1 கிளினிக்குடன் தொடங்கி இன்று 9 மாநிலங்கள்; 32 நகரங்கள்; 50 கிளைகளாக விரிவடைந்துள்ள நீரிழிவு மருத்துவமனை!
டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் வி.மோகன் உடன் ஃபேஸ்புக் லைவ் மூலம் யுவர்ஸ்டோரி உரையாடியது. இதில் டாக்டர் மோகன் தனது தொழில்முனைவுப் பயணம் குறித்தும் நீரிழிவு நோய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவருடனான உரையாடலின் தொகுப்பு இதோ:
யுவர்ஸ்டோரி தமிழ்: மருத்துவர், தொழில்முனைவர் என பன்முகத்தன்மை கொண்டவர் நீங்கள். உங்களது இளமைக்கால நினைவலைகளையும் தொழில்முனைவுப் பயணம் குறித்தும் விரிவாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
டாக்டர் மோகன்: பள்ளி நாட்களில் மருத்துவர் ஆகவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. இலக்கியம் படித்து பேராசிரியர் அல்லது எழுத்தாளர் ஆகவேண்டும் என்பதே என் சிறுவயது கனவாக இருந்தது. என் அப்பா டாக்டர். விஸ்வநாத். இவர் இந்தியாவின் முதல் நீரிழிவு நோய் நிபுணர். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் இந்தியாவின் முதல் நீரிழிவு கிளினிக் ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அவர் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை தொடங்க திட்டமிட்டதால் என்னையும் மருத்துவத் துறையில் செயல்பட ஊக்குவித்தார். எனக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்ததால் ஆய்வுக் கட்டுரை எழுத அனுமதித்தால் மருத்துவம் படிக்கிறேன் என்றேன். என்னுடைய விருப்பத்தை ஏற்று சம்மதித்தார்.
1971ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்தேன். 1972ம் ஆண்டு முதல் அதாவது என் 18ம் வயதில் இருந்தே அப்பாவின் மருத்துவமனை செயல்பாடுகளில் என்னை இணைத்துக் கொண்டேன். மருத்துவம் படித்துக்கொண்டே அப்பாவுடன் நீரிழிவு தொடர்பான ரெக்கார்ட்ஸ், ஆய்வு கட்டுரை போன்றவற்றை எழுதினேன்.
வடசென்னையில் விஜயா நர்சிங் ஹோம் என்கிற பெயரில் எங்கள் மருத்துவமனை செயல்பட்டது. நீரிழிவு மருத்துவமனை என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க பெயர் மாற்றம் செய்ய யோசனை கூறினேன். என் பெயர் மோகன் விஸ்வநாதன். என் அப்பாவின் பெயர் மூப்பல் விஸ்வநாதன். எனவே 1972-73 ஆம் ஆண்டுகளில் எம்.வி நீரிழிவு மருத்துவமனை என்று பெயர் மாற்றினோம்.
1991ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட இருபதாண்டுகள் அவருடன் பணியாற்றினேன். என் மனைவி கண் மருத்துவ நிபுணர். 1981’ களிலேயே அவர் நீரிழிவு நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் கண் சிறப்பு மருத்துவ நிபுணர் ஆனார். அவரும் எங்களுடன் இணைந்துகொண்டார்.
1991-ம் ஆண்டு என் மனைவியுடன் இணைந்து தென் சென்னையில் Dr. Mohan's Diabetes Specialities Centre மருத்துவமனை தொடங்கினேன். என்னுடைய முப்பதாண்டு பயணத்தின் தொடக்கப்புள்ளி இதுதான். இன்று 9 மாநிலங்களில் 32 நகரங்களில் 50 கிளைகளுடன் நாங்கள் விரிவடைந்து சிறப்பாக செயல்படுகிறோம்.
யுவர்ஸ்டோரி தமிழ்: மருத்துவரான நீங்கள் தொழில்முனைவராக மாறியது உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்று கருதுகிறீர்களா?
டாக்டர் மோகன்: மருத்துவர், தொழில்முனைவர் மட்டுமல்ல நான் ஒரு ஆராய்ச்சியாளர். அப்பாவுடன் செயல்படத் தொடங்கிய நாட்களில் இருந்தே ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ராயபுரத்தில் இருந்த கிளினிக்கை டெவலப் செய்தபோதும் கிளைகள் எதுவும் தொடங்கவில்லை.
தென் சென்னையில் மருத்துவமனை தொடங்கியபோது முதல் கிளையை அண்ணாநகரில் தொடங்கினோம். அங்கு வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து மற்ற மாநிலத்தில் முயற்சி செய்ய நினைத்தோம். ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது.
நிலையான செயல்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி முறையாக பயிற்சி அளித்தோமானால் மென்மேலும் விரிவடைய வாய்ப்பிருப்பது தெரிந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு தனியார் பங்கு முதலீடு கிடைத்ததும் வளர்ச்சி மேலும் துரிதமானது.
இவைதவிர இலவச மருத்துவமனை, மொபைல் மருத்துவமனை போன்றவையும் செயல்படுகின்றன. ஸ்ரீ சத்ய சாய் நிறுவனத்துடன் இணைந்து முகாம்கள் நடத்துகிறோம். எங்கள் மருத்துவச் சேவை மென்மேலும் விரிவடைந்து பல பயனர்களை சென்றடைய இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். எனவே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கினோம்.
தரமான மருத்துவச் சேவையை மக்களுக்கு வழங்க மருத்துவர்கள், செவிலியர்கள், டயடீஷியன் போன்றோருக்கு இங்கு பயிற்சியளிக்கிறோம்.
யுவர்ஸ்டோரி தமிழ்: இந்தியாவில் இன்று 7.7 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. இந்தச் சூழலை நீங்கள் முன்பே கணித்தீர்களா? நீரிழிவு நோய் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை உங்கள் அனுபவத்தின் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
டாக்டர் மோகன்: நீரிழிவு என்பது வாழ்க்கைமுறை சார்ந்த நோய் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாழ்க்கைமுறை முற்றிலும் இப்போது மாறுபட்டது.
முன்பு மக்கள் பயணம் செய்ய பேருந்தைப் பயன்படுத்துவார்கள். சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்வார்கள். இந்தச் சூழல் தற்போது மாறிவிட்டது.
1971-களிலேயே சென்னை, டெல்லி போன்ற மாநகரங்களில் 20 வயதிற்கு மேற்பட்டோரில் 2% பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. அதேசமயம் கிராமங்களில் 1 சதவீதமாக இருந்தது.
சென்னை போன்ற நகரங்களைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்ததைப் பார்க்கமுடிந்தது. இன்று கிட்டத்தட்ட 25% பேருக்கு நீரிழிபு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கிராமங்களில் 1 சதவீதமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வருகிறது.
1991ம் ஆண்டுகளில் உலகமயமாக்கல் எனும் புதிய உலகிற்குள் இந்தியா நுழைந்தது இதற்கு ஒரு முக்கியக் காரணம் எனலாம். அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறை வந்தது. மக்கள் நல்ல வருவாய் ஈட்டத் தொடங்கினார்கள். இத்துடன் உணவகங்கள், துரித உணவகங்கள் போன்றவை அறிமுகமாகி போக்குவரத்து வசதியும் மேம்படத் தொடங்கியது.
நடைபயிற்சி இல்லாமல் போனது. உணவுப் பழக்கம் மாறியது. இரவு நேரப் பணிவாழ்க்கை முறையான தூக்கம் இல்லாமல் போனது. இவை அனைத்துமே நீரிழிவு நோய் ஏற்படுத்துவதற்கான காரணிகள்.
"தற்போது இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.7 கோடியாக உள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் இது 13 கோடிக்கும் மேலாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியூட்டுகிறது.”
நீரிழிவு நோய் ஏற்பட்டால் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், கொழுப்பு போன்ற மற்ற நோய் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. சில வகை புற்றுநோயுடன் நீரிழிவு நோய்க்கு தொடர்பு இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாங்கள் அந்த நாட்களில் நீரிழிவு நோய் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி பூதாகரமான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று கணிக்கவில்லை. நாங்கள் இந்தப் பிரிவில் புதுமையாகவும் முன்னோடியாகவும் செயல்பட்டோம். அதுமட்டுமின்றி மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். மக்கள் இதை வெகுவாகப் பாராட்டினார்கள்.
கொல்கத்தாவிலிருந்து அதிக நோயாளிகள் ஆலோசனைக்கு வந்ததால் அங்கு தொடங்கினோம். தற்போது அங்கு இரண்டு கிளைகள் உள்ளன. ஹைதராபாத்தில் ஏழு கிளைகள் உள்ளன. பெங்களூருவில் ஐந்து கிளைகள் உள்ளன. தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளன.
யுவர்ஸ்டோரி தமிழ்: வாழ்க்கை முறை மாற்றம் தொடர்பாக உங்களைப் போன்ற நிபுணர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் இதன் தீவிரத்தன்மையை உணரவில்லை. இந்தச் சூழலில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்வது தவிர வேறு வழி ஏதேனும் இருக்கிறதா?
டாக்டர் மோகன்: நீரிழிவு நோய் வராமல் தடுப்பது சாத்தியம். இதில் முதல் நிலை என்பது நார்மல். பரிசோதனை எடுத்தால் முடிவுகள் நார்மல் என்றே வரும். இரண்டாவது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை (pre-diabetic). அதாவது நோய் பாதிப்பு இல்லை. ஆனால் வருவதற்கு வாய்ப்புண்டு என்பது இதன் பொருள். இந்த நிலையில் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வந்தால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் நார்மல் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூன்றாவது நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிக்கல்கள் ஏதும் இல்லாத நிலை. இந்த நிலையில் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
நான்காம் நிலையில் நோய் பாதிப்பு முற்றி உடல் உறுப்புகள் செயலிழந்து போகிறது.
ஒருவருக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் இல்லையென்றால் அவருக்கு நீரிழிவு நோய் இல்லை என சமூக வலைதளங்களில் தவறாக கருத்துக்கள் பரவி வருகின்றன. இது வேதனையளிக்கிறது.
உதாரணத்திற்கு புற்றுநோய் பாதிப்பை எடுத்துக்கொண்டால் ஸ்டேஜ் 4 வந்த பிறகே அறிகுறிகள் தெரியும். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடும். மாறாக வருடாந்திர செக் அப் செய்தால் சின்ன கட்டியாக இருக்கும்போதே கண்டறிந்துவிடலாம். அறுவைச் சிகிச்சையில் கட்டியை நீக்கிவிட்டால் முழுமையாக குணமாகிவிடலாம்.
எனவே ஆண்டிற்கு ஒருமுறை செக் அப் செய்து மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். நோய் பாதிப்பு இருந்தால் மருந்து, வாழ்க்கைமுறை மாற்றம், நடைபயிற்சி, உணவில் அதிகளவில் காய்கறிகள் சேர்த்துக்கொள்வது, எடை குறைப்பு போன்ற நடவடிக்கைகள் நிச்சயம் பலனளிக்கும்.
அதேபோல் மருத்துவர் மீது நம்பிக்கை வைத்து ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றவேண்டும்.
நீரிழிவு நோய் பாதித்த பின்னரும் முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு சேர்த்தால் 90 வயதைத் தாண்டியும் வாழமுடியும் என்பதை சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது.
யுவர்ஸ்டோரி தமிழ்: நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவும் முக்கிய மருந்தான இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட நூறாவது ஆண்டு இது. உயிர்காக்கும் இந்த மருந்து குறித்து பதிர்ந்துகொள்ளுங்கள்?
டாக்டர் மோகன்: 1920ம் ஆண்டு ஃப்ரெட்ரிக் பேண்டிங் என்கிற அதிக பயிற்சி பெறாத சர்ஜன் ஒருவரது கனவில் ஒரு காட்சி தோன்றியது. கணையத்தில் இருக்கும் இரு பகுதிகளில் ஒன்றிற்கு போகும் குழாயில் முடிச்சு போட்டுவிட்டால் சர்க்கரையின் அளவைக் குறைக்கமுடியும் என்று அந்த கனவில் வந்தது.
உடனே எழுந்து அவசரமாக குறிப்பெடுத்துக்கொள்கிறார். இவரது கருத்தை யாரும் ஏற்கவில்லை. விடுமுறைக்கு செல்லவிருந்த மெக்லியாட் என்கிற பேராசிரியர் தனது ஆய்வகத்தையும் உதவிக்கு பெஸ்ட் என்கிற மாணவரையும் பேண்டிங் ஆய்வு செய்வதற்காக ஒப்படைத்துள்ளார்.
நாயைக் கொண்டு பரிசோதனை செய்ததில் சர்க்கரையின் அளவு குறைந்தது 1921-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆனால் இந்த மருந்து சுத்திகரிக்கப்படாமல் இருந்தது. காலிப் என்கிற கெமிஸ்ட் இதை சுத்திகரித்தார்.
பேண்டிங், மெக்லியாட், பெஸ்ட், காலிப் நால்வருக்கும் இன்சுலின் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு கிடைத்தது.
அந்த சமயத்தில் நீரிழ்வு பாதித்ததால் மூன்று மாதங்களுக்கு மேல் உயிர் பிழைக்கமுடியாத நிலை இருந்தது. ஆனால் இன்சுலின் கொடுக்க ஆரம்பித்ததும் உயிரிழக்கும் நிலையில் இருப்பவர்கள் உயிர் பிழைத்தனர்.
மருத்துவத் துறை வரலாற்றில் இன்சுலின் கண்டுபிடிப்பு எப்போதும் முதலிடம் வகிக்கும்.
யுவர்ஸ்டோரி தமிழ்: ’நேஷனல் மெமோரியல் ஃபார் கோவிட் விக்டிம்ஸ்’ வலைதளம் தொடர்பான உங்களது பங்களிப்பது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
டாக்டர் மோகன்: நினைவுச்சின்னம் என்பது இந்தியாவில் புதிது. கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஜித் சௌத்ரி என்கிற மருத்துவர் ஆன்லைன் கோவிட் நினைவுச்சின்னம் ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உறவினர் இறந்தவரின் புகைப்படம், இறந்தவரைப் பற்றிய சிறு குறிப்பு, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்யலாம். நூறாண்டுகள் கடந்த பின்னரும் கொரோனா தொற்று குறித்தும் இறந்தவரைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இது முற்றிலும் இலவசம்.
இந்த வலைதளம் பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துரைத்து என்னால் இயன்றவகையில் பங்களித்து வருகிறேன். www.nationalcovidmemorial.com என்கிற வலைதளத்தில் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
யுவர்ஸ்டோரி தமிழ்: ஹெல்த்கேர் துறையின் வருங்காலம் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?
டாக்டர் மோகன்: Making Excellence a habit – The secret to building a world-class healthcare system in India – இந்தப் புத்தகம் என்னுடைய சுயசரிதை. பென்குயின் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் இந்த வாரத்தில் புத்தகக் கடைகளில் கிடைக்கும்.
நீரிழிவு மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், கல்வி நிறுவனம், இலவச மருத்துவமனை, மொபைல் மருத்துவமனை என எனது முழுமையான தொழில் பயணம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
சாதனை படைக்க விரும்புவோருக்கு என்னுடைய பயணம் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
சிதையாத கவனம், கடின உழைப்பு, தோல்வியில் இருந்து மீண்டெழும் திறன், ஆர்வம், தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, மன உறுதி போன்றவை இருந்தால் சாதனை படைக்க எல்லையே இல்லை.