'CSK பவுலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா கேப்டன் தோனி’ - சூசக பேச்சுக்குப் பின்னுள்ள விளக்கம் என்ன?
லக்னோ அணியுடனான வெற்றிக்கு பிறகு கேப்டன் தோனி சூசகமாக ஒரு கருத்தை சொல்லி இருந்தார். அவர் சொல்லியது என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
அண்மையில் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனி சூசகமாக ஒரு கருத்தை சொல்லி இருந்தார் தோனி. அவர் சொல்லியது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
அணியிடம் தோனி சொன்னது என்ன?
கிட்டத்தட்ட மூன்று சீசனுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் களம் கண்டது. இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்து தோனி அல்லது சென்னை அணி நிர்வாகத்தின் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதனால் இந்தப் போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் மைதானம் வந்திருந்தனர். இந்தப் போக்கு இந்த சீசன் முழுவதும் தொடரும் எனத் தெரிகிறது.
அப்படி வந்திருந்தவர்களுக்கு இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு விருந்து வைத்தார் தோனி. இரண்டாவது இன்னிங்ஸில் சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்கள் மொயின் அலி மற்றும் மிட்செல் சான்ட்னர் என இருவரும் மிடில் ஓவரில் ஆதிக்கம் செலுத்த வெற்றி பெற்றது. வெற்றிக்கு பிறகு தோனி தெரிவித்தது..
“அருமையான ஹை-ஸ்கோரிங் ஆட்டமாக இது அமைந்தது. விக்கெட் எப்படி இருக்கும் என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தோம். நான் ஸ்லோவாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், ரன் எடுக்கும் வகையிலான விக்கெட்டாகதான் இது இருந்தது. இது எனக்கே சர்ப்ரைஸ் தான். அடுத்தடுத்த ஆட்டங்களில் இது எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் பொறுத்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.
எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சை நாங்கள் சற்று மேம்படுத்த வேண்டியுள்ளது. கள சூழலுக்கு ஏற்ப பந்து வீச வேண்டும். எதிரணி பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை கவனிக்க வேண்டும். அதே போல,
‘அறவே நோ-பால் அல்லது எக்ஸ்ட்ரா வைடு வீசக்கூடாது. அப்படி இல்லையெனில் ஒருகட்டத்தில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டும். இது இரண்டாவது எச்சரிக்கை. அதன் பின்னர், நான் வெளியேறுவேன்,” என தோனி பேசி இருந்தார்.
தோனி அவ்வாறு பேசியது, அவர் சிஎஸ்கே அணி பவுலர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை என்றும் கடுமையான கோபத்தில் தோனி அப்படி வார்ன் செய்தார் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. ஆனால், உண்மையில் தோனி சூசகமாக சொல்லியது என்ன என்று விரிவாகப் பார்ப்போம்.
தோனி ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் உள்ள நடத்தை விதியை தான் இப்படிச் சொல்லி உள்ளார். ஏனெனில், சென்னை அணி குஜராத் அணிக்கு எதிராக 12 மற்றும் லக்னோ அணிக்கு எதிராக 18 ரன்களை உதிரிகளாக வழங்கியிருந்தது. துஷார் தேஷ்பாண்டே, தீபக் சஹார் மற்றும் ஹங்கர்கேகர் ஆகியோர் சென்னை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இந்த இரண்டு போட்டிகளில் செயல்பட்டுள்ளனர்.
விதி என்ன சொல்கிறது?
பந்து வீசும் அணியானது இன்னிங்ஸின் 20-வது ஓவரை (கடைசி ஓவர்) நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பான 85 நிமிடங்களுக்குள் வீசத் தொடங்க வேண்டும். ஆட்டம் தொடங்கிய நேரத்தில் இருந்து இது கணக்கு செய்யப்படும். அப்படி இல்லையென்றால் 30 யார்டுக்கு வெளியே 5 ஃபீல்டர்களுக்கு பதிலாக 4 பேரை மட்டுமே நிறுத்த வேண்டும். இதனால் இறுதி நேரத்தில் பவுண்டரிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இது தவிர ஒரு சீசனில் முதல் முறையாக ஒரு அணி ஸ்லோ ஓவர் ரேட்டில் சிக்கினால் அந்த அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- அதே சீசனில் இரண்டாவது முறை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் ஸ்லோ ஓவர் ரேட்டில் சிக்கினால் அந்த அணியின் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதோடு அணியில் உள்ள 10 வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது ஆட்டக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்படும்.
- மூன்றாவது முறை இதே தவறை மீண்டும் செய்தால் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதோடு, ஒரு போட்டியில் அவருக்கு தடை விதிக்கப்படும். மற்ற வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது 50% அபராதம் விதிக்கப்படும்.
இதைத்தான் தனது ஸ்டைலில் தோனி சொல்லியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், சென்னை அணி அதிகளவில் எக்ஸ்ட்ரா வீசுவாதனால் இன்னிங்ஸ் நேரம் கூடுகிறது. வரும் போட்டிகளில் நிச்சயம் இந்தத் தவறை சென்னை தவிர்க்கவேண்டும் என்பதையும், அப்படி தொடர்ந்தால் ஒரு போட்டியில் தான் கேப்டனாக இருக்கமுடியாமல் போகும் என்பதைத்தான் அப்படி எச்சரிக்கை போல் தெரிவித்துள்ளார் நம்ம தல.
எம்.எஸ்.தோனியின் இந்த எச்சரிக்கையை பந்து வீச்சாளர்களும், மற்ற வீரர்களும் புரிந்து கொண்டு அடுத்தடுத்த மேட்ச்சில் சரியான நேரத்திற்குள் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அடுத்த சிஎஸ்கே போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் சிசண்டா மகலாவின் வரவு அணியின் வேகப்பந்து வீச்சில் வலு சேர்க்கும்.
கோபத்தில் கொந்தளித்த ‘மிஸ்டர் கூல்’ - தோனி பற்றி ரகசியம் பகிர்ந்த முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர்!
Edited by Induja Raghunathan