பசுமை பட்டாசு என்றால் என்ன? பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் விதித்துள்ள நெறிமுறைகள் என்ன?
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாசு அளவைக் கட்டுப்படுத்த பட்டாசுகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. இதற்கிடையில், சில மாநிலங்கள் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்துள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாசு அளவைக் கட்டுப்படுத்த பட்டாசுகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. இதற்கிடையில், சில மாநிலங்கள் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்துள்ளன.
பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்க காரணம் என்ன? பசுமை பட்டாசு என்றால் என்ன?, தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்...
பசுமை பட்டாசு என்றால் என்ன?
பட்டாசுகளை வெடிக்கும் போது வெளியாகும் புகையான மாசு நிறைந்திருப்பதால் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடுகிறது. ஆனால், பசுமை பட்டாசைப் பொறுத்தவரை குறைவான அளவிலான வாயுக்களே வெளியாகின்றன.
பசுமை பட்டாசுகள் சல்பர் நைட்ரேட்டுகள், ஆர்சனிக், மெக்னீசியம், சோடியம், ஈயம் மற்றும் பேரியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாதவையாகவும், காற்று மாசை அதிகரிக்கக்கூடிய மாற்று மூலப்பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்பட்டிருக்கும்.
பாரம்பரிய பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகள் 30 சதவீதம் அளவிற்கு காற்று மாசைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. பட்டாசுகள் சுமார் 160 டெசிபல் ஒலியை வெளியிடுவதாகவும், அதேசமயம் பச்சை பட்டாசுகள் 110-125 டெசிபல் ஒலி அளவைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 85 டெசிபலுக்கு மேல் சத்தம் கேட்கும் தன்மையை பாதிக்கும்.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
பட்டாசுகளில் உள்ள நச்சு ரசாயனங்கள் உடலுக்கு மிகவும் தீங்குவிளைவிக்கக்கூடியவை ஆகும்.
வெள்ளை நிற ஒளியை உமிழும் பட்டாசுகளில் அலுமினியம், மெக்னீசியம், டைட்டானியம் போன்ற நச்சுகள் உள்ளன. ஆரஞ்சு நிறத்தில் கார்பன் மற்றும் இரும்பும், மஞ்சள் நிறத்தில் சோடியமும் உள்ளது. அதேபோல் நீலம் மற்றும் சிவப்பு நிற ஒளியை உமிழும் பட்டாசுகளில் காப்பர் ஸ்ட்ரோண்டியம் கார்பனேட்டுகள் மற்றும் பச்சை நிறத்தில் பேரியம் மோனோகுளோரைடு உப்புகள் அல்லது பேரியம் நைட்ரேட் அல்லது பேரியம் குளோரேட் ஆகியவை உள்ளன.
பட்டாசுகளில் உள்ள ஈயம் நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் தாமிரம் சுவாசக் குழாயின் எரிச்சலைத் தூண்டக்கூடியதாக உள்ளது. இதற்கிடையில், சோடியம் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், மெக்னீசியம் புகை காய்ச்சலுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காட்மியம் இரத்த சோகையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சிறுநீரகத்தையும் சேதப்படுத்துகிறது, அதே சமயம் நைட்ரேட் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நைட்ரஜன் வெளிப்பாடு மூக்கு கண்கள் மற்றும் தோலில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு/ தடையுள்ள மாநிலங்கள்:
டெல்லி: டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் 2023 ஜனவரி 1 ஆம் தேதி வரை சேமிக்கவும், பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப்: அக்டோபர் 24 தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணிநேரத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானா: ஹரியானா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (எச்எஸ்பிசிபி) பசுமை பட்டாசுகள் தவிர அனைத்து வகையான பட்டாசுகளையும் உடனடியாக தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கம்: அக்டோபர் 24ம் தேதி காளி பூஜையின் போது பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளித்துள்ளது.
தமிழகம்: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மக்கள் காலை 6-7 மணி முதல் இரவு 7-8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
- உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.
- உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால் இந்த குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.
- சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 80-ன்படி, பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும், தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ பயன்படுத்துவதோ(வெடிப்பதோ) கூடாது.
- எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது.
- குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வான வெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.
- பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரஙணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
- மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம் மற்றும் வழிபாட்டு தலங்களில் ( ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
- பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.
- பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துக்களை தவிர்க்கவும்.
- கால்நடைகளை அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்பவரை தாக்கி விபத்துக்களை ஏற்படுத்தலாம். ஆதலால், கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக்கூடாது.
- விதிமுறைகளை மீறி அனைத்து பட்டாசுக்கடை, உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்தால் அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால் அல்லது அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்கள் அதிகமாக கூடுகிற பேருந்து நிலையங்கள் மற்றும் கடை வீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகள் விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.
- பட்டாசு பொருள்கள் பேருந்து, இரு சக்கர வாகனம், ரயில் போன்றவற்றில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
- நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை அறிந்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாக கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண் 100 மற்றும் 112 அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது கண்களை சரியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?