் மற்றும் ஸ்டோல்கள் சார்ந்த சிறு நிறுவனம் ஒன்றிற்கு பணி மாறினார். விரைவிலேயே சுயமாக வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது.
இவ்வாறு உருவானதுதான் ’அனயா கலெக்ஷன்ஸ்’. ரச்னா தனது சேமிப்பில் இருந்து 35,000 முதலீடு செய்தார். ஸ்கார்ஃப், ஸ்டோல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தினார். துணிகளை வாங்கி கைவினைஞர்களைக் கொண்டு தனது வடிவமைப்பை எம்பிராய்டரி மற்றும் இதர கலைநுணுக்கங்களுடன் மேலும் அழகுபடுத்தினார்.
”அந்த சமயத்தில் குடும்ப நண்பராக இருந்த என்னுடைய கணவர், எனக்குத் தேவையான ஆதரவை உள்ளூரில் வழங்கினார். அவரது மாருதி ஜென் வாகனத்தில் ஆர்டர் பெற சென்று திரும்பியதால் அதுவே என்னுடைய அலுவலகமாக மாறியது. என்னுடைய அறையின் படுக்கையில் இருந்த பெட்டி போன்ற அமைப்பை துணிகளை சேமிக்கப் பயன்படுத்திக்கொண்டேன்,” என்று நினைவுகூர்ந்தார்.
சந்தையைக் கைப்பற்றினார்
விரைவில் ஆர்டர்கள் வரத் தொடங்கியது. ரச்னா 2004-ம் ஆண்டு டெல்லியில் அனயா என்கிற பெயரில் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வெகு விரைவிலேயே ஹெரிடேஜ், ஈஸ்ட் இந்தியா கம்பெனி போன்ற மிகப்பெரிய பொட்டிக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினார்.
பட்டு மற்றும் பாஷ்மினா கொண்டு ஸ்கார்ஃப் தயாரிக்கப்பட்டது. இவை அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானவை. சந்தையில் தனித்துவமாக காட்சியளிக்கவேண்டும் என்பதற்காக நான் அவற்றை மணிகள், இறகுகள், லேஸ் போன்ற பொருட்களைக் கொண்டு அழகுப்படுத்தினேன்,” என்று விவரித்தார். ஒவ்வொன்றும் 80 டாலர் முதல் 400 டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு ரச்னா டிஃபென்ஸ் காலனியில் பேஸ்மெண்ட் பகுதியில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தனது பணியிடமாக்கிக்கொண்டார். பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்யத் தொடங்கினார். பரிந்துரைகள் வாயிலாக அவரது வட்டம் விரிவடைந்தது.
குவாலியர் அரசு குடும்பத்தைச் சேர்ந்த திருமதி விஜய ராஜே சிந்தியாவிற்கு பிரத்யேகமாக ஸ்கார்ஃப் வடிவமைத்துக்கொடுத்ததை ரச்னா நினைவுகூர்ந்தார். விரைவில் வணிகம் வளர்ச்சியடைந்தது. வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். அலுவலக அறை விரிவடைந்தது. அவரது குழுவில் தற்போது சுமார் 100 பேர் இணைந்துள்ளனர்.
அனயா கலெக்ஷன்ஸ் இன்று கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமல்லாது யூகே, ஐரோப்பா, ஜப்பான், கொரியா, ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளிலும் செயல்படுகிறது. நூறு சதவீதம் ஏற்றுமதி சார்ந்த டிசைன் ஸ்டுடியோ உடன் செயல்படும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் மிகப்பெரிய பிராண்டுகளுக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கும் விற்பனை செய்கிறது.
ரச்னாவின் கணவரும் அவருடன் பணிபுரிந்து வணிகத்தின் மார்கெட்டிங் நடவடிக்கைகளைக் கையாள்கிறார்.
”என்னுடைய பயணத்தில் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளேன். என்னுடைய இளைய மகன் பிறந்து 12 நாட்களே ஆன நிலையில் ஒரு கண்காட்சிக்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையையும் பணி வாழ்க்கையையும் சமன்படுத்துவது எளிதாக இருக்கவில்லை. எப்போதும் எனக்கு ஆதரவளித்து வரும் என்னுடைய குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
35,000 ரூபாயில் தொடங்கப்பட்ட அனயா இன்று 10 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ளது. ரச்னா தொடர்ந்து வணிக வளர்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
”பெரிய டிசைனர் ஆகவேண்டும் என்பதே என்னுடைய கனவு. என்னுடைய திறனை நான் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. என்னுடைய குழந்தைகள் வளர்ந்ததும் டெல்லியில் ஒரு சில்லறை வர்த்தகக் கடை திறக்கவும், சொந்தமாக நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா