5 உலக எலக்ட்ரானிஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு!
மின்னணு பொருட்களை இந்தியாவில் தயாரிக்கவும் உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் 5 க்ளோபல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் மின்னணு பொருட்களை இந்தியாவில் தயாரிக்கவும் உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஐந்து உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் பிரத்யேக டிஜிட்டல் இந்தியா டவுன்ஹால் நிகழ்வில் மத்திய அமைச்சர் இதைத் தெரிவித்தார். அந்த ஐந்து வணிகங்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் பெரியளவில் செயல்படக்கூடிய எலக்ட்ரானிக் தயாரிப்பாளர்களுக்கான தயாரிப்பு தொடர்புடைய சலுகைகள் (Production Linked Incentive) திட்டத்தின் ஒரு பகுதியாகவே உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் சாம்பியன்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
50,000 கோடி ரூபாய் மதிப்புடைய PLI திட்டத்திற்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
“மொபைல், ஸ்மார்ட்போன், மருத்துவ சாதனங்கள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என எலக்ட்ரானிக்ஸ், நாட்டில் தவிர்க்கமுடியாத அங்கம் வகிக்கிறது. இதனால் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் கவனம் செலுத்தத் தேவையான மனித வளங்களும் தொழில்நுட்பமும் இந்தியாவில் உள்ளது,” என்றார்.
இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை இரண்டு என்கிற அளவில் இருந்து 60-க்கும் அதிகமான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் உலகச் சந்தையில் சிறப்பாக போட்டியிடவேண்டும் என்று அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
“இந்தியா ஏற்கெனவே எலக்ட்ரானிக் சார்ஜர்களை தயாரித்து வருகிறது. சீனாவிற்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. சில இந்திய மொபைல் தயாரிப்பாளர்கள் அமெரிக்காவில் உள்ள AT&T நிறுவனத்திற்கு மொபைல் தயாரிக்கின்றனர். ஆனால் நம் முயற்சிகளை மேலும் விரிவடையச் செய்யவேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
PLT திட்டத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மேலும் இரண்டு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொடர்பான திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். மின்னணு உபகரணங்கள் மற்றும் குறைக்கடத்திகள் (ஸ்பெக்ஸ்) மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தி கிளஸ்டர்கள் (EMC 2.0) ஆகிய இரண்டு திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டால் துணை நிறுவனங்கள் மற்றும் வணிகங்களும் பலனடையும். இந்தத் திட்டங்களின் ஆதரவுடன் உலகளாவிய நிறுவனங்களில் இருந்து ஏற்கெனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.
இத்திட்டங்கள் முதலீடுகளை ஈர்க்கும் என்றும் 2025-ம் ஆண்டில் மொபைல் போன் மற்றும் பாகங்கள் உற்பத்தி கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊக்குவிக்கப்படும் என்றும் 5 லட்ச நேரடி வேலை வாய்ப்புகளையும் 15 லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டம், உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் போன்றவை ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரம் தொடர்பான முக்கிய முன்னெடுப்புகளாகவே கருதப்படுகிறது. தற்சமயம் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர்கள் சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதால் இந்தியாவில் செயல்படுவது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். மொபைல் தயாரிப்பில் இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. எனவே எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புடன் தொடர்புடைய உலகளவிலான விநியோகச் சங்கிலியில் முக்கியப் பங்கு வகிக்கத் தேவையான தயாரிப்பு மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள இது சரியான வாய்ப்பாக அமையும்.
2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளிடையே இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி 41,220 கோடி ரூபாயில் இருந்து 61,908 கோடியாக அதிகரித்துள்ளது.