300 மடங்கு அதிக இனிப்புச் சுவை கொண்ட மோன்க் பழத்தை உற்பத்தி செய்த ஹிமாச்சல விஞ்ஞானிகள்!
சர்க்கரைக்கு மாற்று என்றாலே செயற்கையான, ரசாயனங்கள் கலந்த இனிப்புப் பொருள்தான் நினைவிற்கு வரும். ஆனால் குறைவான கலோரி கொண்ட அதே சமயம் சர்க்கரையைக் காட்டிலும் 300 மடங்கு அதிக இனிப்பு சுவையுடன்கூடிய இயற்கையான மாற்றுப் பொருள் கிடைத்தால் எப்படி இருக்கும்? உலகிலேயே நீரிழிவின் தலைநகராக விளங்கும் இந்தியாவிற்கு இது உண்மையிலேயே அதிகம் பலனளிக்கக்கூடியதாக இருக்கும்.
முதல் முறையாக விஞ்ஞானிகள் மான்க் பழத்தை இந்திய மண்ணில் வெற்றிகரமாக உற்பத்தி செய்துள்ளனர். சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பழம் சிறியளவில் இருக்கும். பல நூறாண்டுகளுக்கு முன்பு இதைப் பயிரிட்ட துறவிகளை வைத்தே இதற்கு மோன்க் பழம் என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருப்பதுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கும் இயற்கையான குணமும் உள்ளது.
ஹிமாலயன் உயிர் வள தொழில்நுட்ப (IIHBT) விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) விஞ்ஞானிகள் இணைந்து இந்த பழத்தை வணிகரீதியாக சந்தையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சலபிரதேச பாலம்பூரின் CSIR-IHBT இயக்குனர் டாக்டர்.சஞ்சய் குமார் Daily Pioneer உடனான உரையாடலில் குறிப்பிடுகையில்,
”இந்தியாவில் 62.4 மில்லியன் பேர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது அவர்களுக்கு ஒரு அற்புதமான பழமாகும். எங்களது நிலங்களில் வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டுள்ளோம். தற்போது ப்ராசஸ் டெக்னாலஜியிலும் மோன்க் பழத்திலிருந்தும் சாறு எடுத்து தயாரிப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறோம். இந்த பழத்திலிருந்து தயாரிக்கப்படும் ஸ்வீட்னர் விரைவில் சந்தையில் கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
இந்தப் பழம் நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி குறைவான கலோரிகளை எதிர்நோக்கும் உணவு உற்பத்தியாளர்களையும் பெரிதும் கவரும்.
மோன்க் பழத்தை உற்பத்தி செய்ய சரியான விவசாய நுட்பங்கள், பொருத்தமான செடி வகை, அறிவியல் நுட்பங்கள் போன்றவை அவசியம் என்பதால் இது வணிகரீதியாக சீனாவிற்கு வெளியே பயிரிடப்படுவதில்லை என ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.
IHBT மூத்த விஞ்ஞானியான டாக்டர். ப்ரோபிர் குமார் பால் கூறுகையில்,
“இயற்கையான ஸ்வீட்னரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டும் அதேபோல் இங்குள்ள பலவிதமான வேளாண் பருவநிலைகளையும் கருத்தில் கொண்டும் இந்த ஆண்டு துவக்கத்தில் NBPGR-ICAR மூலம் சீனாவில் இருந்து விதைகளை அறிமுகப்படுத்தினோம்,” என்றார்.
தீவிர ஆய்வினை அடுத்து சோதனை நிலத்தில் நல்ல தரத்துடன்கூடிய பழம் அறுவடை செய்யப்பட்டது. தற்சமயம் IHBT-யைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு சிறந்த விவசாய நடைமுறைகளையும் பல்வேறு வகையில் மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
குறைவான கலோரி கொண்ட ஸ்வீட்னர்களுக்கான தேவை உள்ளபோதும் மோன்க் பழம் மிகக்குறைந்த அளவிலேயே சந்தையில் பங்களிக்கிறது. விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். 2026-ம் ஆண்டு உலகளாவிய சந்தையில் மோன்க் பழம் 379.4 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டும் என மதிப்பிடப்படுவதாக டாக்டர். ப்ரோபிர் தெரிவித்தார். இது இனிப்பான வெற்றியாகவே தோன்றுகிறது.
கீட்டோ டயட் பின்பற்றும் இந்தியர்களுக்கு விரைவிலேயே ஆண்டிஆக்சிடெண்ட் அதிகமுள்ள இயற்கையான ஸ்வீட்னர் கிடைக்கலாம்.
கட்டுரை : THINK CHANGE INDIA