கூகுளில் வேலை; கர்நாடக-ராக் இசைக்குழு: இரண்டிலும் அசத்தும் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்!
பெங்களுரூவின் பெரிய க்ளப் ஒன்றில், ஆயிரம் பேர், தியாகராஜரின் கர்நாடக கீர்த்தனையான மனவ்யாலகின்சாரா பாடிக் கொண்டிருப்பதை காட்சிப்படுத்தி பாருங்கள்!
கச்சேரி நடத்துபவர்களோடு சேர்ந்து பாடுவது மட்டுமல்லாமல், இன்னுமொருமுறை எனக் கேட்டு அவர்களை மறுபடியும் பாடச் செய்கிறார்கள். இரண்டரை மணி நேரம் நடக்கும் கச்சேரி முழுவதுமேயே இதைப் போலவே மற்ற பாடல்களையும் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு பாடச் சொல்கிறார்கள் பார்வையாளர்கள்.
இசைக்குழுவின் பெயர் - அகம். வகை - கர்நாட்க ப்ரொக்ரசிவ் ராக். ஆல்பம் - எ ட்ரீம் டு ரிமெம்பர் (A Dream to Remember). பாடகர்கள் - ஒரு தொழில்நுட்ப நிபுணர்களின் குழு; அவர்களில் பெரும்பாலானோர் பிட்ஸ் பிலானியில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள்.
கடந்த எட்டு வருடங்களாக தங்களுடைய தனித்தன்மையாலும், சுத்த கர்நாடக இசைக் கோர்ப்பாலும், சுயாதீன இசைத்துறையில் பரவலாக பேசப்படுபவர்கள். இவர்களுடைய புகழ் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது.
ஹரிஷை பிடிப்பதற்கே எனக்கு மூன்று மாதங்கள் ஆனது...
அகத்தின் முதன்மை பாடகர் சிவராமகிருஷ்ணனுடன் ஒரு உரையாடல். நான் பிறந்த ஊரில் இருந்து கிடைத்த சில உதவிகள். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சமீபத்தில் லண்டன் என டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிலையில், ம்யூசிக் டூர் சென்றிருக்கும் பேண்ட். கூகுளில் மொபைல் டிரான்ஸ்ப்ஃபர்மேஷன் - இண்டியாவின் தலைமை பதவியில் பரபரப்பாக இருக்கும் ஹரிஷ், இதையெல்லாம் கடந்து - நான் ஹரிஷை சந்திக்கும் போது, அவர் எவ்வளவு ஆர்ப்பாட்டமில்லாதவர் என்பதை உணர்கிறேன்.
அடக்கமானவர் மட்டுமல்ல, வார்த்தைகளை விழுங்கி பேசாதவரும் கூட.
“இசைக்காக நான் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பேன்”, நான் இசையையும், வேலையையும் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்,” எனும் அறிக்கைகள் எல்லாம் இல்லை. தான் செய்வது குறித்து தனக்கு குழப்பங்கள் இருப்பதாகவும், ஆனால், கலை அதன் வடிவில் இருந்து விரிந்து நகரக் கூடியது என்பதனால் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
“எனக்கு தெரிந்த இசை கர்நாடக இசை மட்டுமே. ஐந்து வயதிலேயே தொடங்கியது. ஆனால், கர்நாடக ப்ரொக்ரசிவ் ராக் எனும் வகை தற்செயலாக வந்தது தான். என்னுடைய குழுவில் இருப்பவர்களில் நிறைய பேர் எனக்கு ஜூனியர்ஸ். நாங்கள் ஒன்று கூடிய போது, எங்களுடைய இசையை ஆர்க்கெஸ்ட்ரா முறையில் எப்படி கொண்டு வர முடியும் என யோசித்தோம். இசைக்கருவிகளையும், குரல்களையும் வைத்து நிறைய பரிசோதித்தோம். அவற்றில் சில வேலை செய்தன, எட்டு வருடங்கள் கழித்து இதோ இங்கே நிற்கிறோம்,” என விவரிக்கிறார்.
அவர்களுடைய முதல் லைவ் கச்சேரி நடந்தது, பெங்களூருவின் இந்திராநகரில். பங்கேற்றது, உறவினர்களும் நண்பர்களுமாக இருப்பத்தைந்து பேர். அப்போதிலிருந்து, இளைஞர்களை தங்களுடைய தனித்துவமான இசைக்கு ஈர்த்தெடுத்திருக்கும் அகம், ஒரு நீண்ட பாதையை கடந்து வந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுத்த கர்நாடக இசைக் கோர்ப்பில் இருக்கும் ஒரு பாடலை உங்களோடு சேர்ந்து பாடுவதை பார்க்க எப்படி இருக்கும்? எனக் கேட்ட போது...
“பல்வேறு காரணங்களுக்காக, அது உணர்வுப்பூர்வமாக இருக்கும். நிறைய இளைஞர்கள், கர்நாடக இசையை, அதன் வடிவத்தின் காரணமாக கேட்க மாட்டார்கள். அந்த வடிவம் தான் கர்நாடக இசையை கொன்று விட்டது என்றும் கூட சொல்லலாம். யூகிக்கக் கூடிய வகையில், மேடையில் மூன்று பேர், ஒரு ஏற்பாடோடு உட்கார்ந்திருப்பார்கள். பார்வையாளர்களும் வழக்கம் போலவே, ஹ்ரீ சங்கதிக்களையே எதிர்பார்த்து இருப்பார்கள். இசையை ஒரு வடிவத்திற்குள் அடைப்பதில் இருக்கும் பிரச்சினை இது தான். அகத்தை பொறுத்தவரை எங்களுக்கு கலை பிடிக்கும், ஆனால், அந்த வடிவத்தை பிடிக்காது. அவர்கள் இணைந்து பாடுவது என்பது, ஒரு மேற்தட்டு சூழலில் சில நம்பிக்கைகளாலும், கருத்துக்களாலும், அர்த்தப்பாடுகளாலும் உண்டாகியிருக்கும் அடைப்புகளை உடைக்கச் செய்வது. நாங்கள் அர்த்தப்பாடுகளை தான் உடைத்தோம். கலையை உடைக்கவில்லை,” என்கிறார் ஹரிஷ்.
எல்லா கலைக்கும் விமர்சனங்கள் வருவது போலவே, அகம் ‘கர்நாடக இசையை பப்களுக்கு கொண்டு செல்கிறது’ என நிறைய விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இந்த பாரம்பரிய வல்லுன பார்வை குறித்த தன் கருத்தை சுதந்திரமாகவே வைக்கிறார் ஹரிஷ்.
“அது பாரம்பரிய/வல்லுன கருத்து என்று சொல்லவே முடியாது. மரபே ஒரு கட்டுக்கதை என்று தான் நான் நம்புகிறேன். ஒரு வழியில் சில விஷயங்கள் செய்த போது, மற்றவர்களுக்கு அதை செய்வது எளிதாக இருந்தது. இந்த நிலவரத்தை மாற்றுவது எல்லாம் மக்கள் சிந்திக்கச் செய்யும் என நினைவு கொள்ளுங்கள். இசையை பப்புக்கு எடுத்துச் செல்லாதே என்று சொல்பவர்களில் பாதி பேர் பப்புக்கு சென்றிருக்க மாட்டார்கள் அல்லது அந்தச் சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். கச்சேரி நடக்கும் சபைகளில் ஒலியியலும் உணவும் மோசமாக இருக்கும். மக்கள் இப்படி யோசிப்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது,” என்கிறார்.
ஃப்யூஷன் வகை இசைக்கும் இது பொருந்திப் போகும் என்கிறார் ஹரிஷ்.
“நீங்கள் சரியான முறையில் செய்து, சரியான முயற்சியை கொடுக்கும் போது, ஃப்யூஷன் உண்மையில் நல்ல யோசனை தான். ஆனால், தயாரிப்பும் திட்டமிடலும், நம்பிக்கையும் இல்லாமல் வெறும் முயற்சியாகவே ஃப்யூஷன் பார்க்கப்படுகிறது,” என அது குறித்து சொல்கிறார்.
உரையாடல் அவருடைய கூகுள் வேலை பக்கம் திரும்புகிறது. தன்னுடைய வேலை வாழ்க்கையையும், இசை வாழ்க்கையையும் விவரிக்க ‘சமாளிப்பு’ எனும் வார்த்தையை பயன்படுத்துவதையே அவர் வெறுக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
“நான் ஒரே நேரத்தில் நிறைய வேலைகளை செய்கிறேன் என எல்லாரும் சொல்வது அவர்களுடைய பெருந்தன்மையை தான் காட்டுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதை நான் வெறுக்கிறேன். நான் ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் தான் செய்வேன். நான் வேலை செய்யும் போது வேலை மட்டும் தான் செய்வேன். இசையில் இருக்கும் போது, இசையில் மட்டும் தான் இருப்பேன். பத்து வருடங்கள் அடோப் நிறுவனத்தில், என்னுடைய ஆர்வத்தை கவனித்து எனக்கு ஆதரவாக இருந்து என்னை என் விருப்பத்திற்கு இருக்க அனுமதித்த பலரோடு வேலை செய்தேன். எனக்கு வேலை கொடுத்தவர்கள், என் குடும்பம், என்னைச் சுற்றி இருக்கும் மக்கள் ஆகியோருக்கு தான் முழு பாராட்டுக்களும்,” என்கிறார் அவர்.
தன்னுடைய தனிப்பட்ட வருவாய் தேவைகளுக்காக இசையில் இருக்கவில்லை, மாறாக, தன்னுடைய தொழில் வாழ்க்கை தான் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது என்று அவர் சொல்வது நடைமுறைக்கேற்றதாக இருக்கிறது.
மக்களுடைய குறிக்கோள்களின் ஆதாரப் புள்ளியாக இருப்பதே அவர்களுடைய பேஷன் தான் எனும் கருத்து குறித்து வெளிப்படையாக பேசும் அவர்,
“நான் என்னுடைய இசை குறித்தோ, வேலை குறித்தோ பேஷனேட்டாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சொல்லப்போனால், எனக்கு பேஷன் என்றால் என்னவென்றே தெரியாது, எனக்கு போதுமான அளவு பணம் இருந்தால், என்னுடைய பேஷன் வாகனங்களில் எதாவது செய்வதாகவே இருக்கும். என்னால் தினமும் இசையை எழுதவோ உருவாக்கவோ முடியாது, சலிப்பாக இருக்கும். என்னால் எல்லா நாட்களும் வடிவமைப்பும் செய்ய முடியாது - நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையை செய்வேன். உண்மையில் எனக்கொரு பேஷன் இருக்கிறது என்றால், அது பணம் சம்பாதிப்பது தான்,” என்கிறார்.
இப்போதைக்கு, ஹரிஷும் சரி அகமும் இசை நகர்த்தி செல்லும் பாதையிலேயே போவதாக இருக்கிறார்கள். அடுத்த மாதம் ஐரோப்பாவில் நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. ட்ரீம் டு ரிமெம்பர் ஆல்பத்தில் இரண்டு பாடல்களுக்கான இசையமைப்பு இன்னும் பாக்கியிருக்கிறது.
ஒரு மணி நேர உரையாடல் எனக்கு புரிய வைத்தது ஒரே விஷயத்தை தான். மாற்றம் ஒன்றே மாறாதது. மேலும், இசை மாறும் போது கனவுகளும் மனங்களும் மாறும்!
ஆங்கிலக் கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்னேஹா