'Digital India' தினம்: தொழில் முனைவோர்களின் பாராட்டுகளும், எதிர்ப்பார்ப்பும்...
2015 ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்டது முதல் டிஜிட்டல் இந்தியா பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது. எனினும் இந்தியா டிஜிட்டல் வல்லரசாக வேண்டும் என்றால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் இந்தியா தினத்தை முன்னிட்டு,மோடி 2.0 அரசிடம் தொழில்முனைவோர் எதிர்ப்பார்ப்பது என்ன?
இணைய பயன்பாடு என்பது மிகப்பெரிய ஆடம்பரங்களில் ஒன்றாக கருதப்பட்ட மாறுபட்ட காலத்தில் நான் வளர்ந்தேன். 18 வயதில் கூட, வேறு வேறு நகரங்களில் உள்ளவர்களுக்கு தொலைபேசி செய்வது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது.
தொலைதூரத்தில் வசித்த உறவினருக்கு முக்கிய அழைப்பை மேற்கொள்ள உள்ளூர் எஸ்.டி.டீ பூத்களில் காத்திருந்த அனுபவம் எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது. இதயம் படபடக்க, மீட்டரில் கட்டணத்தை பார்த்தபடி வேகமாக பேசியது நினைவில் வருகிறதா? ஏனெனில் அழைப்புகளுக்கான கட்டணம் அதிகமாக இருந்தது.
ஆனால் இன்று நிலைமை வேறு. இப்போது நான் டிஜிட்டல் இந்தியாவாசி. பல்வேறு ஸ்டார்ட் அப்களைப்போல நான், இணையத்தில் என் வர்த்தகத்தை நிறுவியிருக்கிறேன். டிஜிட்டல் இந்தியாவுக்கு முந்திய தேசத்தில் இது சாத்தியம் இல்லை. தொழில்நுட்ப மேம்பாடு, ஸ்மார்ட்போன் பயன்பாடு போன்றவற்றால், எதிர்காலத்தில் டிஜிட்டல் இந்தியா நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இந்தியா சேவை மேடை (பிளாட்பார்ம்) சார்ந்த பொருளாதாரத்தை உண்டாக்க வேண்டும் எனில், டிஜிட்டல் யுத்தத்தை, குறிப்பாக 5ஜி யுத்தத்தை நாம் சர்வதேச அளவில் வென்றாக வேண்டும். இந்த திசையில் அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை கவனிக்கிறேன். தற்போதைய அரசு செயல்பாடு தொடர்பான பேச்சுகளில் சத்தம் அதிகம் இருந்தாலும், டிஜிட்டல் இந்தியா வீச்சு மற்றும் தாக்கத்தில் அரசு அதிகம் செய்திருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த ஆண்டு துவக்கத்தில் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அரசு ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் மற்றும் 5 லட்சம் வை-ஃபை ஹாட் ஸ்பாட்களை உருவாக்கும் எனக் கூறினார். அரசு, 5ஜி சேவைக்கான முன்னோட்ட சோதனைகள் குறித்தும் தீவிரமாக உள்ளது.
2015 ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்டது முதல் டிஜிட்டல் இந்தியா பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது. எனினும் இந்தியா டிஜிட்டல் வல்லரசாக வேண்டும் என்றால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் இந்தியா தினத்தை முன்னிட்டு, டிஜிட்டல் இந்தியாவின் முழு வீச்சை பயன்படுத்திக்கொள்ள மோடி 2.0 அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தொழில்நுட்பத் துறை முக்கிய புள்ளிகளிடம் கேட்டறிந்தோம்:
“தற்போதுள்ள நிலையை கேள்விக்குள்ளாகும், சரியான ஸ்டார்ட் அப் மனநிலை கொண்ட அரசை பெற்றிருக்கிறோம். 21ம் நூற்றாண்டில் இந்தியா முன்னிலை வகிப்பதற்கான மைல்கல்லாக டிஜிட்டல் இந்தியா திட்டம் அமையும்,” – விஜய் சேகர் சர்மா, பேடிஎம் நிறுவனர், சி.இ.ஓ
“விளிம்பு நிலை சமூகங்களுக்கான வசதிகளை அரசு அதிகமாக்க வேண்டும். ஸ்மார்ட்போன் மூலம் பெண்கள் டிஜிட்டலுக்கு மாறுவது முதல், பெண்கள் சார்ந்த சேவைகளை உருவாக்குவது வரை பல உதாரணங்களைக் கூறலாம். ஓட்டுனர் உரிமம் அல்லது பேன் கார்டு பெற, அரசு ஆன்லைன் சேவையை இ-காமர்ஸ் நிறுவனங்கள் இடைமுகம் போல எளிமையானதாக்க வேண்டும்.’ – மேகின் மகேஸ்வரி, உதயம் நிறுவனர், ஃபிளிப்கார்ட் முன்னாள் முதன்மை மக்கள் அதிகாரி.
“முதலில் நுகர்வோர் மீது கவனம் வேண்டும்- எல்லோரும் டிஜிட்டலுக்கு மாறியுள்ளனர். அரசு அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் டிஜிட்டல் சேவை வழங்க தூண்டும் ஊக்கத்தை அளிக்க வேண்டும். இது ஸ்டார்ட் அப்களின் புதிய தொழில்நுட்பத்தை ஏற்க வைத்து, அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகிய இரண்டும் ஸ்டார்ட் அப்களுக்கு ஈர்ப்புடையதாக மாற்றும்,”- சஞ்சய் நாத், மேனேஜிங் பாட்னர், ப்ளூம் வென்சர்ஸ்.
“டிஜிட்டல் மேடைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இ-காமர்ஸ் அல்லது ஆன்லைன் பேமெண்ட்களில் மக்களில் ஒரு பகுதியினர் இன்னமும் டிஜிட்டல் மேடைகளை நம்புவதில்லை,”– ஸ்ரே குமார், ஆத்விக் ஃபுட்ஸ் இணை நிறுவனர்.
“டிஜிட்டல் இந்தியா கனவை, மொழி வரம்பை கடக்காமல் சாதிக்க முடியாது. அனைத்து மாநில அரசு இணையதளங்களும், ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் தகவல்கள் கொண்டிருக்க வேண்டும்.”- அஜய் தத்தா, XgenPlus நிறுவனர்
“அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றும் போதே டிஜிட்டல் இந்தியா வெற்றி பெறும். தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் உள்ளூர் சார்ந்ததாக, தனித்தன்மையானதாக இருக்க வேண்டும். உள்ளூர் தொழில்முனைவோர்களால் தீர்க்கப்பட வேண்டும். வர்த்தகம் துவங்குவதற்கான செலவு மிகவும் குறைவு என்பதால் இது உள்ளூர் தொழில்முனைவோர்களுக்காக, உள்ளூர் தொழில்முனைவோர்களால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான மகத்தான வாயாப்பாகும்,”- வீரேந்திர குப்தா, டெய்லி ஹண்ட், நிறுவனர், சி.இ.ஒ
“மக்கள் இடைத்தரகர்களால் சுரண்டப்படாத அமைப்புகளை உருவாக்கவும்.”- மீத்தா மல்கோத்ரா, ஏஞ்சல் முதலீட்டாளர்
“2022 ல் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் எனில், விவசாயம் மற்றும் சிறு தொழில் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்,”- அலோக் பட்னியா, டாக்ஸ் மந்தரா நிறுவனர்.
“முதலில், அனைத்து அரசு செயல்பாடுகளும், வங்கிக் கடன் சேவை போன்ற நிதி செயல்முறைகள் அனைத்தும், டிஜிட்டல்மயமாக வேண்டும்,”– வினய் சிங்கால், விட்டிஃபீட் இணை நிறுவனர், சி.இ.ஒ
"மக்கள் தொகையில் கீழ் பகுதியில் உள்ளவர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார பிரமிட்டின் கீழ் பகுதியில் இருப்பவர்களின் ஸ்டார்ட் அப் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண்கள், தலித்கள், சிறுபானமியினர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமூகத்தினரை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தேவை,”- பிலால் ஜைடி, OurDemocracy.in இணை நிறுவனர்
"வாக்களிப்பது உள்ளிட்ட தேர்தல் செயல்முறைகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான வழியை கண்டறிய வேண்டும். இதை நிச்சயம் செய்ய முடியும்” – சாகர் தர்யானி, Wow! Momo நிறுவனர், சி.இ.ஒ
“டிஜிட்டல் இந்தியா வெற்றி பெற, அரசு அதிவேக இணைய சேவைகளை வழங்க வேண்டும். டிஜிட்டல் உலகிற்கான மாற்றம் வேகமாக நிகழ வேண்டும்.- டாக்டர். மேகா பட், SciKnowTech நிறுவனர்
"டிஜிட்டல் கல்வியறிவு முக்கியமானது,”- ஜெர்மி வேடே, தொழில்முனைவோர்.
"அச்சத்தை போக்கி, பாதுகாப்பை அதிகரிக்க பள்ளிகளில் டிஜிட்டல் உலகை பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” – அரவிந்த் சுரேஷ்
’ டிஜிட்டல் இந்தியாவை முதலில் (உள்ளூர்) மொழிகளுக்காக உருவாக்க வேண்டும். ஆங்கிலத்திற்காக அல்ல.- அரவிந்த் பனி, ரெவரி லாம்ங்குவேஜ் டெக்னாலஜிஸ்.
"விவசாயம், கைவினை கலைகள் தொகுப்பில் வாங்குபவர், விற்பவர்களை இணைக்க டிஜிட்டல் மீடியாவை பயன்படுத்த வேண்டும். E-NAM திட்டம் எல்லா மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு சந்தைக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்,”- யூகாங் கோயல், துணை பேராசிரியர்
“முதலில், பிராட்பேண்ட் வசதி அதிகரிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மேம்பட்ட வேகம் சாத்தியமாக வேண்டும். காலாவதியான தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல், துடிப்பான நவீன டிஜிட்டல் உள்கட்டமை வசதிகளை பயன்படுத்துவதில் அரசு அமைப்புகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்,” – ரங்கா ஜெகனாத், விற்பனை ஆலோசகர்.
“கிரிப்டோ நுட்பம் தொடர்பான அரசின் எதிர்மறை நிலைப்பாட்டால், பிளாக்செயின் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்ட திணறுகின்றன. இதன் காரணமாக, இந்த ஸ்டார்ட் அப்கள் கிரிப்டோ நட்பு நாடுகளுக்கு சென்று விடுகின்றன,” – அன்சல் தாகூர் , பிளாக்செயின் ஆலோசகர்.
அனைவரையும் உள்ளடக்கிய இணைய வசதி, டிஜிட்டல் கல்வியறிவு, விளிம்பு நிலை மக்களுக்கான வசதிகள் என பல சுவாரஸ்யமான யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்க இலக்கை பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டுள்ளனர். டிஜிட்டல் இந்தியாவுக்கான கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
ஆங்கில கட்டுரையாளர்: ஷர்த்தா ஷர்மா | தமிழில்; சைபர்சிம்மன்