’டைம் 100 நெக்ஸ்ட்’ பட்டியலில் டூட்டி சந்த்!
டைம் பத்திரிகையின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலின் விரிவாக்கமான Time 100 Next பட்டியலில் தடகள வீராங்கனை டூட்டி சந்த் இடம்பெற்றுள்ளார். தடகள வீரர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காக இந்த அங்கீகாரத்தை பெறுகிறார்.
இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை டூட்டி சந்த், டைம் பத்திரிகையின் 100 நெக்ஸ்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வர்த்தகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் வளரும் நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலின் நீட்சியாக இது அமைகிறது.
நடிகர் Awkwafina எழுத்தாளர் சேனல் மில்லர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் Xiuhtezcatl Martinez மற்றும் கெல்சி ஜூலியானா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். டூட்டி, இந்த பட்டியலில் மாற்றத்தை உருவாக்குபவர்கள் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
"டைம் பத்திரிகையின் இந்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. பாலின சமத்துவத்தில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். விளையாட்டுத் துறையில் இளம் பெண்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் மற்றும் பொதுவாக சமூகத்தில் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன்,” என்று டூட்டி சந்த் கூறியுள்ளார்.
தடகளத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அவர் போராடியது, இயற்கையாக அதிக டெஸ்டஸ்ட்ரோன் அளவு கொண்ட மற்ற பெண் வீராங்கனைகளின் பிரச்சனைகளுக்கான அடையாளமாக அமைந்தது. 2014ல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட டூட்டி, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று தன்னைப் போன்றவர்களுக்கான முன்னுதாரணமாக திகழ்ந்தார். தடகள வீரர்களுக்கான உரிமைகளுக்காகவும் அவர் வாதாடி வருகிறார்.
2019ல் அவர், தான் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டிருப்பதை வெளிப்படையாக அறிவித்தார். இந்தியாவின் ஓரினச்சேர்க்கை உறவு குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின் அவர் தனது உறவை வெளி உலகிற்கு அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து எழுத்த விமர்சனங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்.
“அச்சத்தில் வாழ்வதில் களைத்து போய்விட்டேன். என் பெற்றோர்கள் மற்றும் பெரும்பாலான சகோதர, சகோதரிகள் என்னை ஆதரித்தாலும், என் மூத்த சகோதரி இந்த உறவை நான் முறித்துக்கொள்ள வேண்டும் என விரும்பினாள், மேலும், இவ்வாறு செய்யாவிட்டால் எல்லோரிடமும் இதைக்கூறி என் தடகள வாழ்க்கைக்கு முடிவு கட்டுவேன் என்று மிரட்டினார். என்னுடைய தோழி தான் (படிப்பை முடித்த பிறகு தான் அவரது பெயரை வெளியிடுவேன் என்கிறார்) என்னை வெளிப்படையாக பேசுமாறு ஊக்குவித்தார்,” என்று டூட்டி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
”அன்பு இல்லாமால் யாராலும் வாழ முடியாது என்று டூட்டி கூறுகிறார்.
“LGBTQIA+ சமூகத்தினருக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு, நான் ஒரு செயற்பாட்டாளராக விரும்புகிறேன். சமூகம் நம்மை புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக நம் வாழ்க்கையை பாழாக அனுமதிக்க முடியாது,” என்கிறார் அவர்.
தடகளத்திற்குத் திரும்பிய பிறகு அவர் சற்று தடுமாறினாலும், ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றார். 2019ல் உலக பல்கலைக்கழக போட்டியில் 100 மீ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியராக திகழ்ந்தார். 2019ம் ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீரராக அவரை வோக் இந்தியா அறிவித்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கவுதமன் | தமிழில்: சைபர்சிம்மன்