கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துபவரா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க...
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சன்மானமும் கிடைக்கிறது. பெரும்பாலும் அது ரிவார்ட் பாயிண்டுகள் அல்லது கிஃப்ட் வவுச்சர்களாகவும் தான் இருக்கும்.
நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருக்கலாம். வட்டி இல்லாமல் சுமார் 50 நாட்கள் வரை பணத்தை பயன்படுத்த கிரெடிட் கார்டு பயன்படுகிறது. அதுவும் அதற்கு சன்மானமும் கிடைக்கிறது.
பெரும்பாலும் அது ரிவார்ட் பாயிண்டுகள் அல்லது கிஃப்ட் வவுச்சர்களாகவும் தான் இருக்கும். குறிப்பிட்ட சில தேவைகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் அதற்கான ரிவார்டுகள் கூடுதலாக கிடைக்கும்.
அதில், ஒன்றுதான் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்தும் நடைமுறை. இதற்கு மற்ற தேவைகளுக்கான பயன்பாடுகளைக் காட்டிலும் கூடுதலாக ரிவார்டுகள் கிடைப்பதாக நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் சொல்கின்றன.
இந்த நிலையில், இப்போது அதற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகள் பழைய நடைமுறையிலிருந்து புதிய முறைக்கு மாறி உள்ளன. இது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கசப்பை கொடுக்கும் வகையில் உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வீட்டு வாடகை செலுத்தினால் அதற்கான தொகையில் 1 சதவீதம் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 20 முதல் அமலுக்கு வந்துள்ளது.
வரும் நவம்பர் 15 முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயனர்கள் வாடகை செலுத்த தங்கள் அட்டையை பயன்படுத்தினால் அதற்கு ரூ.99 ப்ராஸசிங் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி ரிவார்டு புள்ளிகளை அதிகபட்சம் 500 என நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. எஸ் பேங்க் தரப்பில் இது மாதிரியான பரிவர்த்தனைகள் மாதத்திற்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் மட்டுமே பயனர்கள் மேற்கொள்ள அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.
காரணம் என்ன?
கடந்த இரண்டு ஆண்டுகளாக நெட் பேங்கிங் மற்றும் காசோலைக்கு மாற்றாக கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் நடைமுறையை பயனர்களிடத்தில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஃபின்டெக் நிறுவனங்கள் இயங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பயனர்களுக்கு அதிக அளவில் ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் சில கார்டு பயனர்கள் இதை வாடகை செலுத்துவதற்காக இல்லாமல் வேறு வகையில் அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக,
நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை வாடகை பெரும் நபர்களாக காட்டி, அதன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அதனை கட்டுப்படுத்தவே இந்த புதிய நடைமுறையை வங்கிகள் கொண்டு வந்துள்ளதாக வங்கிகளின் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
வாடகைக் கட்டணம் அதிக அளவில் இருக்கும் என்பதால் ரிவார்டு புள்ளிகள் மட்டும் அல்லாது பயனர்களுக்கு கிரெடிட் பயன்பாட்டுக்காக ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும் கட்டணத்திலும் விலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம் பிடித்தாலும் ஆதாயமே!
கார்டு வழங்குநர்கள் தரப்பில் வாடகை செலுத்த கூடுதல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டாலும், அது ஏடிஎம் மூலமாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க வசூலிக்கப்படும். கட்டணத்தை காட்டிலும் குறைவு என நிதித்துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வாடகை வசூலிப்பவர்களை மெர்ச்சென்டுகளாக சேர்த்தால் இந்த கட்டண விவகாரத்தில் பயனர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே போல பெரிய தொகை கொண்ட ஆயுள் காப்பீடு சார்ந்த பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் மெர்ச்சென்ட் மூலம் பயனர்களுக்கு தள்ளுபடி கிடைத்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சாம்சங் அறிமுகப்படுத்திய கிரெடிட் கார்ட் - பயன்கள் என்ன? எப்படிப் பெறுவது?
Edited by Induja Raghunathan