உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஷாப்பிங் செய்ய அருகாமையில் உள்ள கடைகளை பரிந்துரைக்கும் ஆப் ‘ShopsUp’
'ஷாப்ஸ் அப்’ ShopsUp இருப்பிடத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு புதிய ஷாப்பிங் ஆப் அறிமுகமாகி உள்ளது. இது, வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகாமையில் உள்ள பெரிய அல்லது சிறிய வர்த்தகர்களிடையே தங்களுக்குத் தேவையானவற்றை அடையாளம் காண உதவும் செயலி. வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப அவர்கள் அருகாமையில் உள்ள சிறு துணிக்கடைகள், பொடிக்குகள், மற்றும் பிரபல மால்கள், அதிலுள்ள பிராண்ட் கடைகள் பற்றிய விவரங்களை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். வான் ஹுசன், அடிடாஸ், பெப்பே ஜீன்ஸ், ரேமாண்ட், ஆலன் சோலி போன்ற பிரபல ப்ராண்டுகள் கடைகளின் இருப்பிடங்களும் இதில் தெரிந்து கொள்ளமுடியும்.
இன்று பலரும் ஆன்லைன் ஷாப்பிங் நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், தங்களுக்கான இடத்தை, ப்ராண்டை தேர்வுசெய்து ஆடைகள் மற்றும் இதர பேஷன் பொருட்களை வாங்குபவர்கள் பலரும் உள்ளனர். அவர்களுக்கு ஷாப்பிங் அனுபவத்தை சுலபமாக்கவும், தாங்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் உள்ள கடைகள் பற்றிய விவரத்தை விரல் நுணியில் பெறவும் ShopsUp ஆப் உதவும்.
பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த செயலியை உருவாக்கியுள்ள நிறுவனம், தொடக்க விதைநிதியாக பெற்ற 1 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 6.6 கோடி ரூபாய் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஷாப்பிங் இடையே உள்ள இடைவெளியை குறைக்க உதவுகிறது. விஆர்எல் தலைமை இயக்குனர் ஆனந்த் சங்கேஷ்வர் மற்றும் ஹுவாய் டெக்னாலஜீஸ் முன்னாள் தலைவர் யாங் ஷூ ஆகியோர் ShopsUp’ இல் முதலீடு செய்து வழிகாட்டியாக உள்ளனர்.
ShopsUp செயல்பாடுகள் மற்றும் குழு விவரம்
ShopsUp மூலம் வாடிக்கையாளர்கள் தங்களை சுற்றியுள்ள பேஷன், வீட்டுத்தேவை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் சிறந்த கடைகளை கண்டுபிடித்து அதன்மூலம் ரிவார்டுகளையும் பெறமுடியும். தனிப்பட்ட சலுகைகளையும், தள்ளுபடிகளையும் தங்களின் மனம்கவர்ந்த கடைகளில் பெற உதவுகிறது இந்த செயலி. ShopsUp, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கடைகளை, பொருட்களை பரிந்துரைக்கும். ShopsUp’ இன் இணை நிறுவனர் மற்றும் சிஇஒ சுஹாஸ் கோபிநாத், இந்தியாவில் இளம் சிஇஒ’ ஆக அவரது 14 வயதில் அங்கீகரிக்கப்பட்டார். அப்போது அவர் க்ளோபல்ஸ்.இன்க் என்ற நிறுவனத்தை நிறுவினார். இதன் மற்றொரு இணை நிறுவனர் மற்றும் சிஒஒ அன்மோல் விஜ், கோவையை சேர்ந்தவர். இவரும் நிறுவனராக அனுபவம் கொண்டவர், தற்போது இந்த புதிய முயற்சியில் பங்கு வகிக்கிறார்.
“இந்திய வாடிக்கையாளர்கள் தாங்கள் செய்யும் ஷாப்பிங்களுக்கு தகுந்த வெகுமதிகளை எதிர்ப்பார்க்கின்றனர். இந்த வாய்ப்பை கடைகளும், சந்தையாளர்களும் பயன்படுத்தி தங்களின் விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். ShopsUp’இன் தொழில்நுட்பம் மூலம் அனாலிடிக்ஸ் பயன்படுத்தி, பிரபல ப்ராண்டுகள் மற்றும் கடைகளுடன் கைகோர்த்து வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்து நல்ல சலுகைகளையும் வழங்க முடியும்,” என்று சுஹாஷ் கோபிநாத் தெரிவித்தார்.
சரியான ஆஃபர்கள் சரியான நேரத்தில் அளிக்கப்பட்டால் விற்பனை நன்கு அதிகரிக்கும், இது வாடிக்கையாளர் மற்றும் கடைகள் இருவருக்கும் பயனுள்ளதாக அமையும். அதனால் அனாலிடிக்சில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி, நல்ல லாபமுள்ள தீர்வுகளை எங்களின் பார்ட்னர்களுக்கு வழங்க உழைக்கின்றோம் என்றார் மேலும்.
இளம் இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களுடன் வலம்வருகின்றனர். இதனால் ஷாப்பிங் வாய்ப்பை அவர்களுக்கு எளிதில் எட்டிட இந்த செயலி உதவும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். அதோடு ஆம் மூலம் இவர்கள் அளிக்கும் ரிவார்டுகளை கொண்டு இலவச சினிமா டிக்கெட், இலவச டாக்சி ரைட், ஸ்பா கூப்பன் என்று பல பரிசுக் கூப்பன்களை வழங்க உள்ளதால் இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்றும் காத்திருக்கின்றனர்.
இணையதள முகவரி: ShopsUp