தூங்கினால் 50 ஆயிரம் ரூபாய் பரிசா?
அறிமுகப்படுத்திய ஜப்பான் நிறுவனம்...
நம் அன்றாடம் செய்யும் வேலைக்கு பணம் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும் இரவு சுகமாக தூங்கினால் பணம் பரிசாக வழங்கப் படுகிறது. ஆம், ஊழியர்கள் நாள்தோறும் இரவு 6 மணி நேரம் தூங்கினால் ஜப்பான் நிறுவனம் ஒன்று ரூ. 50000 பரிசுத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குகிறது.
தூங்குவதற்கு ஏன் பரிசு? இதற்கு முக்கியக் காரணம் கைப்பேசி மற்று சமுக வலைத்தளங்கள். ஜப்பானில் பெரும்பாலான மக்கள் இரவு நேரத்தை சமூக வலைத்தளத்தில் செலவிடுவதால் தூங்கும் நேரம் குறைந்து விட்டது. சரியான தூக்கம் இல்லாததால் மறுநாள் அலுவலகத்தில் கவனக் குறைவு மற்று ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது இதற்கு தீர்வு காணும் விதமாக ஊழியர்களை இரவில் சீக்கரம் உறங்க ஊக்குவிக்க இந்த பரிசுத் தொகையை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
ஜப்பான் நாட்டின் தலை நகரமான டோக்யோவில் கிரேஸி இன்டர்நேஷனல் என்னும் நிறுவனம் தான் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது திருமணங்களை நடத்தி வைக்கும் மாட்ரிமொனி நிறுவனம்.
இந்நிறுவனத்தின் ஊழியர்கள 6 மணி நேரம் தூங்குகிறார்களா என்பதை கண்காணிக்க அவர்களின் கைபேசியில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்கின்றனர். ஊழியர்கள் தூங்கும் முன் ஆப்-ஐ ஆன் செய்துவிட வேண்டும், இரவு முழுவதும் ஊழியர்களின் தூக்கத்தை அந்த ஆப் கணக்கிடும். குறிப்பிட்டது போல் 6 மணி நேரம் உறங்கினால் 50 ஆயிரம் ரூபாய் ஊக்கமளிப்பு தொகை வழங்கப்படும். அதை நிறுவனத்தின் கேன்டீனில் உணவு உண்ண பயன் படுத்திக்கொள்ளலாம் அல்லது பணமாகவும் ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இதைக் குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ கசுஹிகோ மோரியாமோ,
“ஒரு நிறுவனத்தின் முக்கியமான சொத்து ஊழியர்கள் தான். அவர்கள் உற்சாகமாக இருந்தால் தான் நிறுவனம் முன்னேறும். ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் இன்று சமூக வலைதளத்தில் மூழ்கி தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்..” என்கிறார்.
இந்த சூழ்நிலையில் மறுநாள் அலுவலகத்தில் வேலை சரியாக நடப்பதில்லை, அதனால் நிறுவனத்தின் உற்பத்தியும் பாதிப்பு அடைகிறது. இதை தடுக்கவும் ஊழியர்களின் உடல்நிலை கருதியும் இத்திட்டத்தை அறிமுகப் படுத்தியதாக தெரிவிக்கிறார் கசுஹிகோ. முறையாக 6 மணி நேரம் தூங்கினால் ஆண்டுக்கு ரூபாய் 50 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்படும்.
தூங்குவதற்கு ஊக்கத்தொகை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் சிறந்த சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, அலுவலகத்தில் மகிழிச்சியான சகலத்தையும் ஊழியர்களின் நலன் கருதி அமல் படுத்தியுள்ளது இந்நிறுவனம்.
ஜப்பானில் சமீப காலமாக வேலைப்பளு காரணத்தால் உடல் நலம் குன்றி பல ஊழியர்கள் இறந்துள்ளனர். அதனால் அந்நாட்டின் நிறுவனங்கள் இது போன்ற சில மாற்றங்களை செய்து வருகிறது.
தகவல் உதவி: தி ஹிந்து | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்